புதன், 16 நவம்பர், 2022

கட்டிய புருசனின் எச்சில் சோறு தின்ற கலியுகப் பதிவிரதை!!!

மீனாட்சி, தேவகியைத் தேடிப் போனபோது, சாப்பிட்டுக்கொண்டிருந்த சாதத்தை மீதம் வைத்துவிட்டுத் தள்ளாடியபடி எழுந்து போனான் தேவகியின் கணவன்.


அலுமினியத் தட்டை இழுத்து வைத்து, எச்சில் சோற்றை உண்ண ஆரம்பித்த தேவகி, மீனாட்சியைப் பார்த்துவிட்டு, “வாக்கா சாப்பிடலாம்” என்றாள்.

பதில் பேசாமல் தேவகியின் முகத்தையே உற்றுப் பார்த்தாள் மீனாட்சி.

“என்னக்கா அப்படிப் பார்க்குறே?” 

“இவ்வளவு நாளா உன்னை நான் சரியாவே புரிஞ்சிக்கல.”

“புரியும்படியா சொல்லு.”

“உன் புருஷன்கூட நீ அடிக்கடி சண்டை போடுவே. அதனால, அது மேல உனக்குப் பாசம் இல்லேன்னு நினைச்சேன். ஆனா, பாசம் மட்டுமில்ல ரொம்ப ஆசையும் வெச்சிருக்கேன்னு இப்பத்தான் புரியுது.” -குரலில் குறும்பு துள்ளக் கண் சிமிட்டினாள் மீனாட்சி.

“எதை வெச்சிச் சொல்லுறே?” -விழிகளில் வியப்பு மிளிரக் கேட்டாள் தேவகி.

“இப்பல்லாம் புருஷன் மிச்சம் வெச்ச எச்சில் சோத்தை எவளும் சாப்பிடுறதில்ல. ஆனா, நீ சாப்பிடுறியே, அதை வெச்சுத்தான்.”

“நல்ல கூத்துக்கா. ஆட்டுக் கறி சமைச்சேன். குடிச்சிட்டு வந்து, போடு போடுன்னான். அள்ளி அள்ளிப் போட்டேன். போதையில் பாதி தின்னுட்டு மிச்சம் வெச்சுட்டு எந்திரிச்சிப் போய்ட்டான். கறி விக்கிற விலைக்கு எச்சின்னு பார்த்தா முடியுமா? விதியேன்னு திங்கிறேன். ஆசையாவது தோசையாவது.”

வறட்சியானதொரு சிரிப்பை உதிர்த்தாள் தேவகி.
===========================================================================
இக்கதை, 2015இல் இதே தளத்தில் வெளியானது. ஏற்கனவே வாசித்திருந்தால் பொறுத்தருள்க!