எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 14 பிப்ரவரி, 2024

‘பொதுத் தொண்டு’... புதியவர்களுக்கான பழைய[தரமான... ஹி... ஹி... ஹி!!!] உண்மைக் கதை!

சேலத்தில், ஒரு தனியார் மருத்துவமனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.

வள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனை செல்லும் சாலையில் நுழைந்தபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தை ஈர்த்தது.

“என்ன அது கும்பல்?” -சற்று எட்ட நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டேன்.

“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ பிரச்சினை. கூட்டம் சேரவும் ரெண்டு பேருக்கும் ஆதரவா அவங்க அவங்க ஜாதிக்காரங்க திரண்டுட்டாங்க. காரசார விவாதம் நடக்குது. எந்த நேரத்திலும்  கலவரம் வெடிக்கலாம்” என்றார் அவர்.
நடக்கப்போவதை அறியும் ஆவல் எனக்கும் இருந்தது. நண்பர் ஆபத்தான நிலையில் இருந்ததால் ஸ்கூட்டரை நகர்த்தினேன்.

வாகனத்தின் வேகத்தைக் கூட்டியபோது, எதிரே வந்தவர் என்னைத் தேக்கினார். 

“என்னங்க கும்பல்?”

“அதுவா.....” கொஞ்சம் யோசித்தேன். இவர், ‘முரண்பட்டு நிற்கும் இரு தரப்பில் ஒரு தரப்பைச் சார்ந்தவராக இருந்தால்.....’

“யாரோ ரெண்டு பேர் தண்ணியடிச்சிட்டுத் தகராறு பண்ணிக்கிறாங்க. வேலைவெட்டி இல்லாத கூட்டம் வேடிக்கை பார்க்குது. போய் உங்க வேலையைப் பாருங்க...போங்க.” 

அடுத்தடுத்து, வழி மறித்து வினவிய  இருவருக்கும் இதே  பதிலைச் சொல்லிவிட்டு மருத்துவமனை நோக்கி விரைந்தேன்.

‘ஏதோ நம்மாலான நல்ல காரியம்’

மனம் முழுக்க ஒருவித திருப்தி பரவியது.

                          *   *   *   *   *
***இது 2016ஆம் ஆண்டுப் பதிவு.