பக்கங்கள்

செவ்வாய், 13 அக்டோபர், 2020

பெண்...தற்காப்பு...புத்தி...கத்தி...துப்பாக்கி!!!

"பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ளப் பற்களையும் நகங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது, தவறாமல் கைவசம் ஒரு கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்" என்றார் மகாத்மா காந்தி. 

பெண்கள் கடத்தப்படுவதும் கற்பழிக்கப்படுவதும் அன்றாட நிகழ்வாக ஆகிவிட்ட இந்நாளில், பாதுகாப்பற்ற சூழலில் பணிக்குச் சென்று திரும்பும் பெண்கள் கைத்துப்பாக்கி வைத்துக்கொள்வதுகூட அவசியத் தேவையாகிவிட்டது. இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ இதை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய்தல் வேண்டும்.

இளம் வயதிலிருந்தே கராத்தே போன்ற தற்காப்புக் கலையில் அவர்கள் பயிற்சி பெறுவதும் கட்டாயம் என்று அரசு சட்டம் இயற்றுதல் வேண்டும்.

இக்கட்டான சூழல்களில் துணிவுடன் செயல்படுவதற்கான 'உளவியல்' பயிற்சி அளிப்பதை  நடைமுறைப்படுத்துதல் பெரிதும் பலன் தருவதாக அமையும்.

பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆராய ஒரு குழு அமைத்து, உரிய ஆலோனைகளைப் பெறுவதும் உடனடித் தேவையாகும்.

இது விசயத்தில, மன உறுதியுடன் செயல்படும் 'போர்க்குணம்' பெண்களுக்குத் தேவை என்பதை வலியுறுத்தச் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

இன்றையச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மீள்பதிவாக வெளியிடப்படுகிறது.

கதை:                            சாகசம்

ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக்கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்.

கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது.

அவள் கணவன், சந்தை சந்தைக்கு, கால்நடைகளை வாங்கி விற்கும் ’தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி, எருமை[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்துவருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்கு சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள்.

முதன் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

"எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ள வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழிவிடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  "உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம்.

அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு சுழலவில்லை.

அவளிடமிருந்து அவற்றை விடுவிக்க நினைத்தான். உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது; நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன; விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

அடுத்த நாள், பால் கொண்டுசென்றபோது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்தபோது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தான் சுந்தரம்

அப்புறமும் அந்நிலையே நீடித்தது.
===============================================================