கதை | ஒ.ப.கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை | ஒ.ப.கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 ஜனவரி, 2021

20ஆம் நூற்றாண்டுக் கற்பு!!![புதுமைச் சிறுகதை]

'ஒருவனுக்கு ஒருத்தி' என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!


கதை:                           அவளோடு மட்டும்.....  
வாக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க சார்” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.

“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; வழக்கமான உடற்பயிற்சி. உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார். ஆசையோட என்னைத் தேடி வந்த உங்களைத் திருப்பி அனுப்புறேன். சாரி சார்” -ரொம்பவே வருத்தப்பட்டாள் மாலா.

“ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” -நகர முற்பட்டான் மணிமொழியன்.

“சார் இருங்க. என் ஃபிரண்டு சாலினியை வரச்சொல்லி ஃபோன் பண்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோட மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க.....”

“அடடா... அப்புறம்.....?”

“எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். ஆனா, என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, யாருமே எனக்குப் பெண் தர முன் வரல. பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது சாத்தியமில்லேன்னு புரிஞ்ச போது, ஒரு புரோக்கர் மூலமா விலைமகளான உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளராகவும் ஆனேன்.....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன், “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் கலங்க அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. 

”நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருப்பேன்” என்றாள் திடமான குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நன்றி” என்றான் மணிமொழியன்.
===============================================================


வியாழன், 24 செப்டம்பர், 2020

எதிர்நீச்சல்!...ஒரு பக்கக் கதை

“கவின், உன்     பள்ளித்  தமிழாசிரியரைப் பார்த்தேன். ஆண்டுவிழாவுக்கான பேச்சுப் போட்டிகள் நடக்க இருப்பதாகச் சொன்னார்.  போட்டிகள்ல நீயும் கலந்துக்கிறதானே?” என்று மகனிடம் கேட்டார் துரைசாமி.

“இல்லப்பா.” -சலிப்புடன் சொன்னான் கவின்.

“ஏன் கவின்?”

“பேச்சுப் போட்டி எதிலும் என்னால் ஜெயிக்க முடியறதில்ல; ஆர்வமும் இல்ல.”

“அப்படிச் சொல்லக்கூடாது. வெற்றியோ தோல்வியோ இன்னிக்கே பேர் கொடுத்துடு.”   

தலையசைத்துவிட்டுப் பள்ளிக்குப் புறப்பட்டான் கவின்.

துரைசாமியின் மனைவி சரிதா கேட்டார்: “கவின் ரொம்ப நல்லாப் படிக்கிறான். பேச்சுப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் அவனுக்குப் பிரியம் இல்ல. வேண்டான்னா விட்டுடலாமே. ஏன் கட்டாயப்படுத்துறீங்க?”

“நாட்டில் மக்கள் தொகை பெருகிட்டே போகுது. எல்லார்த்திலேயும் போட்டி அதிகமாயிட்டு வருது. பிரியப்படுற வேலை கிடக்கும்கிறது நிச்சயமில்ல. பிடிக்காத வேலையைச் செய்தாத்தான் பிழைக்க முடியும்கிற நிலை வரலாம். அதுக்கான மனப் பக்குவத்தை இப்போதிருந்தே வளர்த்துக்கிறது நல்லதில்லையா?” என்றார் துரைசாமி.

கணவன் சொல்வது சரியே எனப்பட்டது சரிதாவுக்கு.

===============================================================


வெள்ளி, 22 மே, 2020

அச்சச்சோ...பாவம் அம்மாக்கள்!

வயசுப் பொண்ணுகளைப் பொருத்தவரை, அப்போதிருந்து இப்போதுவரை  அப்பாக்களுக்கு அவர்கள் ‘செல்லம்’தான். அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்துத் தப்பான வழியில் சென்றுவிடாமல் தடுக்கும் மெய்க்காப்பாளர்கள் அம்மாக்கள். இதைப் புரிந்துகொள்ளாத அப்பாக்களிடம் அவர்கள்[அம்மாக்கள்] அவ்வப்போது  ‘வாங்கிக் கட்டிக்கொள்வது’ம் உண்டு!

கீழ்க்காணும் கதை நம் அனுதாபத்திற்குரிய அம்மாக்களுக்குச் சமர்ப்பணம்!

இது, ‘குங்குமம்’[17.08.2015] வார இதழில் வெளியானது. ‘நானே நான்’ எழுதியது.

2015ஆம் ஆண்டில் மட்டும் குங்குமத்தில் 05 கதைகள் எழுதினேன். 2016இல் ஒன்று.

எச்சரிக்கை! கைவசம் ‘தரமான சரக்கு’ இல்லாதபோதெல்லாம் இலவசமாய் இவை உங்களுக்குப் வழங்கப்படும்!
=======================================================================

சனி, 21 செப்டம்பர், 2019

'ஆண் புத்தி அரைப்புத்தி’...[பொழுதுபோக்கு]

“பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” -சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” -கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு.”

“அவன் கிடக்கிறான் குடிகாரப்பய. அர்த்தமில்லாம ஏதாவது உளறுவான். நீ போ. அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றான் புவியரசு.

முகத்தில் லேசான வருத்தம் பரவ, தொங்கிய முகத்துடன் அங்கிருந்து அகன்றாள் தாமரை.

அதற்கப்புறம் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு நேரவில்லை. புருசனைப் பிரிந்து அவள் தாய்வீடு சென்றுவிட்டதாகச் சற்று முன்னர் கோயிலுக்குப் போகும்போது சவீதா சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்குறீங்களாம்” என்று தாமரை சொன்னதும் மனதில் உறைத்தது. இதைச் சவீதா இருக்கும்போது சொல்லாமல் அவள் அவனைத் தனியே சந்தித்துச் சொன்னதன் உள்ளர்த்தமும் புரிந்தது.

“பெண் புத்தி பின்புத்தின்னு சொல்வாங்க ஆண்மகனான என் புத்தி அரைப்புத்தி. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டேன். நான் மடையன்... முட்டாள்” என்று முணுமுணுத்தவாறு தலைதலையாய் அடித்துக்கொண்டான் புவியரசு.
=======================================================================================

சனி, 10 ஆகஸ்ட், 2019

அவள் 'அந்த'த் தொழிலுக்குப் புதுசு![கதை பழசு!!]

முதல் பார்வையிலேயே கனகா திசை மாறி வந்தவள் என்பதைப் புரிந்து கொண்டான் முருகேசன். தூக்கலான ஒப்பனையும், தூண்டில் போடும் விழி வீச்சும் அவள் விலைமகள்தான் என்பதற்குக் கட்டியம் கூறினாலும், பார்வையில் பதுங்கி வெளிப்படும் ஒருவிதப் பயமும், படபடப்பும் அவள் ‘அந்த’த் தொழிலுக்குப் புதியவள்தான் என்பதை அப்பட்டமாய் எடுத்துரைத்தன.


அவள் பார்வையில் ‘விரசம்’ முலாம் பூசியிருக்கவில்லை. அந்த இளம் விலைமகளுக்குள்ளே ஓர் அப்பாவி இளவட்டப் பெண் அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு பரிதாபப்பட்டான் முருகேசன்.

இவன் கடைக்கு வந்து தேனீர் அருந்திவிட்டு, ஓரங்கட்டி நிற்பது; ஜாடை செய்யும் வாடிக்கையாளருடன் எட்டத் தெரியும் காவிரிப் பாலத்தை ஒட்டிய புதர் மறைவில் 'ஒதுங்குவது’; மீண்டும் கடைக்கு வந்து காத்திருப்பது என்ற அவளின் ஐந்தாறு நாள் நடவடிக்கையைக் கண்காணித்த பிறகு முருகேசன் ஒரு முடிவுக்கு வந்தான்.

அன்று, அவளுடன் பேச்சுக் கொடுத்தான்.

”இத்தனை சின்ன வயசில் இந்தக் கேவலமான தொழிலுக்கு ஏன் வந்தே?”

“அப்பா அம்மா ரெண்டு பேரும் கூலிக்குக் கிணறு தோண்டுறவங்க. ஒரு நாள் மண் சரிஞ்சி அதில் அமுங்கிச் செத்துப் போனாங்க. அனாதையா நின்னேன். தூரத்துச் சொந்தக்காரியான ஒரு கிழவிதான் எனக்கு ஆதரவா இருந்தா. அவளால உழைச்சிச் சம்பாதிக்க முடியல; என்னை இப்படிப் பழக்கி விட்டுட்டா. போன மாசம் செத்துப் போனா” என்றாள் கனகா.

“எவ்வளவு நாளா இந்த அசிங்கத்தில் புரளுறே?”

“ஒரு மாசம் போல.”

“ரேட் எவ்வளவு?”

“கூப்பிடுறவங்ககூட எல்லாம் போயிட மாட்டேன். என் மனசுக்கு நல்லவங்களாத் தெரிஞ்சா மட்டுமே போவேன். ரேட்டுன்னு ஒன்னு இல்ல. அவங்க கொடுக்கிறதை வாங்கிக்குவேன்.”

“ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்?”

“நூறு...நூத்தம்பது...இருநூறைத் தாண்டாது.”

சிறிது நேரம் அவள் முகத்தில் எதையோ தேடினான் முருகேசன்; சொன்னான்: “ஒரு நாளைக்கு இருநூறு ரூபா தர்றேன். மூனு வேளையும் சாப்பிட்டுக்கோ. என்னோடவே தங்கிக்கோ. இங்கே நான் மட்டும்தான் இருக்கேன். ஒரு கண்டிசன்..... வழக்கமா செய்யுற ஈனத் தொழிலை விட்டுடணும். சம்மதமா?”

‘சம்மதம்’ என்பதாகத் தலையசைத்தாள் கனகா.

அன்று இரவே அவனுடன் தங்கினாள். அப்புறமும் அது தொடர்ந்தது.

மாதங்கள் சில  கழிந்தன.

ஒரு நாள் இரவு, உறங்கச் சென்ற போது கனகா கேட்டாள்: “கேட்குறேன்னு என்னைத் தப்பா நினைச்சுடாதே. வயிறு காயாம சாப்பாடு போட்டுத் தினம் இருநூறு ரூபாயும் தந்துடறே. ஆனா, இன்னிக்கி வரைக்கும் ஒரு தடவைகூட என்னோட படுக்கலையே, ஏன்?” குரலில் மிதமிஞ்சிய வியப்பு படர்ந்து கிடந்தது.

“காரணத்தோடுதான். நாளை கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் நம்ம கல்யாணம். கல்யாணத்துக்கு அப்புறம்தான் படுக்கிறது, உன்னைப் பாடாய்ப் படுத்துறது எல்லாம்.” விழித்திரையில் குறும்பு வழியக் கண் சிமிட்டினான் முருகேசன்.

கனகா விழித்தாள்; “உனக்கென்ன பைத்தியமா?” என்றாள்.

“சுயபுத்தியோடதான் சொல்றேன்.” வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னான் முருகேசன்.

“நான் கெட்டழிஞ்சவ.”

“நானும்தான். ஏமாந்தவங்க சட்டைப்பையைத் தடவிப் பிழைப்பு நடத்திட்டிருந்தவன் நான். ஒரு நாள் பிடிபட்டேன். என்னிடம் பணம் பறி கொடுத்த ஒரு பெரியவர், அடி உதையிலிருந்து என்னைக் காப்பாத்தி, அவருடைய ஓட்டலில் எனக்கு வேலையும் கொடுத்தார். நாலஞ்சி வருஷம் எந்தத் தப்பும் செய்யாம யோக்கியனா வாழ்ந்து காட்டினேன். ‘உழைச்சி முன்னேறிக்கோ’ன்னு சொல்லி ஐம்பதாயிரம் ரொக்கமும் கொடுத்தார். அதை மூலதனமாக்கித்தான் இந்தக் கடையை நடத்திட்டிருக்கேன்......

.....கெட்டுத் திருந்தினவன் நான். நீயும் கெட்டுப் போனவள். திருந்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன். திருந்திட்டே. இனியும் சுத்தமானவளா உன்னால் வாழ்ந்து காட்ட முடியும். அந்த நம்பிக்கையில்தான் உன்னைப் பெண்டாட்டியா ஏத்துக்க முடிவு செஞ்சேன்” என்றான் முருகேசன்.

கனகா நீர் மல்கும் கண்களால்  தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள். விழிகளில் ஆனந்தம் பொங்க அவள் மேனியெங்கும் முத்தங்கள் விதைத்தான் முருகேசன்.
zzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz