பக்கங்கள்

சனி, 21 செப்டம்பர், 2019

'ஆண் புத்தி அரைப்புத்தி’...[பொழுதுபோக்கு]

“பக்கத்துத் தெரு சேதுவோட பெண்டாட்டி தாமரை வந்திருந்தா. ரொம்ப நேரம் காத்திருந்துட்டுப் போய்ட்டா”என்றாள் சவீதா.

கம்பெனி வேலையாக, வெளியூர் போய்விட்டுக் காலையில்தான் ஊர் திரும்பியிருந்தான் புவியரசு.

“அவள் எதுக்கு என்னைப் பார்க்கணும்? கேட்டியா?” என்றான்.

“கேட்டேன். நாலு நாள் முந்தி, தண்ணியடிச்சிட்டுத் தெருவோரம் விழுந்து கிடந்த அவ புருஷனை வீட்டில் கொண்டுபோய்ச் சேர்த்தீங்களாம். அதுக்கு நன்றி சொல்லிட்டுப் போக வந்தா.”

“சொல்லிட்டாதானே, அப்புறம் என்ன?”

“உங்களை நேரில் பார்த்துச் சொல்லணுமாம். நாளை வர்றதா சொல்லிட்டுப் போனா.”

பாவம் தாமரை. இளம் பருவத்திற்கேற்ற செழுமையான உடல்வாகும் அழகும் உள்ளவள்; மொடாக் குடியன் என்பது தெரியாமல் சேதுவுக்குக் கழுத்தை நீட்டிவிட்டுத் துன்பத்தில் உழல்பவள். அவளை நினைத்துப் பலமுறை வருத்தப்பட்டிருக்கிறான் புவியரசு.

சொன்னபடியே, மறுநாள் மாலையில் புவியரசுவின் வீடு தேடி வந்தாள் தாமரை.

வந்ததும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, “அம்மா இல்லீங்களா?” என்று கிசுகிசுப்பான குரலில் கேட்டாள்.

“சவீதா கோயிலுக்குப் போயிருக்கிறா. அவகிட்டே சொன்னாப் போதாதா? என்கிட்டே தனியா வேறு நன்றி சொல்லணுமா?” என்றான் புவியரசு.

“நான் நன்றி சொல்ல மட்டும் வரல. உங்ககிட்ட தனியா ஒரு விஷயம் பேசணுன்னு வந்தேன்.”

கண்களில் வியப்பு பரவ, “தனியாவா?” என்றான்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். என் புருஷனுக்கு உதவுற சாக்கில் அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்கிறீங்களாம்” -சொல்லிவிட்டுத் தலை தாழ்ந்த நிலையில் அவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் தாமரை.

“யார் அப்படிச் சொன்னது?” -கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டான் புவியரசு.

“அவர்தான் சொல்றாரு.”

“அவன் கிடக்கிறான் குடிகாரப்பய. அர்த்தமில்லாம ஏதாவது உளறுவான். நீ போ. அவனை நான் பார்த்துக்கிறேன்” என்றான் புவியரசு.

முகத்தில் லேசான வருத்தம் பரவ, தொங்கிய முகத்துடன் அங்கிருந்து அகன்றாள் தாமரை.

அதற்கப்புறம் அவளைச் சந்திக்கும் வாய்ப்பு அவனுக்கு நேரவில்லை. புருசனைப் பிரிந்து அவள் தாய்வீடு சென்றுவிட்டதாகச் சற்று முன்னர் கோயிலுக்குப் போகும்போது சவீதா சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்களாம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து என்னைக் கணக்குப் பண்ணப் பார்க்குறீங்களாம்” என்று தாமரை சொன்னதும் மனதில் உறைத்தது. இதைச் சவீதா இருக்கும்போது சொல்லாமல் அவள் அவனைத் தனியே சந்தித்துச் சொன்னதன் உள்ளர்த்தமும் புரிந்தது.

“பெண் புத்தி பின்புத்தின்னு சொல்வாங்க ஆண்மகனான என் புத்தி அரைப்புத்தி. நல்ல வாய்ப்பை நழுவ விட்டுட்டேன். நான் மடையன்... முட்டாள்” என்று முணுமுணுத்தவாறு தலைதலையாய் அடித்துக்கொண்டான் புவியரசு.
=======================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக