கதை | சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை | சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜூன், 2021

அறுபதிலும் ஆசைப்படலாம்!!![கண்களைக் குளமாக்கும் குடும்பக் கதை!]

சற்றே பெரிய சிறுகதை. ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். உணர்வு சலித்தால், என்னைத் திட்டாமல் விடுபடுவதில் தவறேதும் இல்லை!

                                                 *  *  *

சக்காளிபாளையம் கிராமத்தின் வடக்குத் திசையில், அரை ஏக்கர் மானாவாரி விவசாய நிலத்தில் இருந்தது கிழக்குப் பார்த்த அந்த  வீடு; பனை ஓலை வேய்ந்தது; பல தலைமுறை கண்டது. செம்மண் குழைத்து எழுப்பப்பட்டிருந்த சுற்றுச் சுவர் ஆங்காங்கே சிதைந்திருந்தது.

வீட்டின் வலப்புறம் இருந்த வாதநாராயண மரத்தடியில் கன்று ஈன்ற பசு மாடு ஒன்று அசைபோட்டுப் படுத்திருக்க, இடப்பக்கம் இருந்த வேம்பின் நிழலில் வெறும் கயிற்றுக் கட்டிலில் அசைவின்றி மல்லாந்து கிடந்தார் நாச்சியப்பன்.

தாட்டிகமான கறுத்த தேகம் நாச்சியப்பனுக்கு. முக்கால் பங்கு நரைத்த தலைமுடியும், சற்றே உலர்ந்து சுருங்கிய சருமமும்தான் அவர் அறுபதைக் கடந்தவர் என்பதற்குச் சாட்சியம் அளித்தன.

ஒரு முழுநாள் பட்டினி. இரவெல்லாம் கண் விழித்திருந்த சோர்வு. தீராத மன உளைச்சல். இவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக அன்றாடக் கடமைகளை மறந்து உயிரற்ற சவம் போல நீட்டிப் படுத்திருந்தார் நாச்சியப்பன். மூடியிருந்த இமைகளுக்குள் தெரிந்த கருமணிகளின் பிறழ்வும், அவ்வப்போது இழுத்து விடப்பட்ட பெருமூச்சு காரணமாக எழுந்து தாழ்ந்த நெஞ்சுக்கூடும் அவர் உறங்கவில்லை என்பதற்குக் கட்டியம் கூறின.

“ஐயா, நேத்துப் பூரா எதுவும் சாப்பிடல. இப்பவும் பொழுது சாஞ்சிடிச்சி. ஒரு டீத்தண்ணிகூடக் குடிக்கல. ஒடம்பு தாங்குமா?” -கட்டிலை ஒட்டிக் கட்டாந்தரையில் உட்கார்ந்திருந்த மாரியம்மா கேட்டாள்.

நாச்சியப்பனிடமிருந்து பதில் இல்லை. அதிகபட்சக் கோபத்திலோ மிகையான வருத்தத்திலோ இருக்கும்போது கேட்ட கேள்விக்கு அவரிடமிருந்து சற்றுத் தாமதமாகத்தான் பதில் வரும் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்திருந்ததால் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

ஒரு நிமிடம் போல மௌனத்தில் கரைத்துவிட்டு வாய் திறந்தார் நாச்சியப்பன். “நான் என்ன வீம்புக்கா சாப்பிடாம இருக்கேன். பசி எடுக்கல புள்ள. அவன் பேசின பேச்செல்லாம் நீ கேட்டுட்டுத்தானே இருந்தே. நீயெல்லாம் ஒரு அப்பனான்னு கேட்டானே, என் உசுரு போறவரைக்கும் அது மறக்குமா? இருந்த நிலத்தையெல்லாம் உங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தேன். வெளியூர்ல இருக்கிற நீங்க அதையெல்லாம் வித்துக் காசு பண்ணிட்டீங்க. எனக்குன்னு அரை ஏக்கர் நிலமும், அஞ்சு லட்சம் பணமும் மட்டும்தான் இருக்கு. அதுவும் நான் செத்தப்புறம் உங்களுக்குத்தானேன்னு நான் சொன்னதுக்கு, நீ எப்பச் சாகுறது, நாங்க எப்பப் பணத்தைக் கண்ணால பார்க்குறதுன்னு கேட்டானே, அதுக்கு என்ன அர்த்தம்? சீக்கிரம் செத்துத் தொலையடா கிழவாங்கிறதுதானே? இப்படியே பட்டினி கிடந்து செத்துடலாம்னு தோணுது.” -நனைந்த துணிப் பந்தாய்த் துக்கம் தொண்டையை அடைக்க, பார்வையை உயர்த்தி மரக் கிளைகளை வெறித்துப் பார்த்தார் நாச்சியப்பன். அப்போதைய மன நிலையில், தன் முகம் பார்த்துப் பேசினால் அவர் பொங்கி அழுதுவிடுவார் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்தே இருந்தது.

“காலம் மாறிப்போச்சி ஐயா. இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் பெத்தவங்களை மதிக்கத் தெரியல. பணம் காசுக்காக அடிச்சி ஒதைக்குறாங்க. கொலைகூடப் பண்ணிடறாங்க. நம்ம புள்ளைக எவ்வளவோ தேவலாம். மனசைத் தேத்திக்கோங்க” என்றாள்.

“அடிச்சி ஒதைச்சிக் கொன்னு போட்டுட்டாக்கூடப் பரவாயில்லை. ஒரேயடியாப் போய்ச் சேர்ந்துடலாம். வார்த்தையால வதைக்கிறாங்களே, அதைத் தாங்கிக்க முடியல புள்ள. போன வாரம் வந்துட்டுப் போன பெரியவனும் நேத்து வந்த சின்னவன் சொன்னதையேதான் சொன்னான். அதோட நிக்கல. காலம் போன கடைசியில் உனக்குக் காசுப்பித்து தலைக்கேறிடிச்சி. என்கிட்ட இருக்கிற பணம் என் சொந்தச் சம்பாத்தியம்னு சொல்லிட்டுத் திரியறே. நீ சம்பாதிச்ச பணத்தை நாளைக்குப் பாடையில் போறப்ப ஒரு கோணிச்சாக்கில் கட்டிக் கையோட எடுத்துட்டுப் போயிடுன்னு நக்கல் பண்ணினானே. என் மனசு என்ன பாடு படுது தெரியுமா? உனக்கு நல்ல சாவு வராது. செத்தா நரகத்துக்குத்தான் போவேன்னு சாபம் வேற கொடுத்தான். அப்பனுக்கு மவன் சாபம் குடுத்தா அது பலிக்குமா மாரியம்மா? கேட்டுவிட்டு ஒரு குழந்தை போலத் தேம்பி அழுதார் நாச்சியப்பன்.

துடித்துப்போன மாரியம்மா, எழுந்து நின்று முந்தானையால் அவர் கன்னங்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தாள். அவரது இரு கரங்களையும் பற்றி எடுத்துத் தன் கரங்களுடன் பிணைத்துக்கொண்டு சொன்னாள்: “தைரியமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்கும். எல்லார்த்தையும் நாம கும்புடுற சாமி பார்த்துக்கும். மோர் குடிங்க. கொஞ்ச நேரத்தில் 'களி'ச்சோறு கிளறிக் கடுப்பான் அரைச்சுடுறேன்” என்று சொல்லி ஒரு பித்தளைத் தம்ளர் நிறைய மோர் கொண்டுவந்து கொடுத்தாள்.

மாரியம்மாவின் குடும்பம், விவசாயத் தொழில் செய்து வயிறு வளர்த்த பரம்பரையைச் சார்ந்தது.

பத்தாவது ஃபெயில் ஆனதும் அம்மாக்காரியுடன் தோட்ட வேலைகளுக்குச் சென்றாள் அவள். கல்யாணம் ஆன பிறகும் அது நீடித்தது.

ஒரு வேன் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் பெத்தவங்களையும் கட்டிய புருஷனை இழந்தாள் மாரியம்மா. அவளுடைய ஒரு கால் ஊனமானது. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாததால் பண்ணையாளர்களால் அவள் புறக்கணிக்கப்பட்டாள். பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் அவள் தவித்தபோது, “தோட்ட வேலையோ வீட்டு வேலையோ சொல்லுறதைச் செஞ்சிட்டுப்போ. மாசச் சம்பளம் தர்றேன். தினமும் வந்துடு” என்று ஆதரவுக்கரம் நீட்டினார் நாச்சியப்பன்.

அவர் மனைவி இறந்த பிறகு அவர் வீட்டு முழுநேர வேலைக்காரி ஆனாள் மாரியம்மா. நாள் முழுக்க அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து முடித்தே தன் வீடு திரும்புவாள்.

சுத்தமான பாலுக்காக ஒரு பசு மாட்டைத் தன் பொறுப்பில் பராமரித்து வந்தார் நாச்சியப்பன்.

அன்று வழக்கம்போல, பசுவை மேயவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் மகள் சாந்தி மாரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

“வாம்மா, ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றார்.

“நாங்க எல்லாம் நல்லாவே இருக்கோம். நீங்கதான் ரொம்ப மன வருத்தத்தில் இருக்கீங்க போல” என்றாள் சாந்தி.

பதில் பேசாமல், மாட்டுக்குத் ‘தாழித் தண்ணி’ காட்டி, மரத்தில் கட்டிவிட்டு வந்தார் நாச்சியப்பன்.

“தம்பிமாருங்க வந்தாங்களா?” என்றாள் சாந்தி.

"வந்தாங்க.”

"வீட்டடோடு இந்த நிலத்தையும் வித்துட்டு அவங்களோட இருந்துடச் சொன்னாங்களாமே?”

“நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்,”

“ஏம்ப்பா?”

“ஆறுபது வருசத்தை இங்கே கழிச்சுட்டேன். இன்னும் கொஞ்ச காலம்... ஓட்டமா ஓடிடும். என் அப்பாவையும் தாத்தாவையும் குளிப்பாட்டின இந்த மண்ணு வாசல்லியே என்னையும் குளிப்பாட்டணும். அவங்கள எரிச்ச சுடுகாட்டிலேயே என்னையும் சுட்டுச் சாம்பலாக்கணும். இதெல்லாம் என் அந்திமக்கால ஆசை. அதோட, பட்டணத்துப் பொழப்பு எனக்குச் சரிப்பட்டு வராது. தினமும் ரெண்டு வேளை சாப்பிடுறேன். மத்தியானம் கம்மஞ்சோறோ ராகிக் களியோ சாப்பிடுறேன். இந்தக் கம்மஞ்சோத்தையையும் களியையும் என் ரெண்டு மருமகளும் கண்ணில் பார்த்திருக்கவே மாட்டாங்க.....”

சிக்கனமாய்க் கொஞ்சம் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். “வெய்யக் காலத்துல, கட்டுன கோமணத்துணியோட வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருப்பேன். ஒரு பக்கம் குளுகுளுன்னு வீசுற காத்து. இன்னொரு பக்கம் கமகமன்னு மாட்டுச் சாணத்தோட வாசம். இதெல்லாம் பட்டணத்துக்குப் போனா கிடைக்காதும்மா. சாகறமுட்டும் இந்தப் பட்டிக்காட்டை விட்டு நகர மாட்டேன்னு அவனுங்ககிட்டே அடிச்சிச் சொல்லிட்டேன்.”

“உங்க பேங்க் பணத்தைக் கேட்டாங்களாம். தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களாம். அது தப்பில்ல. ஏன்னா, அதில் மூனில் ஒரு பங்கு எனக்குச் சேர வேண்டியது.”

மௌனம் பாவித்தார் நாச்சியப்பன்.

“அப்பா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வீங்களா?”

“சொல்லு. சொன்னாத்தானே முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.”

“உங்களால முடியும்ப்பா. நாங்க எங்க வீட்டுக்கு அடுத்து இருக்குற வீட்டு மனையை விலை பேசி முடிச்சுட்டோம். அடுத்த மாசம் கிரையம். கொஞ்சம் பணம் பத்தல. அஞ்சோ ஆறோ உங்க பணம் பேங்குல இருக்கில்லையா? அதை இப்போ கடனாக் குடுங்க. வட்டி போட்டு அடுத்த வருசமே திருப்பித் தந்துடறேன்” என்றாள் சாந்தி.

“வூட்டுச் செலவு, மருந்து மாத்திரைச் செலவு, மாரியம்மாவுக்குச் சம்பளம்... இப்படியான செலவையெல்லாம் மாசாமாசம் வர்ற வட்டியை வாங்கித்தான் சமாளிக்கிறேன். இருக்கிற பணத்தைக் கொடுத்துட்டு யார்கிட்டே கையேந்தி நிப்பேன்? பணத்துக்கு வேற ஏற்பாடு பண்ணும்மா” என்றார் நாச்சியப்பன்.

சிறிது நேரம் அப்பனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சாந்தி, “பெத்த புள்ளைங்க மேல உங்களுக்குப் பாசம் இல்ல. பணம் இன்னிக்கி வரும்; நாளைக்குப் போகும். நீங்க செத்தப்புறம் உங்க பணம் உங்களைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாது. உங்க புள்ளைகதான் பாடை சுமக்கணும். ஞாபகம் வெச்சுக்குங்க.” -சொல்லிவிட்டு, விடுவிடென கேட்டைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள்.

"மாமா, எழவுக்கு வர்றியா?” -பொளியில் எருதுகளை மேயவிட்டு, மம்மட்டியால் வாய்க்காலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தங்கமுத்து குரல் வந்த திக்கில் பார்வையை ஓட்டினார்.

பத்தடி தள்ளி, ஒத்தையடிப் பாதையில் பாழிக்காட்டு வேலுச்சாமி நின்றுகொண்டிருந்தான்.

“எழவா? யாருடா மாப்ள?” என்றார் தங்கமுத்து.

“நம்ம நாச்சியப்பன்.”

“பெரிய பண்ணாடி நாச்சியப்பனா? நல்லாத்தானே இருந்தாரு. முந்தா நாளு டவுனுல பார்த்தனே.”

“நெறயத் தூக்க மாத்திரை முழுங்கியிருக்காரு. மிச்சம் மீதி தரையில் சிதறிக் கிடந்துச்சாம்.”

“ஏன் இப்படிப் பண்ணினாரு. ரொம்பத் தெகிரியசாலியாச்சே.” 

“போற நேரம் வந்தா தெகிரியமும் போயிடும். நாலு நாள் முந்தி, மவளும் மவனுகளும் வந்து பேங்க் பணத்தைக் குடுக்கச் சொல்லி தகராறு பண்ணியிருக்காங்க." 

“இவங்க மூனு பேரும்தானே வாரிசு. இவரு பணம் எங்கே போயிடப் போகுது?”

“அதுவல்ல விசயம். நாச்சியப்பன் சம்சாரம் பவளாயி செத்ததுக்கப்புறம், ரெண்டு மூனு வருசமா மாரியம்மாதான் வீட்டு வேலையெல்லாம் செய்துட்டிருக்கிறா. அவள் மேல இவங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்திருக்கு. அவள அப்பன்கிட்ட இருந்து பிரிக்கத் திட்டம் போட்டாங்க. நாச்சியப்பன் கண் முன்னாலயே, ‘எங்கப்பனைக் கைக்குள்ள போட்டுகிட்டுப் பணத்தையெல்லாம் நீ சுருட்டப் பார்க்கிறே’ன்னு பழி சுமத்துனாங்களாம். ஆளாளுக்குத் திட்டித் தீர்த்துட்டுப் போனாங்களாம்."

"அப்புறம்?" -ஆவல் பொங்கக் கேட்டார் தங்கமுத்து.

"உன் மேல வீண் பழி சுமத்திட்டாங்க. இனியும் இங்க இருக்க வேண்டாம். ரெண்டு லட்சம் மட்டும் வெச்சிகிட்டு மூனு லட்சத்தை உனக்குத் தர்றேன். கடை கண்ணி வெச்சிப் பிழைச்சிக்கோ. நான் கிழவன். தனியாவே காலத்தைக் கழிச்சிடுறேன்னு சொல்லியிருக்கார் நாச்சியப்பன்....."

சற்றே இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தான் வேலுச்சாமி, "சொந்தபந்தம்னு யாருமே எனக்கு உதவாதபோது நீங்கதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தீங்க. உங்க ஆயுசு முடியறவரைக்கும் உங்களைப் பிரிய மாட்டேன். இது சத்தியம். நீங்க சம்மதிச்சா, முழு நேரமும் உங்களோடவே இருந்துடுறேன்னு சொல்லியிருக்கா மாரியம்மா....."

இடைமறித்தார் தங்கமுத்து, "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"

"எனக்கு மட்டுமில்ல, இந்த ஊருக்கே தெரியும். 'நான் பெத்த பிள்ளைகளே, நான் மாரியம்மாவை வெச்சிருக்கேன்னு பழி சுமத்திட்டாங்க. யார் என்ன சொன்னாலும் உங்களைப் பிரிஞ்சி போக மாட்டேன்னு மாரியம்மா சொல்லிட்டா. அதனால, கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அவளைக் கல்யாணம் கட்டிகிட்டேன்'னு நெருக்கமானவங்ககிட்டே நாச்சியப்பனே சொல்லியிருக்கார்."

"அவர் அவளைக் கட்டிகிட்டார்னு நானும் கேள்விப்பட்டேன். அது இருக்கட்டும், நாச்சியப்பன் எப்படிச் செத்தார்? அதை முதலில் சொல்லுடா."

"கல்யாணம் ஆகி ஆறு மாசம் போல நாச்சியப்பனும் மாரியம்மாவும் சந்தோசமாகத்தான் குடும்பம் நடத்துனாங்க. நேத்திக்கு அதிகாலை நேரத்துல, தங்கச்சி புருசனோடு வந்த ரெண்டு மகன்களும் கண்மண் தெரியாம இவங்க ரெண்டுபேரையும் அடிச்சி உதைச்சிருக்காங்க; 'ரெண்டு நாள் கழிச்சி வருவோம்.  இங்க உன்னைப் பார்த்தா வெட்டிப் போட்டுடுவோம்'னு மாரியம்மாளை மிரட்டிட்டுப் போயிருக்காங்க. அவங்க புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்துலயே, நாச்சியப்பனும் மாரியம்மாவும் தூக்க மாத்திரைகளை முழுங்கிட்டுத் தற்கொலை பண்ணிட்டாங்க. நாச்சியப்பனுக்குப் பக்கத்து நிலத்துக்காரர் எனக்குக் கொஞ்சம் முன்னால போன் பண்ணினார்."

"ரொம்ப நல்ல மனுசன். போய்ச் சேர்ந்துட்டார்" என்றார் தங்கமுத்து.

"மாரியம்மாவை அவர் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. வயசான காலத்துல புத்தி கெட்டுப்போச்சு" என்றான் வேலுச்சாமி.

"புத்தி கெடுல. நல்ல புத்தியோடுதான் கல்யாணம் கட்டியிருக்கார். அவரோட மனநிலையில் நான் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். அவர் செய்த ஒரு தப்பு, பெத்த புள்ளைகளால ஆபத்து நேரும்னு எதிர்பார்த்துப் போதுமான பாதுகாப்போடு இருந்திருக்கணும்; அடி உதை பட்ட பிறகாவது போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கணும். தற்கொலை பண்ணிகிட்டதுதான் அவர் செஞ்ச தப்பு. அந்த நல்ல மனுசனைக் கடைசியா ஒரு தடவை பார்க்கத்தான் வர்றேன். அந்த நாய்கள் இருந்தா  அவனுங்ககிட்ட துக்கம் விசாரிக்க மாட்டேன்” என்று சொல்லி தங்கமுத்து நடந்தார். வேலுச்சாமி அவரைப் பின்தொடர்ந்தான்.

====================================================================================

திங்கள், 21 டிசம்பர், 2020

"போய்யா...நீயும் உன் கடவுளும்"!

அமேசான் கிண்டிலில் இடம்பெற்றுள்ள என் நூல்களில் 'பத்து ரூபாயில் கடவுள்' என்னும் சிறுகதைத் தொகுப்பும் ஒன்று. அதிலுள்ள முதல்[முதல் தரமானதும்கூட] கதைக்கான தலைப்பே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது. தலைப்பை மட்டும் மாற்றியமைத்து["போய்யா நீயும் உன் கடவுளும்"] ஏற்கனவே வாசிக்காதவர்களின் வாசிப்புக்காகப் பதிவு செய்துள்ளேன்.


பிச்சைக்காரர்களைக் கண்டாலே எனக்குப் பிடிப்பதில்லை. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிச்சை எடுக்கவே தகுதி இல்லாதவர்கள்.

சிக்குப் பிடித்த தலைக்குச் சீகக்காய் தேய்த்துக் குளிக்க வைத்து, காக்கி உடுப்பை மாட்டி, ஒரு நிறுவனத்தின் வாயிலில் மடக்கு நாற்காலி போட்டு உட்கார வைத்தால், ஒரு நாள் முழுக்க அவர்களில் கணிசமானவர்களால் தூங்கி வழியாமல் காவல் புரிய முடியும்.

எதிர்பாராத சூழ்நிலையில் அனாதையாக்கப்பட்டு, அடுத்த வேளைச் சோற்றுக்கே வழி இல்லாமல் பிறரிடம் கையேந்தப்போய், அப்புறம் அதுவே சவுகரியமாய்த் தோன்ற, இவர்களில் பலரும் நிரந்தரப் பிச்சைக்காரர்களாக மாறியவர்கள்.

பிச்சைக்காரர்கள் வருவது தெரிந்தாலே, பார்வையைத் திசை திருப்பி, எவருடைய வருகையையோ எதிர்பார்ப்பதுபோல் பாவனை செய்வதில் நான் சமர்த்தன்.

கையேந்துகிறவன் தகுதி வாய்ந்த பிச்சைக்காரனாக இருந்தால் மட்டுமே ஒத்தை ரூபாய்[அது இல்லாவிட்டால், “சில்லரை இல்லை. போ...போ”] போடுவேன். அதற்கும், அரை நிமிட நேரமாவது, “மவராசரே, ரெண்டு நாளா பட்டினி. தானம் பண்ணுங்க தர்ம துரையே”ன்னு அவர்கள்  நின்று அடம் பிடிக்க வேண்டும்.

இவ்வகையில் ‘அதர்ம துரை’யான எனக்குப் பிச்சை போடுவதில் கொஞ்சம் நாட்களுக்கு முன்பு  ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

கோவை சென்றுவிட்டு, ஊர் திரும்புவதற்காகப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தபோது, காலில் பிய்ந்த செருப்புக்கூட இல்லாமல், கோலூன்றிய ஒரு கிழவன் என்னிடம் கை நீட்டிச் சொன்னான்:  “வெடுக்கு வெடுக்குன்னு நெஞ்சு வலிக்குது சாமி. கபகபன்னு எரியுது. ஆஸ்பத்திரி போவணும். நடக்கச் சத்தில்ல. ஆட்டோவில்தான் போவணும். ஒரு பத்து ரூபா கொடுத்தீங்கன்னா...” அவன் சொல்ல நினைத்த மிச்சத்தைக் கலங்கிய அவனின் கண்கள் சொல்லி முடித்தன.

அவனை 100% நம்பினேன்[நீங்களும் இது கதையல்ல என்று நம்பலாம்!]. பத்து ரூபாயை நான் நீட்ட, “ஏழெட்டு பேர்கிட்ட கேட்டேன். யாரும் என்னை நம்பிப் பணம் கொடுக்கல. நீங்க கொடுத்தீங்க. நீங்க கடவுள் மாதிரி” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி அகன்றான். 

நடக்கவே நடக்காது என்று நம்புகிற ஒன்று நடந்து முடிந்துவிட்டால் மனிதர்களுக்குக் கடவுள் நினைப்பு வந்துவிடுகிறது. முழுசா ஒரு பத்து ரூபாயை யாரும் பிச்சையாகக் கொடுக்கமாட்டார்கள் என்பது அந்தக் கிழப் பிச்சைக்காரனுக்குத் தெரியும்தான். இருந்தும் ஓர் அவசரத் தேவைக்காக முயற்சி செய்திருக்கிறான். எதிர்பாராதது நடந்தபோது அவனால் கடவுளைப் போற்றாமல் இருக்க முடியவில்லை. 

இந்த நிகழ்வு முடிந்த சிறிது நேரத்தில் என் சிந்தனைவானில் ஒரு சிறு பொறி.

இன்னும் கொஞ்சம் பிச்சைக்காரர்களுக்குத் தலா பத்து ரூபாய் கொடுத்து, அவர்களிடம், “நீ கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டால் அவர்களின் பதில்கள் என்னென்னவாக இருக்கும்?

அறிந்துகொள்ளும் ஆர்வம் என் நெஞ்சில் ‘சிக்’ என்று ஒட்டிக்கொண்டுவிட்டது.

பார்வையை அலையவிட்டதில்,  நரைத்த தலைமுடியும் காதில் பேசியுமாகத் தரையில் விரித்த துண்டின் மீது கால்கள் நீட்டி, சாலையோரம் ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது.

அவனைக் கண்டுகொள்ளாதது போல் கடக்க முயன்றபோது, “ஐயா, தர்மம் பண்ணுங்க” என்று கும்பிட்டான்.

அவனிடம் பத்து ரூபாயை நான் நீட்ட, தயக்கமாகப் பார்த்தான்.

“பத்து ரூபா. உனக்குத்தான் வெச்சிக்கோ. நான் கேட்கிறதுக்கு மட்டும் பதில் சொல்லு. நீ கடவுளை நம்புறியா?”

“நம்புறதா? உங்க உருவத்தில் எனக்குப் பத்து ரூபா தந்தது அந்தக் கடவுள்தாங்க” என்றான் அவன்.

இன்னும் ஒன்பது பேரிடம் இதே கேள்வியைக் கேட்பது என் திட்டம்.

சொந்த ஊர் திரும்பிய பின்னர், பேருந்து நிலையம், கடைவீதி, கோயில் என்று வேறு வேறு இடங்களில் வேறு வேறு சமயங்களில் பிச்சைக்காரர்களைத் தேடிப் பிடித்ததையோ, அவர்களுக்குப் பத்துப் பத்து ரூபாய் கொடுத்து, “கடவுளை நம்புகிறாயா?” என்று கேட்டதையோ விவரித்து உங்களைச் சலிப்படையச் செய்யாமல், அவர்கள் சொன்ன பதில்களைக் கீழே வரிசைப்படுத்துகிறேன்.

''இப்படி உங்களைக் கேட்க வெச்சதே அந்தக் கடவுள்தாங்க.”

“பிச்சைக்காரன் நான் ஒருத்தன் நம்பலேன்னா கடவுள் இல்லேன்னு ஆயிடுமா?”

“கடவுளை நம்பாம வேற யாரை நம்புறது? சொல்லுங்கய்யா.”

''கோயில் வாசலில் வெச்சி இப்படி ஒரு கேள்வி கேட்குறீங்களே, இது நியாயமுங்களா?”

”நான் பிச்சை கேட்குறேன். நீங்க பிச்சை போடுறீங்க. இது எதனால? எல்லாம் அந்தக் கடவுளோட திருவிளையாடல்தானுங்க.”

“இந்த நேரத்தில் நீங்கதாங்க எனக்குக் கடவுள்.”

“காசேதான் கடவுளுங்க. அந்தக் கடவுளுக்கும் அது தெரியுமுங்க.”[கண்கள் சிமிட்டி, ராகம் போட்டுப் பாடுகிறான்].

“நான் பத்து வருஷமா பிச்சை எடுக்கிறேன். பைசா முதலீடு இல்லாம தினமும் நூறு ரூபாய்க்குக் குறையாம சம்பாதிக்கிறேன். எல்லாம் கடவுள் கருணையாலதாங்க.”

ஒன்பதுபேருக்குப் பத்துப் பத்து ரூபா பணம் கொடுத்துப் பேட்டி எடுத்தாயிற்று. ஒருவர் மிச்சம் இருக்கிறாரில்லையா?

ஓர் உணவு விடுதி வாசலில், கிழிசல் பேண்ட் போட்ட ஒரு பிச்சைக்காரனைச் சந்தித்தேன். அவனுக்குப் பணம் ஏதும் கொடுக்காமல் கேள்வியை மட்டும் முன் வைத்தேன்.

“நீ கடவுளை நம்புறியா?”

“தானம் பண்ணுங்கய்யா.” -அவன்.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுப்பா.” 

“ஒத்த ரூபா பிச்சை போட வக்கில்ல. பெருசா கேள்வி கேட்க வந்துட்டே... போய்யா நீயும் உன் கடவுளும்” என்று சொல்லி முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

அவனின் திமிர்ப் பேச்சு எனக்குள் உறுத்தியது என்றாலும் கடவுளை, “உன் கடவுள்” என்று எனக்கே எனக்கு மட்டும் சொந்தமாக்கியது பிடித்திருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------

புதன், 19 ஆகஸ்ட், 2020

போகிற போக்கில் ஒரு பொதுத்தொண்டு!

Who is an EU Student?லுவலகம் செல்லப் பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். என்னிடம்  உதவி வேண்டி வந்த நண்பரும் உடனிருந்தார்.

“பஸ் வருது” என்றார் நண்பர்.

“புறப்படப் பத்து நிமிசம் ஆகும். கொஞ்சம் பொறு” என்று சொல்லிவிட்டு, சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்த அந்தப் பள்ளி மாணவனை நெருங்கினேன். நண்பரும் இணைந்துகொண்டார்.

“பத்திரிகையில் உன் ஃபோட்டோ பார்த்த ஞாபகம். எஸ். எஸ். எல். சியில் ஸ்டேட் பஸ்ட் வந்தாய்தானே?” என்றேன் அந்த இளைஞனிடம்.

சற்றே திடுக்கிட்ட அவன், “இல்லீங்களே” என்றான்.

“இப்போ பிளஸ் டூ படிக்கிறியா?”

“பிளஸ் ஒன்னுங்க.”

“இப்பவே ஐ.ஐ.டிக்குப் பிரிப்பேர் பண்ணலாமே. பண்றியா.”

“இல்லீங்க.”

“டாக்டரா, எஞ்சினீயரா,  கலெக்டரா உன் எதிர்காலக் கனவு என்ன?”

“அது வந்து.....வந்து.....” -வார்த்தைகளை மென்று விழுங்கினான் மாணவன்.

“பார்த்தா ரொம்பப் புத்திசாலியாத் தெரியரே. பெரிய ஆளா வருவே. நல்லாப் படி...” -சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுங்க” என்று நழுவினான் அவன். நாங்களும் பேருந்தில் ஏறி அமர்ந்தோம்.

பேருந்து புறப்பட்டபோது நண்பர் கேட்டார்: “தெரிஞ்ச பையனா?”

“ஊஹூம்.”

“என்னவெல்லாமோ சொல்லி அவனை உசுப்பேத்தினியே?”

“எல்லாம் அவனுடைய நன்மைக்காகத்தான். தினமும் கையில் புத்தகக் கட்டோட  இந்த நேரத்தில் அவனைப் பார்ப்பேன். நல்லாப் படிக்க வேண்டிய இந்த வயசில் அநியாயத்துக்குப் பொண்ணுகளை சைட் அடிச்சிட்டு நிற்பான். தன்னோட எதிர்காலத்தைப் பத்திக் கொஞ்சமாவது யோசிக்க வெச்சா இந்தக் கெட்ட பழக்கத்தை விட்டுடுவான்கிறது என்  நம்பிக்கை. என்னவோ என்னால் முடிஞ்ச ஒரு நல்ல காரியம்” என்றேன்.

“நல்ல மனசுப்பா உனக்கு.” -என் முதுகைத் தட்டிக் கொடுத்தார் நண்பர்.
=====================================================================
“நான் சொர்க்கம் போறேன்...வழி விடுங்க” என்னும் பதிவில்[இன்று பிற்பகலில் 12.41 மணிக்கு வெளியிடப்பட்டது] நேர்ந்த பிழை சரிசெய்யப்பட்டது.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

சதையும் கதையும் - 2: ‘ஓவியனின் கண்ணீரில் காவியம்!’

சற்றே நீண்ட சிறுகதை. வாசித்து முடிக்கக் கொஞ்சம் பொறுமை தேவை. நீங்கள் கதைப் பிரியராக... வெறியராக இருந்தால் தயங்காமல் கதையில் நுழையலாம்!

யதுக்கு ஒவ்வாத செயலில்தான் நான் ஈடுபட்டிருந்தேன். ஒரு பெரிய அறையின் குறுக்கே தடுப்பாக வைக்கப்பட்டிருந்த ‘கார்டு போர்டு’ அட்டையில் இடம்பெற்றிருந்த சிறிய துவாரத்தில் விழியைப் பொருத்தி அடுத்த அறையில் நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

புத்தம் புதிய இளம் ஜோடி. படுக்கையில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். தூரிகையும் கையுமாக நின்றிருந்தான் அவன். அருகே ஓவியப் பலகையும் வண்ணக் கலவையும் இருந்தன.

அவளை உற்று நோக்கிக்கொண்டிருந்த அவன் திடீரென அவளின் கரம் ஒன்றைப் பற்றி எடுத்து முத்தமாரி பொழிந்துவிட்டு, “எழுந்திருடா. உனக்குத்தான் மல்லிகைப்பூன்னா கொள்ளை ஆசையாச்சே. வாங்கிவந்திருக்கேன். எழுந்து நின்னு வெச்சிக்கோடா” என்று கொஞ்சுமொழி பேசிக் குழைந்தான்.

அவள்...அந்த அழகி சிணுங்கினாள். “ஊஹூம்...தலை ரொம் வலிக்குது. இப்போ வேண்டாங்க. வேணுன்னா நீங்களே வெச்சிவுடுங்க” என்று படுத்த கோலத்திலேயே பின்மண்டையைக் காட்டினாள்.

அவன் முகம் சூம்பியது. “என் ரசனையை நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? எழுந்து நின்னு இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, தலையைச் சாய்ச்சிகிட்டு மல்லிகைச் சரத்தைக் கூந்தலில் சொருகிக்கொள்ளும் காட்சியிருக்கே, அப்பப்பா, அஜந்தா ஓவியம் தோத்துடும். ஒரே ஒரு படம் மட்டும் வரைஞ்சிக்கிறேன். எழுந்திருடா. பிளீஸ்.....” என்று கெஞ்சியவாறு தூரிகையை ஒரு புறம் வைத்துவிட்டு அவளின் இடையில் கைகளை நுழைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டினான்.

அவனுடைய குழைவான பேச்சும் செய்கைகளும் என் இளைமைக்கால அனுபவங்களை நினைவுக்குக் கொண்டுவந்தன.

செல்லமாக ஆண்பிள்ளைகளை அழைப்பது போல, “வாடா..போடா” என்றுதான் நானும் என் மனைவியை அழைப்பேன். இவனைப் போல்தான் நானும் அவளைப் படங்கள் வரை விதம் விதமாகப் ‘போஸ்’ கொடுக்கச் சொல்வேன். ஓவியக் கலைஞனான என் தொல்லை பொறுக்காமல் அவள் மூக்கால் அழும்போது அவளைச் சிரிக்க வைக்க இப்படித்தான் கிச்சுக் கிச்சு மூட்டுவேன்.

சுமதி, என் மனைவியும் இவளைப் போலவே பேரழகிதான். எளிதில் என் வேண்டுகோள்களுக்குச் செவிசாய்க்க மாட்டாள். “இந்த உணர்ச்சியை வெளிப்படுத்திச் சிரி; அந்தப் பாவத்தைக் காட்டிப் புன்னகை செய்” என்றெல்லாம் நான் படுத்தும் பாட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒப்பாரி வைப்பாள். உன்னதப் படைப்புகளுக்காக அவளின் கால்களைப் பிடித்துக் கெஞ்சுவதற்குக்கூட நான் தயங்கியதில்லை.

இதற்கு மேலும் பழைய சம்பவங்களில் என் சிந்தையைப் படரவிட என் மனம் தயங்கியது. காரணம், கலைக்காக வாழ்வை அர்ப்பணித்துவிட்டதாக பெருமிதத்துடன் வாழ்ந்ததன் விளைவு, குடும்பத்தைத் துறந்து, ஊர் துறந்து ஓடும் நிலைக்கு நான் ஆளாகிவிட்டதுதான்.

கடந்தகால நினைவுகளிலிருந்து விடுபட விரும்பி மீண்டும் துவாரத்தில் என் பார்வையைச் செலுத்தினேன்.

இப்போது நான் அங்கு கண்ட காட்சி எனக்கு உவகையை ஊட்டவில்லை. நான் நினைத்தது போல நின்ற கோலத்தில் கூந்தலில் பூச்சூட்டிக்கொண்டு அந்தப்பெண் ‘போஸ்’ கொடுத்துக்கொண்டிருக்கவில்லை. அவன் அவளைப் பார்த்து ஓவியம் வரைந்துகொண்டிருக்கவில்லை. மாறாக.....

முகத்தில் சலிப்பைத் தேங்கவிட்டிருந்த அவள், “இன்னிக்கிப் பெங்களூரைச் சுத்தினதில் ரொம்பவே களைப்பா இருக்கு. காலெல்லாம் கடுகடுன்னு வலிக்குது. ஓவியத்தை நாளைக்கு வரையலாங்க” என்று சொல்லி, படுக்கையில் குப்புறக் கவிழ்ந்தாள்.

அவனோ கொஞ்சமும் முகம் சுளிக்கவில்லை. சட்டென அவளின் கால்மாட்டில் அமர்ந்து கால்களை அமுக்கிவிடத் தொடங்கினான்.
என்னுள் லேசான அதிர்ச்சி. எனக்குள்ள குணங்கள் இவனுக்கும் இருக்கிறதே. ஒரு வேளை.....

அவனுக்குகூட...அவன்தான்  என் மனைவி பெற்ற பிள்ளை -அவனுக்கும் இவன் வயதுதான் இருக்கும். தோற்றத்திலும் செயலிலும் என்னைப் பிரதிபலிக்கும் இவன் என் மகனாக இருப்பானோ? அவன்தான் இவனோ?
என் மனதில் கலக்கம்; ஒருவித நடுக்கம். அந்த நாள்...அந்தச் சம்பவம்...பெருந் துயரமாக உருவெடுத்து என் உள்மனதை உறுத்தியது. படுக்கையில் மல்லாந்து சாய்ந்தேன். மேலே சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியைப் போலவே, என் சிந்தனையும் அந்தச் சோக அனுபவத்தைச் சுற்றியே சுழலத் தொடங்கியது.

அப்பொழுது மதுரையில் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் எனக்கு வேலை. ‘மலர்’ தயாரிப்பு சம்பந்தமாக ஒரு நாள் இரவு நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது.

“சுமதி, இன்னிக்கி வீடு திரும்ப நேரமாகும். அலுவலகத்திலேயே தங்க வேண்டியிருக்கலாம். என்னை எதிர்பார்க்காம சாப்பிட்டுப் படுத்துடு” என்று சொல்லிவிட்டு அலுவலகம் போய்ச் சேர்ந்தேன்.

எதிர்பாராத வேறு அலுவல் காரணமாக, பத்திரிகை ஆசிரியர் அலுவலகம் வரவில்லை. இருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய பணி அது என்பதால் நானும் வீடு திரும்ப நேரிட்டது.

வீடு உள்ளே தாளிடப்பட்டிருந்தது. வழக்கமாகக் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து கதவைத் திறக்கும் என்னவள் நீண்ட நேரத் தாமதத்துக்குப் பிறகே கதவைத் திறந்தாள். அதுவே எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைவிடப் பேரதிர்ச்சியும் காத்திருந்தது.

சுமதியைத் தொடர்ந்து உள்ளே நான் நுழையும்போது, இருட்டில் சுவர் ஓரம் பதுங்கிப் பதுங்கி முகம் மறைத்த ஓர் உருவம் வெளியேறியது கண்டு நிலைகுலைந்தேன்.

விளக்கைப் போட்டேன். சுமதி முக்காடிட்டுப் படுக்கையில் சரிந்தாள். படுக்கையை ஒட்டிக் கீழே கிடந்த சில சிகரெட் துண்டுகள் எனக்கு என்னவள் செய்த துரோகத்தை உறுதிப்படுத்தின.

நான் ஆவேசம் கொண்டு துரோகம் இழைத்த என்னவளை அடித்து நொறுக்கவில்லை; கழுத்தை நெறித்துக் கொன்றுபோடவும் இல்லை. காரணம், ஓர் ஓவியனுக்குரிய மிக மென்மையான குணங்கள் என்னுள் இரண்டறக் கலந்திருந்ததுதான்.

பேரதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தாலும் சிந்திக்கும் அறிவை நான் இழந்துவிடவில்லை. ஆழ்ந்து சிந்தித்ததன் விளைவாக, சராசரிப் பெண்ணான சுமதியை ‘அது’ விசயத்தில், ‘இது போதும்’ என்று அவள் நினைக்கும் அளவுக்குக்கூட திருப்தி படுத்தாத தவற்றை என்னால் உணர முடிந்தது. 

அவளின் புற அழகைச் சுவைக்கும் ரசிகனாக வாழ்ந்தேனே தவிர, அவளுக்குள் அடங்கிக் கிடந்த அளவிறந்த தாப உணர்ச்சிகளை அறிந்துகொள்ள முயன்றதே இல்லை. ஆகவே, அவளைத் தண்டிக்கும் உரிமை எனக்கில்லை என்பதையும் நான் உணர்ந்துகொண்டிருந்தேன். ஆனாலும், சாக்கடையில் விழுந்துவிட்ட மலரைச் சட்டையில் சொருக்கிக்கொள்ளவும் நான் தயாராக இல்லை.

விரக்தி முழுமையாக என் நெஞ்சை ஆக்கிரமிக்க, மனைவியையும் பிறந்து வளர்ந்த ஊரான மதுரையையும் துறந்து சென்னையில் குடியேறினேன்.
கவலையை மறக்க ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டேன். சில ஆண்டுகளில் நாடறிந்த ஓவியனும் ஆனேன்.

கட்டியவளைப் பிரிந்த ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு சென்னையில் குடும்ப நண்பர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. என்னைக் கண்டதும், “மகிழ்ச்சி...பாராட்டுகள்” என்று கை குலுக்கினார்.

“எதற்கு?” என்றேன் புரியாமல்.

“உங்களுக்கு மகன் பிறந்திருக்கிறான்” என்றார் அவர். எங்கள் பிரிவுக்கான உண்மைக் காரணம் அவருக்குத் தெரியாது. ஏன், என்னையும் அவளையும் அந்த மூன்றாம் நபரையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது.

மகிழ்வதற்குப் பதிலாக மனம் கலங்கினேன். பிள்ளை பிறந்திருக்கிறான், அதாவது, நான் தாலி கட்டியவள் ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்திருக்கிறாள். சரிதான். ஆனால், அந்தப் பிள்ளை எனக்கே எனக்குத்தான் பிறந்தான் என்பது என்ன நிச்சயம்?

மனதைக் கல்லாக்கிக் கொண்டேன். நிர்ச்சலனமாய் இயங்கிக்கொண்டிருந்தேன்.

அந்தப் பிள்ளையை... நான் தாலி கட்டியவள் பெற்ற பிள்ளையைக் காணும் முயற்சியில் நான் ஈடுபடவே இல்லை. அதற்கான வாய்ப்பும் ஏற்படவில்லை.
பழையவை பற்றிய சிந்தனையிலிருந்து மீண்டும் விடுபட்டேன். என் எண்ணமெல்லாம் அடுத்த அறை வாலிபனைப் பற்றியே இருந்தது. ஒரு நெருங்கிய நண்பரைச் சந்திக்க பெங்களூர் வந்த இடத்தில் இப்படியான ஓர் அனுபவம் வாய்க்கும் என்று நான் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை.

பக்கத்து அறையில் அவன் பேசுவது கேட்டது.

“சரிடா, நீ ரொம்பத்தான் களைச்சுப் போயிருக்கே. ரெஸ்ட் எடுத்துக்கோ. இங்கே ஓவியக் கண்காட்சி நடக்குது. பார்த்துட்டு வர்றேன். திரும்பி வர்றதுக்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும். வரட்டுமா?”
கதவு சாத்தப்படும் ஓசை. 

மல்லாந்து படுத்துச் சிந்தனையில் ஆழ்ந்தேன். என் நினைப்பை முழுமையாக அவன் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தான். 

பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. மீண்டும் பக்கத்து அறையில் பேச்சுக்குரல். பெண்ணின் குரலோடு ஓர் ஆணின் குரலும் கேட்டது. செவியைக் கூர் தீட்டினேன்.

“நாங்க இங்க வந்தது உனக்கு எப்படித் தெரிஞ்சுது?” -அவள் ஆவலுடன் கேட்டாள்.

“வியாபார விசயமா வந்து ஒரு வாரம் போல இந்த விடுதியில்தான் தங்கியிருக்கேன். பக்கது அறைதான். நீங்க உள்ளே நுழையும்போதே பார்த்துட்டேன். இப்போ உன் புருசன் வெளியே போறதையும் பார்த்துட்டுத்தான் உன்கூடப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன். ஜாலியா உல்லாசப் பயணம் வந்திருப்பீங்க போலிருக்கு” என்றான் அவன்.

“ஜாலியா இருக்கலாம்னுதான் கூட்டிட்டு வந்தாரு. வந்த இடத்தில் போஸ் குடு குடுன்னு உயிரை எடுத்தார். மாட்டேனுட்டேன். ஓவியக் கண்காட்சி நடக்குதாம் பார்த்துட்டு வர்றேன்னு போயிருக்காரு. ஓவியம் ஓவியம்னு பித்துப் பிடிச்சி அலையுறாரு.”

“பித்தும் வெறியும் இருந்தாத்தானே பெரிய ஓவியராப் புகழ் பெற முடியும்?” என்ற அவனின் குரலில் நக்கல் தொனித்தது.

“இப்படிப் பித்துப் பிடிச்சி அலையறவருக்கு எதுக்குக் கல்யாணம்? இவர் தன் அப்பாவை நினைச்சாவது பாடம் கத்துகிட்டிருக்கணும்.”

“நீ யாரைச் சொல்லுறே?”

“இவரைப் பெத்த அப்பா, அதாவது என் மாமனாரைச் சொல்லுறேன். பிரபல ஓவியர் சந்திரமோகனைச் சொல்லுறேன். கட்டிய பெண்டாட்டியைச் சந்தேகப்பட்டதால ஓடிப்போனவர் அவர். நடந்ததை எல்லாம் இவரோட அம்மாவே சொல்லியிருக்காங்க. சரி...சரி...கண்ட கதையைப் பேசி ஏன் நேரத்தை வீணாக்கணும்? போன அந்த ஆள் திரும்பி வர்றதுக்குள்ளே.....”

அதன் பிறகு இருவருக்கும் இடையேயான சல்லாப மொழிகளைக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை. அறையைச் சாத்திக்கொண்டு ஓவியக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்த இளைஞனைச் சந்திக்கப் புறப்பட்டேன்.

கட்டிய மனைவியை யோக்கியமானவள் என்று நம்பி ஏமாந்த அந்தக் ஓவியக்கலைப் பித்தன்  என் மகன்தான்...என் மகனேதான். இனி என்னுடனேயே அவன் வாழ்வான்; வளர்வான்; என்னைப் போலவே புகழ் பெறுவான்.
========================================================================

வியாழன், 17 ஜனவரி, 2019

''ரெண்டையும் அறுத்துடு''...[மிகப்]பழைய கதை]

நான் படைத்த ஒருபக்கக் கதைகளில் மிகப் பல  வாசகரைப் பெற்ற கதை இது. பெரும் எண்ணிக்கையில் மேலும் பலர் வாசிக்கக்கூடும் என்பதால் மீள்பதிவாக வெளியிடுகிறேன்.

ஜோலார்ப்பேட்டை – ஈரோடு பயணியர் ரயில் வண்டி பொம்மிடி தாண்டி, தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது.

கண்களுக்கு விருந்தாகிக் கண நேரத்தில் காணாமல் போகும் மலை சார்ந்த காடுகளையும் வயல்வெளிகளையும், இருக்கையில் சாய்ந்தவாறு ‘பராக்கு’ப் பார்த்துக்கொண்டிருந்த தேவகி, வலது கால் பாதம் ‘நறுக்’ என்று மிதிக்கப்பட்டதால், காலைப் பின்னுக்கு இழுத்ததோடு, திடுக்கிட்டுப் பார்வையை உள்ளுக்கிழுத்தாள்.

முந்தானை சற்றே விலகியிருந்த தன் ஒரு பக்கத்து மார்பகத்தை எதிரே அமர்ந்திருந்த மாதவன் முறைத்துப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தாள்.

“ஏய்யா என் காலை மிதிச்சே?” என்று கேட்டாள்.

“காத்து வாங்குது. இழுத்து மூடுடி” என்றான் அவன்.

மாராப்பை இழுத்து மூடுவதற்கு மாறாக, அவன் மீது அலட்சியப் பார்வையை வீசிவிட்டு, மீண்டும் இயற்கையழகை ரசிக்கத் தொடங்கினாள் தேவகி.
‘நறநற’வென்று பற்களைக் கடித்தான் மாதவன்.

வீடு போய்ச் சேர்ந்ததும், “உன்கிட்ட ஒன்னு கேட்கணும். டீ கொண்டா” என்று உத்தரவிட்டான்.

தேனீருடன் வந்த தேவகியின் இன்னொரு கையில் நீண்டதொரு அரிவாளும் இருந்தது.

“நீ என்ன கேட்கப் போறேன்னு எனக்குத் தெரியும். சேலை கட்டுற ஒரு பொம்பள எல்லா நேரமும் இழுத்து இழுத்துப் போர்த்திகிட்டு இருக்க முடியாது. கவனக்குறைவா இருக்கும்போது மாராப்பு விலகத்தான் செய்யும். கட்டுன புருஷனா இருந்தாலும் இதைக் கண்டுக்காம இருக்கணும். அப்படி இருக்க உன்னால முடியாது. நமக்குக் கல்யாணம் ஆன இந்த ஒரு வருசத்தில் ஒரு நூறு தடவையாவது “இழுத்து மூடு’’ன்னு சொல்லியிருப்பே. ஒன்னு செய். உன் கையால என்னோட ரெண்டு கொங்கையையும் அறுத்துப் போட்டுடு. அப்புறம் உனக்கு எப்படியோ, எனக்கு நிம்மதி கிடைச்சுடும்.”

தேனீர்க் குவளையை ஒரு புறம் வைத்துவிட்டு அரிவாளை மட்டும் நீட்டினாள் தேவகி.

“என்னை மன்னிச்சுடு தேவகி” என்று சொல்ல நினைத்தான் மாதவன். ஆனால், சொல்லவில்லை; ஆழ்ந்த யோசனையுடன் சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.
================================================================================