செவ்வாய், 22 ஜூன், 2021

அறுபதிலும் ஆசைப்படலாம்!!![கண்களைக் குளமாக்கும் குடும்பக் கதை!]

சற்றே பெரிய சிறுகதை. ஒரே மூச்சில் படித்து முடிக்கலாம். உணர்வு சலித்தால், என்னைத் திட்டாமல் விடுபடுவதில் தவறேதும் இல்லை!

                                                 *  *  *

சக்காளிபாளையம் கிராமத்தின் வடக்குத் திசையில், அரை ஏக்கர் மானாவாரி விவசாய நிலத்தில் இருந்தது கிழக்குப் பார்த்த அந்த  வீடு; பனை ஓலை வேய்ந்தது; பல தலைமுறை கண்டது. செம்மண் குழைத்து எழுப்பப்பட்டிருந்த சுற்றுச் சுவர் ஆங்காங்கே சிதைந்திருந்தது.

வீட்டின் வலப்புறம் இருந்த வாதநாராயண மரத்தடியில் கன்று ஈன்ற பசு மாடு ஒன்று அசைபோட்டுப் படுத்திருக்க, இடப்பக்கம் இருந்த வேம்பின் நிழலில் வெறும் கயிற்றுக் கட்டிலில் அசைவின்றி மல்லாந்து கிடந்தார் நாச்சியப்பன்.

தாட்டிகமான கறுத்த தேகம் நாச்சியப்பனுக்கு. முக்கால் பங்கு நரைத்த தலைமுடியும், சற்றே உலர்ந்து சுருங்கிய சருமமும்தான் அவர் அறுபதைக் கடந்தவர் என்பதற்குச் சாட்சியம் அளித்தன.

ஒரு முழுநாள் பட்டினி. இரவெல்லாம் கண் விழித்திருந்த சோர்வு. தீராத மன உளைச்சல். இவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம் காரணமாக அன்றாடக் கடமைகளை மறந்து உயிரற்ற சவம் போல நீட்டிப் படுத்திருந்தார் நாச்சியப்பன். மூடியிருந்த இமைகளுக்குள் தெரிந்த கருமணிகளின் பிறழ்வும், அவ்வப்போது இழுத்து விடப்பட்ட பெருமூச்சு காரணமாக எழுந்து தாழ்ந்த நெஞ்சுக்கூடும் அவர் உறங்கவில்லை என்பதற்குக் கட்டியம் கூறின.

“ஐயா, நேத்துப் பூரா எதுவும் சாப்பிடல. இப்பவும் பொழுது சாஞ்சிடிச்சி. ஒரு டீத்தண்ணிகூடக் குடிக்கல. ஒடம்பு தாங்குமா?” -கட்டிலை ஒட்டிக் கட்டாந்தரையில் உட்கார்ந்திருந்த மாரியம்மா கேட்டாள்.

நாச்சியப்பனிடமிருந்து பதில் இல்லை. அதிகபட்சக் கோபத்திலோ மிகையான வருத்தத்திலோ இருக்கும்போது கேட்ட கேள்விக்கு அவரிடமிருந்து சற்றுத் தாமதமாகத்தான் பதில் வரும் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்திருந்ததால் அவர் பதிலுக்காகக் காத்திருந்தாள்.

ஒரு நிமிடம் போல மௌனத்தில் கரைத்துவிட்டு வாய் திறந்தார் நாச்சியப்பன். “நான் என்ன வீம்புக்கா சாப்பிடாம இருக்கேன். பசி எடுக்கல புள்ள. அவன் பேசின பேச்செல்லாம் நீ கேட்டுட்டுத்தானே இருந்தே. நீயெல்லாம் ஒரு அப்பனான்னு கேட்டானே, என் உசுரு போறவரைக்கும் அது மறக்குமா? இருந்த நிலத்தையெல்லாம் உங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்தேன். வெளியூர்ல இருக்கிற நீங்க அதையெல்லாம் வித்துக் காசு பண்ணிட்டீங்க. எனக்குன்னு அரை ஏக்கர் நிலமும், அஞ்சு லட்சம் பணமும் மட்டும்தான் இருக்கு. அதுவும் நான் செத்தப்புறம் உங்களுக்குத்தானேன்னு நான் சொன்னதுக்கு, நீ எப்பச் சாகுறது, நாங்க எப்பப் பணத்தைக் கண்ணால பார்க்குறதுன்னு கேட்டானே, அதுக்கு என்ன அர்த்தம்? சீக்கிரம் செத்துத் தொலையடா கிழவாங்கிறதுதானே? இப்படியே பட்டினி கிடந்து செத்துடலாம்னு தோணுது.” -நனைந்த துணிப் பந்தாய்த் துக்கம் தொண்டையை அடைக்க, பார்வையை உயர்த்தி மரக் கிளைகளை வெறித்துப் பார்த்தார் நாச்சியப்பன். அப்போதைய மன நிலையில், தன் முகம் பார்த்துப் பேசினால் அவர் பொங்கி அழுதுவிடுவார் என்பது மாரியம்மாவுக்குத் தெரிந்தே இருந்தது.

“காலம் மாறிப்போச்சி ஐயா. இந்தக் காலத்துப் புள்ளைகளுக்குப் பெத்தவங்களை மதிக்கத் தெரியல. பணம் காசுக்காக அடிச்சி ஒதைக்குறாங்க. கொலைகூடப் பண்ணிடறாங்க. நம்ம புள்ளைக எவ்வளவோ தேவலாம். மனசைத் தேத்திக்கோங்க” என்றாள்.

“அடிச்சி ஒதைச்சிக் கொன்னு போட்டுட்டாக்கூடப் பரவாயில்லை. ஒரேயடியாப் போய்ச் சேர்ந்துடலாம். வார்த்தையால வதைக்கிறாங்களே, அதைத் தாங்கிக்க முடியல புள்ள. போன வாரம் வந்துட்டுப் போன பெரியவனும் நேத்து வந்த சின்னவன் சொன்னதையேதான் சொன்னான். அதோட நிக்கல. காலம் போன கடைசியில் உனக்குக் காசுப்பித்து தலைக்கேறிடிச்சி. என்கிட்ட இருக்கிற பணம் என் சொந்தச் சம்பாத்தியம்னு சொல்லிட்டுத் திரியறே. நீ சம்பாதிச்ச பணத்தை நாளைக்குப் பாடையில் போறப்ப ஒரு கோணிச்சாக்கில் கட்டிக் கையோட எடுத்துட்டுப் போயிடுன்னு நக்கல் பண்ணினானே. என் மனசு என்ன பாடு படுது தெரியுமா? உனக்கு நல்ல சாவு வராது. செத்தா நரகத்துக்குத்தான் போவேன்னு சாபம் வேற கொடுத்தான். அப்பனுக்கு மவன் சாபம் குடுத்தா அது பலிக்குமா மாரியம்மா? கேட்டுவிட்டு ஒரு குழந்தை போலத் தேம்பி அழுதார் நாச்சியப்பன்.

துடித்துப்போன மாரியம்மா, எழுந்து நின்று முந்தானையால் அவர் கன்னங்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்தாள். அவரது இரு கரங்களையும் பற்றி எடுத்துத் தன் கரங்களுடன் பிணைத்துக்கொண்டு சொன்னாள்: “தைரியமா இருங்க. உங்க நல்ல மனசுக்கு எப்பவும் நல்லதே நடக்கும். எல்லார்த்தையும் நாம கும்புடுற சாமி பார்த்துக்கும். மோர் குடிங்க. கொஞ்ச நேரத்தில் 'களி'ச்சோறு கிளறிக் கடுப்பான் அரைச்சுடுறேன்” என்று சொல்லி ஒரு பித்தளைத் தம்ளர் நிறைய மோர் கொண்டுவந்து கொடுத்தாள்.

மாரியம்மாவின் குடும்பம், விவசாயத் தொழில் செய்து வயிறு வளர்த்த பரம்பரையைச் சார்ந்தது.

பத்தாவது ஃபெயில் ஆனதும் அம்மாக்காரியுடன் தோட்ட வேலைகளுக்குச் சென்றாள் அவள். கல்யாணம் ஆன பிறகும் அது நீடித்தது.

ஒரு வேன் பயணத்தின்போது ஏற்பட்ட விபத்தில் பெத்தவங்களையும் கட்டிய புருஷனை இழந்தாள் மாரியம்மா. அவளுடைய ஒரு கால் ஊனமானது. மற்றவர்களுக்கு ஈடு கொடுத்து வேலை செய்ய முடியாததால் பண்ணையாளர்களால் அவள் புறக்கணிக்கப்பட்டாள். பிழைப்புக்கு வேறு வழியில்லாமல் அவள் தவித்தபோது, “தோட்ட வேலையோ வீட்டு வேலையோ சொல்லுறதைச் செஞ்சிட்டுப்போ. மாசச் சம்பளம் தர்றேன். தினமும் வந்துடு” என்று ஆதரவுக்கரம் நீட்டினார் நாச்சியப்பன்.

அவர் மனைவி இறந்த பிறகு அவர் வீட்டு முழுநேர வேலைக்காரி ஆனாள் மாரியம்மா. நாள் முழுக்க அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து முடித்தே தன் வீடு திரும்புவாள்.

சுத்தமான பாலுக்காக ஒரு பசு மாட்டைத் தன் பொறுப்பில் பராமரித்து வந்தார் நாச்சியப்பன்.

அன்று வழக்கம்போல, பசுவை மேயவிட்டு வீடு திரும்பியபோது, அவரின் மகள் சாந்தி மாரியம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

“வாம்மா, ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றார்.

“நாங்க எல்லாம் நல்லாவே இருக்கோம். நீங்கதான் ரொம்ப மன வருத்தத்தில் இருக்கீங்க போல” என்றாள் சாந்தி.

பதில் பேசாமல், மாட்டுக்குத் ‘தாழித் தண்ணி’ காட்டி, மரத்தில் கட்டிவிட்டு வந்தார் நாச்சியப்பன்.

“தம்பிமாருங்க வந்தாங்களா?” என்றாள் சாந்தி.

"வந்தாங்க.”

"வீட்டடோடு இந்த நிலத்தையும் வித்துட்டு அவங்களோட இருந்துடச் சொன்னாங்களாமே?”

“நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்,”

“ஏம்ப்பா?”

“ஆறுபது வருசத்தை இங்கே கழிச்சுட்டேன். இன்னும் கொஞ்ச காலம்... ஓட்டமா ஓடிடும். என் அப்பாவையும் தாத்தாவையும் குளிப்பாட்டின இந்த மண்ணு வாசல்லியே என்னையும் குளிப்பாட்டணும். அவங்கள எரிச்ச சுடுகாட்டிலேயே என்னையும் சுட்டுச் சாம்பலாக்கணும். இதெல்லாம் என் அந்திமக்கால ஆசை. அதோட, பட்டணத்துப் பொழப்பு எனக்குச் சரிப்பட்டு வராது. தினமும் ரெண்டு வேளை சாப்பிடுறேன். மத்தியானம் கம்மஞ்சோறோ ராகிக் களியோ சாப்பிடுறேன். இந்தக் கம்மஞ்சோத்தையையும் களியையும் என் ரெண்டு மருமகளும் கண்ணில் பார்த்திருக்கவே மாட்டாங்க.....”

சிக்கனமாய்க் கொஞ்சம் சிரித்துவிட்டுத் தொடர்ந்தார். “வெய்யக் காலத்துல, கட்டுன கோமணத்துணியோட வேப்ப மரத்தடியில் கட்டில் போட்டுப் படுத்திருப்பேன். ஒரு பக்கம் குளுகுளுன்னு வீசுற காத்து. இன்னொரு பக்கம் கமகமன்னு மாட்டுச் சாணத்தோட வாசம். இதெல்லாம் பட்டணத்துக்குப் போனா கிடைக்காதும்மா. சாகறமுட்டும் இந்தப் பட்டிக்காட்டை விட்டு நகர மாட்டேன்னு அவனுங்ககிட்டே அடிச்சிச் சொல்லிட்டேன்.”

“உங்க பேங்க் பணத்தைக் கேட்டாங்களாம். தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களாம். அது தப்பில்ல. ஏன்னா, அதில் மூனில் ஒரு பங்கு எனக்குச் சேர வேண்டியது.”

மௌனம் பாவித்தார் நாச்சியப்பன்.

“அப்பா, நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும். செய்வீங்களா?”

“சொல்லு. சொன்னாத்தானே முடியுமா இல்லையான்னு சொல்ல முடியும்.”

“உங்களால முடியும்ப்பா. நாங்க எங்க வீட்டுக்கு அடுத்து இருக்குற வீட்டு மனையை விலை பேசி முடிச்சுட்டோம். அடுத்த மாசம் கிரையம். கொஞ்சம் பணம் பத்தல. அஞ்சோ ஆறோ உங்க பணம் பேங்குல இருக்கில்லையா? அதை இப்போ கடனாக் குடுங்க. வட்டி போட்டு அடுத்த வருசமே திருப்பித் தந்துடறேன்” என்றாள் சாந்தி.

“வூட்டுச் செலவு, மருந்து மாத்திரைச் செலவு, மாரியம்மாவுக்குச் சம்பளம்... இப்படியான செலவையெல்லாம் மாசாமாசம் வர்ற வட்டியை வாங்கித்தான் சமாளிக்கிறேன். இருக்கிற பணத்தைக் கொடுத்துட்டு யார்கிட்டே கையேந்தி நிப்பேன்? பணத்துக்கு வேற ஏற்பாடு பண்ணும்மா” என்றார் நாச்சியப்பன்.

சிறிது நேரம் அப்பனையே வைத்த கண் வாங்காமல் பார்த்த சாந்தி, “பெத்த புள்ளைங்க மேல உங்களுக்குப் பாசம் இல்ல. பணம் இன்னிக்கி வரும்; நாளைக்குப் போகும். நீங்க செத்தப்புறம் உங்க பணம் உங்களைச் சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போகாது. உங்க புள்ளைகதான் பாடை சுமக்கணும். ஞாபகம் வெச்சுக்குங்க.” -சொல்லிவிட்டு, விடுவிடென கேட்டைத் தள்ளிக்கொண்டு வெளியேறினாள்.

"மாமா, எழவுக்கு வர்றியா?” -பொளியில் எருதுகளை மேயவிட்டு, மம்மட்டியால் வாய்க்காலைச் சுத்தம் செய்துகொண்டிருந்த தங்கமுத்து குரல் வந்த திக்கில் பார்வையை ஓட்டினார்.

பத்தடி தள்ளி, ஒத்தையடிப் பாதையில் பாழிக்காட்டு வேலுச்சாமி நின்றுகொண்டிருந்தான்.

“எழவா? யாருடா மாப்ள?” என்றார் தங்கமுத்து.

“நம்ம நாச்சியப்பன்.”

“பெரிய பண்ணாடி நாச்சியப்பனா? நல்லாத்தானே இருந்தாரு. முந்தா நாளு டவுனுல பார்த்தனே.”

“நெறயத் தூக்க மாத்திரை முழுங்கியிருக்காரு. மிச்சம் மீதி தரையில் சிதறிக் கிடந்துச்சாம்.”

“ஏன் இப்படிப் பண்ணினாரு. ரொம்பத் தெகிரியசாலியாச்சே.” 

“போற நேரம் வந்தா தெகிரியமும் போயிடும். நாலு நாள் முந்தி, மவளும் மவனுகளும் வந்து பேங்க் பணத்தைக் குடுக்கச் சொல்லி தகராறு பண்ணியிருக்காங்க." 

“இவங்க மூனு பேரும்தானே வாரிசு. இவரு பணம் எங்கே போயிடப் போகுது?”

“அதுவல்ல விசயம். நாச்சியப்பன் சம்சாரம் பவளாயி செத்ததுக்கப்புறம், ரெண்டு மூனு வருசமா மாரியம்மாதான் வீட்டு வேலையெல்லாம் செய்துட்டிருக்கிறா. அவள் மேல இவங்களுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்திருக்கு. அவள அப்பன்கிட்ட இருந்து பிரிக்கத் திட்டம் போட்டாங்க. நாச்சியப்பன் கண் முன்னாலயே, ‘எங்கப்பனைக் கைக்குள்ள போட்டுகிட்டுப் பணத்தையெல்லாம் நீ சுருட்டப் பார்க்கிறே’ன்னு பழி சுமத்துனாங்களாம். ஆளாளுக்குத் திட்டித் தீர்த்துட்டுப் போனாங்களாம்."

"அப்புறம்?" -ஆவல் பொங்கக் கேட்டார் தங்கமுத்து.

"உன் மேல வீண் பழி சுமத்திட்டாங்க. இனியும் இங்க இருக்க வேண்டாம். ரெண்டு லட்சம் மட்டும் வெச்சிகிட்டு மூனு லட்சத்தை உனக்குத் தர்றேன். கடை கண்ணி வெச்சிப் பிழைச்சிக்கோ. நான் கிழவன். தனியாவே காலத்தைக் கழிச்சிடுறேன்னு சொல்லியிருக்கார் நாச்சியப்பன்....."

சற்றே இடைவெளி கொடுத்துத் தொடர்ந்தான் வேலுச்சாமி, "சொந்தபந்தம்னு யாருமே எனக்கு உதவாதபோது நீங்கதான் எனக்கு அடைக்கலம் கொடுத்தீங்க. உங்க ஆயுசு முடியறவரைக்கும் உங்களைப் பிரிய மாட்டேன். இது சத்தியம். நீங்க சம்மதிச்சா, முழு நேரமும் உங்களோடவே இருந்துடுறேன்னு சொல்லியிருக்கா மாரியம்மா....."

இடைமறித்தார் தங்கமுத்து, "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிஞ்சுது?"

"எனக்கு மட்டுமில்ல, இந்த ஊருக்கே தெரியும். 'நான் பெத்த பிள்ளைகளே, நான் மாரியம்மாவை வெச்சிருக்கேன்னு பழி சுமத்திட்டாங்க. யார் என்ன சொன்னாலும் உங்களைப் பிரிஞ்சி போக மாட்டேன்னு மாரியம்மா சொல்லிட்டா. அதனால, கோயிலுக்குக் கூட்டிட்டுப் போயி அவளைக் கல்யாணம் கட்டிகிட்டேன்'னு நெருக்கமானவங்ககிட்டே நாச்சியப்பனே சொல்லியிருக்கார்."

"அவர் அவளைக் கட்டிகிட்டார்னு நானும் கேள்விப்பட்டேன். அது இருக்கட்டும், நாச்சியப்பன் எப்படிச் செத்தார்? அதை முதலில் சொல்லுடா."

"கல்யாணம் ஆகி ஆறு மாசம் போல நாச்சியப்பனும் மாரியம்மாவும் சந்தோசமாகத்தான் குடும்பம் நடத்துனாங்க. நேத்திக்கு அதிகாலை நேரத்துல, தங்கச்சி புருசனோடு வந்த ரெண்டு மகன்களும் கண்மண் தெரியாம இவங்க ரெண்டுபேரையும் அடிச்சி உதைச்சிருக்காங்க; 'ரெண்டு நாள் கழிச்சி வருவோம்.  இங்க உன்னைப் பார்த்தா வெட்டிப் போட்டுடுவோம்'னு மாரியம்மாளை மிரட்டிட்டுப் போயிருக்காங்க. அவங்க புறப்பட்டுப் போன கொஞ்ச நேரத்துலயே, நாச்சியப்பனும் மாரியம்மாவும் தூக்க மாத்திரைகளை முழுங்கிட்டுத் தற்கொலை பண்ணிட்டாங்க. நாச்சியப்பனுக்குப் பக்கத்து நிலத்துக்காரர் எனக்குக் கொஞ்சம் முன்னால போன் பண்ணினார்."

"ரொம்ப நல்ல மனுசன். போய்ச் சேர்ந்துட்டார்" என்றார் தங்கமுத்து.

"மாரியம்மாவை அவர் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது. வயசான காலத்துல புத்தி கெட்டுப்போச்சு" என்றான் வேலுச்சாமி.

"புத்தி கெடுல. நல்ல புத்தியோடுதான் கல்யாணம் கட்டியிருக்கார். அவரோட மனநிலையில் நான் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பேன். அவர் செய்த ஒரு தப்பு, பெத்த புள்ளைகளால ஆபத்து நேரும்னு எதிர்பார்த்துப் போதுமான பாதுகாப்போடு இருந்திருக்கணும்; அடி உதை பட்ட பிறகாவது போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணியிருக்கணும். தற்கொலை பண்ணிகிட்டதுதான் அவர் செஞ்ச தப்பு. அந்த நல்ல மனுசனைக் கடைசியா ஒரு தடவை பார்க்கத்தான் வர்றேன். அந்த நாய்கள் இருந்தா  அவனுங்ககிட்ட துக்கம் விசாரிக்க மாட்டேன்” என்று சொல்லி தங்கமுத்து நடந்தார். வேலுச்சாமி அவரைப் பின்தொடர்ந்தான்.

====================================================================================