திங்கள், 18 ஜனவரி, 2016

மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா?

மனித உடலின் ‘ஸ்டெம் செல்’[Stem Cell - 'an undifferentiated cell of a multicellular organism that is capable of giving rise to indefinitely more cells of the same type, and from which certain other kinds of cell arise by differentiation.
Each of the stem cells then divided into two cells - a stem cell and a nerve cell...']களைக் கையாள்வதில் முழு வெற்றி கண்டால், ஆயிரம் ஆண்டுகள் என்ன அதற்கு மேலும் வாழ்ந்து காட்டலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்!
நம் விரல் துண்டானால் திரும்ப வளர்கிறதா? இல்லை. ஆனால், ஒரு பூவரச மரத்தையோ வேப்ப மரத்தையோ வெட்டினாலும் அது துளிர்த்துவிடுகிறது. ரோஜாச் செடியைப் பதியன் போட்டால் அதிலிருந்து புதிய செடி முளைக்கிறது. 

இந்த அதிசயம் நிகழ்வதற்குக் காரணம் தாவரங்களின் ‘ஸ்டெம் செல்’தானாம்.

தாவரங்களைப் பொருத்தவரை, புதிய புதிய செல்கள் உருவாவதும் அழிவதும் நிகழ்ந்துகொண்டே இருந்தாலும்  தாய் அணுக்களுக்கு[?] எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லையாம். இது, தாவர ஸ்டெம் செல்களுக்குரிய தனிச் சிறப்பு.

மனிதர்களின் கண் செல்கள் மற்றும் தோல் செல்களை வெளியே எடுத்து, தாவரங்களின் ஸ்டெம் செல் டெக்னாலஜியைப் பயன்படுத்தி வளரவைக்க முடியுமா என்று ஆராய்ந்து வெற்றி கண்டிருக்கிறார்களாம் விஞ்ஞானிகள். இதன் விளைவாக..........

ஆரோக்கியமான கண்ணிலிருந்து ஸ்டெம் செல்லை வெளியே எடுத்து, ஆய்வுக்கூடத்தில், ரசாயன திரவத்தில் வைத்து வளர்த்து, அது நன்கு வளர்ந்ததும்..........

மனிதனின் பார்வை இழந்த கண் செல் நீக்கப்பட்டு. வளர்க்கப்பட்ட செல் அங்கே பொருத்தப்பட்டால் பார்வை கிடைக்கும் என்று நம்புகிறார்களாம் விஞ்ஞானிகள்.

தீ விபத்தில் தோல் பாதிக்கப்பட்டால், இதே முறையில் அதைப் புதுப்பிக்க முடியுமாம்; இவ்வாறே, சேதமடைந்த எந்தவொரு உறுப்பையும் புதுப்பித்தல் சாத்தியம் என்கிறார்கள். 

ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இதையெல்லாம் தாண்டி வெகு தூரம் வந்துவிட்டார்களாம் விஞ்ஞானிகள். ஆயுளை நீட்டிப்பதற்கான ஆய்வில் அவர்கள் மூழ்கியிருக்கிறார்களாம்.

முதுமை ஏன் வருகிறது?

பார்வை அணுக்களின் வீரியம் குறைந்தால்...சுவை அணுக்களின் வீரியம் குறைந்தால்...இப்படி, உடலின் எல்லா அணுக்களின் வீரியமும் குறைந்தால் ஒட்டு மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டு நாம் முதுமை எய்துகிறோம். 

அறுபது வயதான ஓர் ஆளின் எல்லா அணுக்களும் வீரியம் குறைந்து அவர் உடம்பு வத்தலும் தொத்தலுமாக இருக்கையில், நலிந்துபோன அத்தனை அணுக்களையும் தூக்கி வெளியே கடாசிவிட்டு, புதிய செல்களை உடம்பு பூராவும் நிரப்பிவிட்டால், அந்தக் கிழவர் 30 வயது இளைஞனாக மாறிவிடுவார்.

அந்த மாற்று அணுக்களுடன் சுமார் 30 ஆண்டுகளை ஓட்டினால், அவற்றின் வீரியமும் குறைந்துவிடும். இந்நிலையில் மீண்டும் செல் மாற்றம் நிகழ்த்தப்பட்டால், கிழவனாக மாறிய அவர் மீண்டும் இளைஞர் ஆவார். இப்படித் திரும்பத் திரும்ப, செல் மாற்றம் செய்வதன் மூலம் அவரால் ஆயிரம் ஆண்டுகளோ அவற்றிற்கும் மேலோ வாழ்ந்துவிட முடியுமாம்.

ஆனால்...ஆனால் என்ன.........

எல்லாம் ஆராய்ச்சி நிலையில்தான் உள்ளன. வெற்றிக்கோட்டைத் தொடுவதற்குப் பல நூறு ஆண்டுகள் ஆகலாம் என்று சொல்லி அசடு வழிகிறார்களாம் விஞ்ஞானிகள்!
==================================================================================================================================
இப்பதிவுக்கான சாரம், பத்தாண்டுகளுக்கு முந்தைய தினமலர்[10.04.2005] வாரமலரிலிருந்து சுட்டது .

இந்த இதழில், ‘நிதி’ என்னும் தலைப்பிலான என் கதையும் வெளியானது என்பது கொசுறுச் செய்தி. கதை, அத்தனை சுவையானதாக இல்லை என்பதால் அதைப் பதிவு செய்யவில்லை.

பிழை காணின் பொறுத்தருள்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக