அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

'அவாள்'களின் பொற்காலம்!!!

தமிழக வரலாற்றில், பிராமணர்களுக்கு மிக உயரிய பதவிகளும், சலுகைகளும், சர்வ சுதந்திரமும் வழங்கப்பட்டது சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்தான்.

கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றிப் பாதுக்காக்கப்பட்டார்கள் எனின், அது மிகையல்ல.

அன்று பெற்றிருந்த அதே கவுரவத்தை மீட்டெடுக்கத்தான் சில முன்னணி நாளிதழ்க்காரர்களும்,  ராஜாதி ராஜா, மாஜி சிரிப்பு நடிகர் போன்றோரும் கனவு காண்கிறார்கள்; கனவை நனவாக்க, ஒன்றிணைந்து அதிதீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு அன்று இவர்கள் பெற்றிருந்த அளப்பரிய செல்வாக்கை நினைவுகூரும் வகையில், 'கீற்று' தளத்தில் வெளியான கட்டுரையொன்றின் நகலைப் பதிவு செய்கிறேன்[கீற்றுக்கு நன்றி].

#"தமிழ்த்தேசியத்திற்கு முன்னோடி" "தமிழர்களின் பொற்காலம்" என்று வர்ணிக்கப்படுற இராஜராஜனைப் பற்றிய கல்வெட்டு ஆராய்ச்சி மற்றும் வரலாற்று அறிஞர்களின் நூல்களைப் பார்க்கும்பொழுது இராஜராஜசோழன் ஆட்சி தமிழர்களின் பொற்கால ஆட்சியாக இருக்கவில்லை பார்ப்பனர்களுக்கே அது பொற்காலமாக விளங்கியிருக்கிறது என்பது தெளிவாகிறது!

Rajaraja_chozhan_640

பார்ப்பனர்களைச் சேனாதிபதிகளாகவும், அவைத்தலைவர்களாகவும், அரியனையேற்றி அழகு பார்த்தவன் இராஜராஜன்! களப்பிரர்கள் காலத்தில் காயடிக்கப்பட்ட பார்ப்பன மேலாதிக்கம், மீண்டும் தலைவிரித்தாடியது இராஜராஜன் காலத்தில்! வரலாற்றுப் பெருமையாகச் சொல்லிகொண்டிருக்கும் தஞ்சைப்பெரிய கோவிலை எழுப்பும் பணியில்தான் புண்ணியம் தேடிக்கொள்வதற்காக இராஜராஜன் அப்பாவி மக்களை வாட்டி வதைத்திருக்கிறான்!.

அடிமைகள்!

சோழர்காலத்தில் அடிமை முறை இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன. தாசியின் மக்கள், பெற்றோரால் விற்கப்பட்டவர் போன்ற பலவகையான அடிமைகள்!. பொருளைப்போன்றே இந்த அடிமைகளும் விற்பனை மற்றும் இடமாற்றம் செய்யப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். விற்கப்படும் அடிமைகளுக்கு மாட்டைப்போல் சூட்டுக்கோல் அடையாளங்கள் இடப்பட்டிருக்கிறது. பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் "ஆள்விலை பிரமான இசைவுச்சீட்டு" என்று சொல்லப்பட்டிருக்கிறது. பல்லாயிரம் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி அவர்கள் உழைப்பில் தஞ்சைப் பெரிய கோவிலை எழுப்பிப் புண்ணியம் தேடிக்கொண்டான் இராஜராஜன்! .

கோவிலில் பணிபுரிந்தவர்களின் நிலங்கள் கூடப் பறிமுதல் செய்யப்பட்டு கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கிறது. தங்கள் நிலங்களை பறிகொடுத்தவர்கள் அரசை எதிர்த்துத் தீ குளித்த செய்தியைப் புஞ்சை செப்பேடுகள் கூறுகின்றன. 

தேவரடியார்கள்!

கோவிலில் பணிபுரிவதற்கென்று பெண்களை நியமனம் செய்தான் இராஜராஜன். தஞ்சைப் பெரிய கோவிலில் மட்டும் நானூறுக்கும் மேற்பட்ட பெண்களை நியமித்திருந்தான். அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை முற்றிலுமாக மறுக்கப்பட்டிருந்தது. அவர்கள் தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்டனர். கோவில் தளத்தைச் சுற்றித் தேவரடியார்களுகென்று தனிக்குடியிருப்புப் பகுதியை ஏற்படுத்தி அவை தளிச்சேரி என பெயரிடப்பட்டன. 

உலகமகா தேவியார், சோழ மாதேவியார், அபிமான வல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொடங்கியார், கூந்தன் விரானியார், இளங்கோன் பிச்சியார், என 15 க்கு மேற்பட்ட மனைவிமார்களை வைத்திருந்தவன் இராஜராஜன்!. 

வடமொழிக்கு வாழ்வு!

சோழர் காலத்தில் தென்னாற்காடு மாவட்டம் எண்ணாயிரம் எனும் ஊர் பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டு அங்கு வடமொழிகென்றே தனிக்கல்லூரி உருவாக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து செலவுத்தொகையும் அரசால் மான்யமாக வழங்கப்பட்டது. அங்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், பயின்ற மாணவர்கள் அனைவரும் பார்ப்பனர்களே! இக்கல்லூரிக்கென 300 ஏக்கர் நிலம் தானமாக அரசனால் வழங்கப்பட்டது. 

இதே போன்று வடாற்காடு மாவட்டம் கப்பலூர் கிராமத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் ஆனூரிலும் வடமொழிப் பாடசாலைகள் நிறுவப்பட்டன. புராணங்கள், இதிகாசங்கள், சோமசித்தாந்தம், ராமானுஜ பாடியம், மீமாம்ச வியாக்ரணம் போன்ற வடமொழி இலக்கியங்களே அங்கு பயிற்றுவிக்கப்பட்டன.

தமிழ்த்தேசிய சூரர்களால் தமிழ்தேசியத்தின் பிதாமகன் என்று சித்தரிக்கப்படும் இராசராசன் காலத்தில் தமிழ் மொழிக்கென எந்த ஒரு தனித்த பாடசாலையும் நிறுவப்பட்டதாக தெரியவில்லை!.

வலங்கை-இடங்கை!

வலங்கை இடங்கை குல வேறுபாடு ராஜராஜன் காலத்தில் ஓங்கியிருந்தது. இந்த இரண்டு பிரிவுகளிலும் இம்பெறாத தங்களை மேன்மக்களாக கருதிகொண்டிருந்த பார்ப்பனக்கூட்டம் வலங்கைப் பிரிவினரை ஏவிவிட்டு இடங்கைப் பிரிவினருக்கு எதிராகதொடர்ந்து கலகம் விளைவித்தது. இந்தக் கொடுமையைத் தாங்க இயலாமல், இடங்கை சாதியினர் ஒன்றுகூடி கண்டனத் தீர்மானம் இயற்றியதோடு,அரசுக்கு எதிராகப் போர்கொடி தூக்கிய நிகழ்ச்சிகள் நித்த வினோத வளநாட்டுக் காந்தார நாட்டைச்சேர்ந்த இராசமகேந்திர சதுர்வேதி மங்கலம் கிராமத்தில் (நித்த வினோத வளநாடு என்பது தற்போதைய பாபநாசம் நன்னிலம் பகுதிகள்) நடைபெற்றுள்ளது.

பார்ப்பனர்களை எதிர்த்துக் கலகம் செய்பவர்களுக்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் விதிக்கப்பட்டு கட்டத்தவறியவர்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

 குடவோலை முறை!

கிராமங்களில் குடவோலைமுறை இருந்தது. கிராமங்கள் பல குடும்புகளாகப் பிரிக்கப்பட்டு, குடும்பின் சார்பில் ஒரு ஆண் மகன் பிரதிநிதியாக நியமிக்கப்படுவான். அவனுக்குக் குறைந்த பட்சம் 1/4 வேலி நிலம் சொந்தமாக இருக்கவேண்டும். பார்ப்பனர்களுக்கோ 1/8 வேலி நிலம் இருந்தாலே போதும் என சலுகை காட்டப்பட்டது. அப்படிக் குடும்பின் சார்பில் நியமிக்கப்படும் பெயர்கள் தனித்தனியாகத் துண்டுக் காகிதத்தில் எழுதி ஒரு குடத்தில் இட்டு குலுக்கல் முறையில் சபையின் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்தச் சலுகையாலும் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் அவ்வப்போது  தானமாக வழங்கப்பட்டு வந்ததாலும், கிராமசபை அங்கத்தினராகப் பெரும்பாலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர்.

வேளாண்மக்களும், பார்ப்பனர்களும் அதிகம் வசித்த கிராமங்களில் இரண்டு சபைகள் தனித்தனியாக இயங்கிவந்தன. பார்ப்பனர்களின் விருப்பப்படி அத்தகைய கிராமங்களை ஒரே சபையின் கீழ் கொண்டுவரத் திட்டமிட்டான் இராஜராஜன். வேளாண் மக்கள் தங்கள் நிலங்களைப் பார்ப்பனர்களுக்கு விற்றுவிட வேண்டும் என்று உத்தரவிட்டு அதை நிறைவேற்றும் பொருட்டு அதிகாரிகளையும் நியமித்தான்.

 பார்ப்பனர்களின் பொற்காலம்!

பார்ப்பனர்களுக்கு பொன்னையும் பொருளையும், நிலபுலங்களையும் தானமாக வாரி வழங்கினான் இராஜராஜன்! பார்ப்பனர்களுக்கென்றே கிராமங்கள் பிரத்யேகமாகத் தானமாக வழங்கப்பட்டு, அகரம்,அக்கிரஹாரம், சதுர்வேதிமஙகலம், பிரம்மதேயம் என்று அழைக்கப்பட்டன . அப்படித் தானமாக வழங்கப்பட்ட பகுதியில் வசித்த பார்ப்பனர்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 

கோவில்களில் பறிமாறப்படும் உணவுப்பந்திகளில் பார்ப்பனர்களுக்கு முதலிடம் தரப்பட்டது. தஞ்சைப் பெருவுடையார் கோவில் விமானத்தின் தெற்குப்பக்கச் சுவரில் காணப்படும் கல்வெட்டு ஒன்றில் "காலம் 1014 சிறீ இராஜராஜன் -தஞ்சைப்பெருவுடையார் கோவிலுக்குச் சோழமண்டலத்திலும், பாண்டிய மண்டலத்திலும், தொண்டை நாடான ஜெயங்கொண்ட சோழமண்டலத்திலுமுள்ள "பிரம்மதேயங்களை" சேர்ந்தவர்கள் தங்கள் ஊரில் பண்டாரம் (பூசை) செய்வதற்குப் பிராமனர்களையும், திருபரிசாரகம் (சமையல்) செய்வதற்கு மாணிகளையும் (திருமணம் ஆகாதவர்கள்) கணக்கு எழுதக் கரணர்களையும், சந்திர ஆரியர்கள் உள்ளவரை நியமிக்க அனுப்ப வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பார்ப்பனர்கள் வாழும் பிரம்மதேயத்தில் வசிக்கக்கூடிய பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்குப் பூசை செய்யக் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டனர் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. 

கிராமசபைகளிலும் அரசின் முடிவுகளிலும் கூட, பார்ப்பனர்களின் அதிகாரம் கொடிகட்டியிருக்கிறது. அவர்களின் ஆலோசனைப்படியே தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது.

சூழ்ச்சியில் ஆட்சி!

இராஜராஜன் சுந்தர சோழனின் இரண்டாவது மகன். தனது சித்தப்பா மதுராந்தக உத்தம சோழனின் துணைகொண்டு ஆட்சியில் இருந்த மூத்த சகோதரன் ஆதித்ய கரிகாலன் கதையை முடித்திருக்கிறான். அந்தப்பழி தன்மீது விழாமல் இருக்க உடனடியாக தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்காமல், தண்டிக்கப்படவேண்டிய உத்தமசோழன் அரியணை ஏற ஆதரவுக்கரம் நீட்டினான்.

பிராமனர்களுக்கு மரணதண்டனை அளித்தால் அரசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்று சொல்லி ஆதித்ய கரிகாலன் கொலையில் உத்தம சோழனுக்கு உறுதுணையாக இருந்த பார்ப்பனர்களையும் தப்பவிட்டான்.

தான் அரியணை ஏறுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருந்த பார்ப்பனர்களுக்கு மிகுந்த விசுவாசத்தோடு இருந்திருக்கிறான் இராஜராஜன்!. பார்ப்பனர்களுக்குப் பொற்கால வாழ்வளித்த சூத்திர இராஜராஜனை அவன் கட்டிய கோவிலுக்குள்ளேயே நுழைய அனுமதிக்காமல் வெளியேற்றியிருக்கிறது பார்ப்பனீயம்!. இன்றளவும் பார்ப்பன அடிவருடிகளாக விளங்கிக் கொண்டிருக்கும் தமிழினத் துரோகிகளுக்குத் தஞ்சைப் பெரியகோவில் வெளியே நின்று காவல் காத்துக் கொண்டிருக்கும் இராஜராஜசோழன் சிலை ஒரு பாடமாக அமையட்டும்!#

============================================================

http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug19/3659-history1?start=225