வியாழன், 24 நவம்பர், 2016

ஜோதிடம்...கொஞ்சம் புரிதல்! கொஞ்சம் ஆராய்ச்சி!!

வானில் உள்ள கோள்கள் பலவும்[துணைக்கோள்கள் உட்பட] குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்றன்பின் ஒன்றாக வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
இவற்றில், ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது ஆகிய 9 கோள்களும் [இவற்றில் உள்ள முரண்பாடுகள் குறித்து 15.11.2016 தேதியிட்ட என்  பதிவில் http://kadavulinkadavul.blogspot.com/2016/11/blog-post.html குறிப்பிடப்பட்டுள்ளன] அடங்கும். அவற்றிற்குப் பின்னால் பெரும் எண்ணிக்கையில் நிலைகொண்டிருக்கும் நட்சத்திரக் கூட்டத்தை 12 பகுதிகளாகப் பிரித்தார்கள் ஜோதிட முன்னோடிகள்[9 க்குப் பதிலாக 12 ஆக ஏன் பகுத்தார்கள் என்பது புரியவில்லை!]. 12 பகுதிகளையும் 12 ‘வீடுகள்’ என்று அழைத்தார்கள். ஆக, ஒவ்வொரு கோளின் பின்னாலும் ஒரு வீடு இருப்பது அறியத்தக்கது[ஒரு கடிகாரத்தில் 12 முட்களும் 12 எண்களும் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். 12 முட்களின் பின்னணியில் 12 எண்கள் இருப்பது போல]   . இந்த வீடுகளைத்தான், ‘ராசி’, ‘ஓரை’, ‘மடம்’ என்று வேறு வேறு பெயர்களில் அழைத்தார்கள்; அழைக்கிறார்கள் ஜோதிடர்கள்.

ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பெயரும் சூட்டினார்கள்.

மேஷம்.   ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்றிவ்வாறு. 

பெயர் சூட்டியது எப்படி?

நட்சத்திரக் கூட்டங்கள் மனதில் எழுப்பிய கற்பனைகளுக்கு ஏற்பப் பெயர்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். எடுத்துக்காட்டு.....

மேஷம்[ஆடு என்று பொருள்.] 

பூமியின் நடுக்கோட்டுப் பகுதியில் நம் தலைக்குமேல் சூரியன் வரும் நாள் மார்ச் 23 ஆகும். அன்று உலகின் எல்லாப் பகுதிகளிலும் இரவும் பகலும் ஒரே அளவாக இருக்குமாம். அன்றுதான், ஆடுகளின் உணவான இலைகள் தளிர்க்கக்கூடிய ‘தளிர் காலம்’[Spring Season] தொடங்குகிறதாம். அதனால் மக்கள், ஞாயிறு[சூரியன்] தங்கியிருக்கும் வீட்டையே முதல் வீடாக[மேஷ ராசி]க் கொண்டார்களாம். இவ்வாறாக, மற்ற ராசிகளுக்கான பெயர் சூட்டுதலுக்கும் மனம்போனபடி கற்பனை செய்திருக்கிறார்கள்[பல முறை படித்தும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை].

12 பிரிவுகளாகப் பாகுபடுத்தப்பட்டு, வீடுகள் அல்லது ராசிகள் என்று அழைக்கப்பட்டு, மேஷம் முதலாகப் பெயரும் சூட்டப்பட்ட நட்சத்திரக் கூட்டங்கள் இருந்த இடத்திலேயே நிலைகொண்டிருக்கின்றன[ஜோதிட முன்னோடிகள்  நட்சத்திரங்கள் எல்லாம் ‘வானக் கூரையில்’ ஒட்டப்பட்டிருப்பதாக நம்பினார்கள்; எல்லா நட்சத்திரங்களும் ஒரே தொலைவில் இருப்பதாகவும் எண்ணினார்கள்]. 

பூமி சுழன்றபடி இருப்பதால், இந்த மேஷம் முதலான ராசிகள்[வீடுகள்] ஒன்றன்பின் ஒன்றாகக் கீழ்த் திசையில் எழுந்து உயர்ந்து, பின்னர் மேற்றிசையில் தாழ்ந்து மறைகின்றன[மறைவதுபோல் தோன்றுகின்றன].

ஒவ்வொரு ராசியும் எழுச்சிக் காலத்தில்[மேலே எழும்பும்போது] மிகுந்த ஆற்றல் பெற்றிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, ஒரு குழந்தை பிறக்கும்போது, எழுச்சி பெற்றிருக்கும் ராசி எது என்று ஜோதிடர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள்.

எழுச்சியில் இருக்கும் ராசியைத்தான் ‘லக்கினம்’ என்கிறார்கள்.

லக்கினத்தைப் பொருத்து, பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலம் அமையக்கூடும். ஒரே நேரத்தில் சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் கன்னி லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கும் வேறு வேறு குண நலன்கள் அமையக்கூடும் என்கிறார்கள்.

ஒரே நேரத்தில் பிறக்கும் பல ஆயிரம் குழந்தைகளின் லக்கினத்தைக் கணிப்பதில் பிழைகளே நேராமலிருக்குமா என்பதும் ஆய்வுக்குரியது.

கோள்கள் வட்ட வடிவில் சுழன்றுகொண்டிருக்கின்றன. சுழலுகிற ஒவ்வொரு கோளும் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கேற்ப[ராசி] பூமியில் பிறக்கும் குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று சொல்வது ஏற்கத்தக்கதா என்பது தவிர்க்க இயலாத கேள்வியாகும்.

அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை வளர்ந்துகொண்டிருக்கும் அறிவியலை ஆதாரமாகக் கொண்டு நிரூபிக்க இயலுமா?

முடியாது என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

“ஜோதிடம் என்பது விஞ்ஞானம் அல்ல. அறிவியல் பூர்வமாக இதை ஏற்க முடியாது” என்று கூறுகிறார்கள். பிரபஞ்சக் கதிர்களிலுள்ள எக்ஸ் கதிர்கள், காமா கதிர்கள், ஆல்பா கதிர்கள், பீட்டா கதிர்கள் போன்ற கதிரியக்கக் கதிர்கள் மனித செல்களைப் பாதிக்கின்றன என்பதை ஒத்துக்கொள்கிற  அவர்கள், “சூரியனைத் தவிர பிற கோள்களிலிருந்து எவ்விதமான சக்தி அலைகளும் வருவதில்லை. அவற்றிற்கு ஈர்ப்பு விசை மட்டுமே உள்ளது. எனவே, கோள்களின் இயக்கம் எவ்விதத்திலும் மனிதரைப் பாதிப்பதில்லை” என்றும் சொல்கிறார்கள்.

வானக் கூரையில் விண்மீன்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன என்றும், கோள்கள் வீடுகளில்[ராசிகளில்] தங்குகின்றன என்று ஜோதிடர்கள் சொல்வது நகைப்புக்கிடமானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வியாழன் கோள் நன்மை பயக்கும் தன்மையுடையது. சனி தீமை செய்வது என்றிவ்வாறாக, ஒவ்வொரு கோளுக்கும் ஒவ்வொரு குணத்தைக் கற்பித்திருப்பதும் அறிவுடையார் செயலல்ல என்றும் அவர்கள் உறுதிபடக் கூறுகிறார்கள்.

ஆக, கோள்களையும் நட்சத்திரங்களையும் வைத்துக்கொண்டு ஜோதிடர்கள் மக்களுடன் சதுரங்கம் விளையாடினார்கள்; விளையாடுகிறார்கள் என்பதே அறிவியலாளரின் ஒருமித்த கருத்தாக உள்ளது.
===========================================================================================================

‘சோதிடம் அறிவியல் ஆகுமா?’ என்னும் தலைப்பில் k.s.மகாதேவன்,B.Sc., M.A. அவர்கள் எழுதிய கட்டுரை வாயிலாக ஜோதிடம் குறித்து நான் அறிந்தவற்றை எளிமைப்படுத்தி என்னுடைய நடையில் பதிவிட்டிருக்கிறேன்.

என் எழுத்து உங்களுக்குப் புரியும் வகையில் அமைந்தால் மகிழ்வேன். மற்றபடி, என்னை ‘ஜோதிடத்தில் புலி’ என்று நினைத்துக் கேள்விகள் கேட்டுத் திணறடிக்க வேண்டாம் என்று பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

6 கருத்துகள்:

  1. பவுண்டேசனே வீக் ,கட்டிடம் எப்படி ஸ்ட்ராங்கா இருக்கும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜோதிடர்கள் ஜோதிடம் பார்ப்பது ஜோதிடத்தை நம்பியல்ல; மக்களின் பலவீனத்தை நம்பித்தான்.

      நன்றி பகவான்ஜி.

      நீக்கு
  2. ஐயா மருத்துவம் உண்மை, மருத்துவர்கள் பொய்யாகலாம் என்பது போல ஜோதிடர்கள் பொய்யாகலாம் ஆனால் ஜோதிடம் என்பது உண்மை. சிலர் சொன்னது எங்கள் குடும்பத்துக்கு பலித்திருக்கிறது, பலர் சொன்னது பலிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் திறந்த உங்கள் கருத்துரைக்கு நன்றி சோமேஸ்வரன்.

      நீக்கு