எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 22 நவம்பர், 2025

கிறங்கடிக்கும் இசை மேதை ரஹ்மானின் கலங்கடிக்கும் ‘சூபித்துவம்’ தத்துவம்!

ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்திய யூட்யூப் பாட்காஸ்ட் ஒன்றில் மதங்கள் குறித்துப் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் எல்லா மதங்களுக்கும் ரசிகன். இஸ்லாம், இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைப் படித்திருக்கிறேன்...” -இது ‘நக்கீரன்’ செய்தி*

இஸ்லாமியரான இந்த இசை மேதை, அனைத்து மதம் சார்ந்த மக்களின் ஆதரவைப் பெற்றிட மேற்கண்டவாறு பேசியிருக்கிறார். இதில் விமர்சிக்க ஏதுமில்லை.

தொடர்ந்து, “சூஃபித்துவம் என்பது இறப்பதற்கு முன் இறப்பது போன்றது. உங்களைச் சுயமாகச் சிந்திக்க வைக்கும் திரைகள் இருக்கின்றன. அந்தத் திரைகளை அகற்ற, நீங்கள் அழிந்துவிட வேண்டும். காமம், பேராசை, பொறாமை அல்லது தீர்ப்புவாதம்[?] அனைத்தும் இறக்க வேண்டும். உங்கள் ஈகோ போய்விட்டால், பின்னர் நீங்கள் கடவுளைப் போல வெளிப்படையானவராக மாறுவீர்கள்” என்றும் பேசியிருக்கிறார்.

இசையரசரே,

‘’இறப்பது’ என்றால் எல்லோருக்கும் தெரியும். அதென்னய்யா இறப்பதற்கு முன்பு இறப்பது?

மனிதராகப் பிறந்த அத்தனைப் பேருமே ஒரு முறைதான் இறக்கிறார்கள். அந்த ஒரு முறை இறப்பின்போதே ஒட்டுமொத்த உடம்பும் மிச்சம் தொச்சம் என்று எதுவும் இல்லாமல் முற்றிலுமாய் அழிந்துபோகிறது.

மீண்டும் சொல்கிறோம்... இறப்பது என்பது ஒரே ஒரு தடவை மட்டுமே முழு உடம்பும் அழிந்துபோகிற ஒரு நிகழ்வு.

அவ்வாறு இறந்துபோவதற்கு முன்பு ஒரு முறை இறந்து காட்டுங்கள் என்கிறீரே, சொல்லுகிற நீர் மட்டுமல்லாமல், சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிற[+வாசித்துக்கொண்டிருக்கிற] அத்தனைப் பேருமே முழுப் பைத்தியங்களா?

இறக்கும் முன்பு இறப்பதென்பது[திரை நரை என்று ஏதோ குறுக்கே இருப்பதாக உளறியிருந்தாலும்] காமம், ஆசாபாசம், பொறாமை போன்ற அனைத்தையும் துறந்து, உணர்ச்சியற்ற சவம் போல ஆவது என்றும் சொல்லியிருக்கிறீர்.

இது நடைமுறைச் சாத்தியமே இல்லாத ‘கற்பனா வாதம்’. இதைப் பேசுகிற சில மதங்களைப் போன்றதுதான் எங்களின் இஸ்லாம் மதமும் என்பதை உங்களின் இந்தப் பேச்சின் மூலம் உலகறியச் செய்திருக்கிறீர்.

மேலும், கடவுளைப் போல ஆகலாம் என்கிறீர். அப்படி ஆனவர்களுக்கான பட்டியலை எவரேனும் தந்திருக்கிறார்களா?[இதைக் கேட்பதற்கான காரணம், சூபித்துவம் மூலம் அடியேனுக்கும் கடவுளைப் போல ஆக வேண்டும் என்னும் ஆசைதான். ஹி... ஹி... ஹி!!!].

ரஹ்மானே,

அற்புதமானதொரு இசையமைப்பாளர் என்னும் முறையில் உலகளவில் பிரபலமானவராக உள்ள நீர், இனியும் இம்மாதிரிப் பித்துக்குளித்தனமாக ஏதும் உளறி வைக்க வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

வேண்டுகோள்தான்; அறிவுரையல்ல.

https://www.nakkheeran.in/cinema/ar-rahman-about-releigion-10801760*