அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 18 மார்ச், 2014

யுகங்கள் ‘நான்கு’ அல்ல; அவை ‘பதினைந்து’ என்றால் நம்புவீர்களா?!

பகவத்கீதையில், யுகங்கள் நான்கு என்கிறாராம் பகவான் கிருஷ்ணன். விஞ்ஞானம் தெரிந்த உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், யுகங்கள் பதினைந்து’ என்கிறார்கள். இவற்றில் எதை நீங்கள் நம்புகிறீர்கள்?

சுருக்கமான பதிவையே பெரும்பாலான வாசகர்கள் விரும்புகிறார்கள் என்பதை அறிவேன். இதற்குமேலும் இப்பதிவைச் சுருக்க இயலவில்லை. வரிவரியாகப் படிக்காவிடினும் மேலோட்டமாகவேனும் படியுங்கள்


1. கேப்பிரியன் யுகம்:

இதுவே முதல் யுகம்; 80 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதற்கு முற்பட்ட காலத்து உயிர்களின் ஃபாசில்கள் கிடைக்கவில்லையாம்

அதென்ன ஃபாசில்?

முற்காலத்தில், வாழ்ந்து புதைந்த உயிர்களின் எச்சங்கள் [அதாவது, அழுகிய சதை அழிய, எஞ்சியிருக்கும் எலும்புக்கூடு போன்றவை.]

இந்த யுகத்தின் ஆரம்பத்திலேயே, உயிர்கள் பரிணாம வளர்ச்சி அடைந்துவிட்டன; உணவு தேடவும் எதிரியிடமிருந்து தப்பிக்கவும் தெரிந்து வைத்திருந்தன.


2. ஆர்டோவிசியன் யுகம்:

இந்த யுகத்தில்தான் கடல் பரப்புகள் தோன்றின. உயிர்கள் வாழ்வதற்கான தட்பவெப்பம் பக்குவமடைந்தது இக்காலக் கட்டத்தில்.

உயிர்களுக்குக் கவச அமைப்புகள் [ஓடு] தோன்றியது.


3. சைலூரான் யுகம்:

36 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது. இப்போதுதான் மீன்களுக்கு எலும்பு உருவானது.


4. டிவோனியன் யுகம்:

பெரிய பெரிய மலைகள் தோன்றின. நிலக்கரிப் படிவங்கள் உருவாயின.

இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிற ‘லான்ஸ்லெட்டு’ என்னும் புழு இந்த யுகத்தில்தான் அவதாரம் எடுத்ததாம்!!!


5. பெர்மியன் யுகம்:

ஏராளமான உயிரினங்கள் அழிந்துபோக, சில உயிரினம் மட்டுமே தப்பினவாம்.

மரவட்டை, பூரான், தேள், சிலந்தி போன்ற விஷ  ஜந்துக்களைத் தோற்றுவித்துப் புண்ணியம் தேடிக்கொண்டது இந்த யுகமே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


6.டிரையாசிக் யுகம்:

வறட்சி உச்சநிலையை அடைய, பூமியைக் கவ்வியிருந்த பனிப்படிவங்கள் காணாமல் போயின.

பிராணிகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்த அதிசயமெல்லாம் இபோதுதான் நிகழ்ந்தது. பாலூட்டி இனங்களின் ஜனனமும் இதே காலக்கட்டத்தில்தான்.


7. ஜுராசிக் யுகம்:

‘ஜுராசிக் பார்க்’ மனத்திரையில் ஓடியிருக்குமே!

பெரிய பெரிய மலைகள் தேய்ந்து குன்றுகளாயின. சதுப்பு நிலக் காடுகள் தோன்றின.

கவனிக்கவும்.....இமயமலை தோன்றியது இந்த யுகத்தில்தானாம்!

மீன் இனங்களுக்குப் பல் முளைத்ததும், டினோசார் என்ற ராட்சத விலங்கு தோன்றியதும் இப்போதுதான்.

‘புரோட்டோஸிராடாப்பு’ என்ற கொம்பு முளைத்த டினோசாரின் முட்டை கிடைத்திருக்கிறதாம். [எங்கே வெச்சிருக்காங்கன்னு தெரிஞ்சா ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வரலாம்].

100 அடி நீளமுள்ள ஒரு பல்லி இனம், மற்ற உயிரினங்களையெல்லாம் பயமுறுத்தியதாம்!


8. மெஸோஸோய்க் யுகம்:

இந்த யுகத்தின் இறுதியில், டினோசார் இனம் முற்றிலுமாய் அழிந்தது. இதன் அழிவுக்கு, தட்பவெப்பத்தின் திடீர் மாற்றமும், சூறாவளிப் புயல்களும் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள்.

நல்லா கவனிங்க............. பால் தரும் உறுப்புகள் தோன்றி வளர்ச்சி பெற்றதும், தாயன்பு அதிகரித்ததும் இந்த யுகத்தில்தான்.


9. கிரிடேசியன் யுகம்:

மாபெரும் கடல்கோள்கள் நிகழ்ந்து பேரழிவுகள் ஏற்பட்டன.


10. இயோசின் யுகம்:

இன்றைக்கு ஆறு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது.

இன்று நாம் காணுகிற தாவரங்கள் இந்த யுகத்திலேயே தோன்றிவிட்டன.

பாலூட்டிகளின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது.

பூனை, ஒட்டகம், குதிரை போன்றவை பூனையின் வடிவத்தில்தான் இருந்தனவாம். மூன்றடி இருந்த யானைக்குத் துதிக்கை கிடையாது!

இதையெல்லாம் நம்பாதவர்கள், பல்வேறு நாடுகளில் உள்ள மியூஸியங்களுக்குச் சென்று, ஃபாசில்களைப் பார்த்து வரலாம் என்கிறார் நூலாசிரியர்.


11.ஒலிகோசின் யுகம்:

நெய்வேலி பழுப்பு நிலக்கரி உருவான காலம் இதுவே.

பசும் புல்வெளிகள் இந்தப் பூமியை அழகுபடுத்தின.

யானைக்குத் துதிக்கை நீட்சி அடைந்தது.

ஆப்பிரிக்கக் காடுகளில் சிம்பன்ஸி குரங்கினம் வாழ்ந்தது இக்காலத்தில்.


12. மையோசின் யுகம்:

இமயமலை இன்றிருக்கும் நிலையை எய்தியது.


13.பிளியோசின் யுகம்:

தாவர, விலங்கினங்கள் முழு வளர்ச்சி பெற்றன.

பாலூட்டிகள் வெப்ப, குளிர் ரத்த ஓட்டங்களைப் பெற, மூளை வளரும் சூழல் உருவானது.


14. பிளைஸ்டோசின் யுகம்:

இது தோன்றி பத்து லட்சம் ஆண்டுகள் ஆகிறது.

மனிதன்  தோன்றியது இந்த யுகத்தில்தானாம்.

17,50,000 ஆண்டுகளுக்கு முந்தைய நம் மூதாதையரின் ஃபாசில்கள் கிடைத்திருக்கின்றனவாம்! படிப்படியாகப் பல்வேறு இனங்கள் தோன்றலாயின. தங்களுக்குள் வாழ்க்கைப் போராட்டங்களை நடத்தின.


15.ஹோலோசின் யுகம்:

இப்போது நடந்துகொண்டிருப்பது இந்த யுகம்தானாம்.

இது, கி.மு.8000 - 9000 இல் ஆரம்பித்தது.              -நன்றி: தினசரி 03.07.86

******************************************************************************************************************

நன்றி:

ராஜா பாலச்சந்தர். [நூல்: பாதை அமைக்கும் பரிணாமம்; மீனா புத்தகப் பண்ணை, விழுப்புரம் 605602.]

*****************************************************************************************************************