அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 18 மார்ச், 2014

.................................இவ்வாறாகக் கடவுள் காப்பாற்றப்படுகிறார்!!!

தீராத நோய் அவனுக்குத் தீர்ந்தது. அதற்குக் காரணம் ‘தன்னம்பிக்கை’ என்றான் அந்த இளைஞன். “இல்லை. கடவுள் கண் திறந்தார்” என்றாள் அவன் தாய். நீங்கள் யார் கட்சி? கதையைப் படியுங்கள்.
                       

                                  சாமி குத்தம்? [சிறுகதை] 

ராசுவின் தந்தை ஒரு தனியார் வங்கி அலுவலர்.

அவர் கொச்சிக்கு மாறுதல் ஆன போது, தன் குடும்பத்தையும் அங்கே அழைத்துப் போனார்.

ஐந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் தன் சொந்த ஊரான கோவைக்கு மாறுதல் பெற்றார்.

பிறந்த மண்ணுக்குத் திரும்பியதில் ராசுவுக்கு அளப்பரிய ஆனந்தம். நண்பர்களைத் தேடிப் போய் அளவளாவினான்.

பள்ளித் தோழன் அறிவழகனை ஒரு விளையாட்டு மைதானத்தில் சந்தித்த போது, அவன் விழிகளில் மகிழ்ச்சி கலந்த வியப்பு.

“நல்லா இருக்கியா?” என்று கேட்ட அறிவழகனிடம், “நான் நல்லா இருக்கேன். நீயும் நல்லா இருக்கேன்னு நினைக்கிறேன். அப்போ நீ குணப்படுத்த முடியாத விசித்திர நோய்க்கு ஆளாகியிருந்தே. டாக்டர்களுக்கே நோய்க்கான காரணம் புரியல. உடம்பில் எதிர்ப்புச் சக்தி குறையறதால நீ இறந்துடுவேன்னு சொல்லியிருந்தாங்க. அது நடந்து அஞ்சாறு வருசம் ஆச்சு. நீ இப்போ திடகாத்திரமாவும் உற்சாகமாவும் இருக்கே. சாவை எப்படி ஜெயிச்சே?” என்று கேட்டான் ராசு. அவன் குரலில் ஏராள ஆர்வம்.

“ஒரு ‘சைக்கியாட்ரிஸ்டு’கிட்டே அப்பா அழைச்சுட்டுப் போனார். அந்த டாக்டரின் ஆலோசனைப்படி, சாவை விரட்டியடிக்கணுங்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’னு அப்பப்போ மனசுக்குள்ள சபதம் எடுத்தேன். தனிமையில், உரத்த குரலில் ஆவேசமா கூச்சலிடுறதும் உண்டு. இதன் மூலமா என் உடம்பில் எதிர்ப்புச் சக்தி கூடிச்சி. நோய் இருந்த இடம் தெரியாம ஓடி ஒளிஞ்சிடுச்சி. டாக்டர்கள் ஆச்சரியப்பட்டாங்க” என்றான் அறிவழகன்.

அறிவழகனைக் கட்டியணைத்துத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராசு.

இருவரும் கைகுலுக்கிப் பிரிந்தார்கள்.



அறிவழகன் வீடு திரும்பிய போது, அவன் அம்மா, வந்திருந்த சொந்தக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்.

“டாக்டருங்க உன் மகன் செத்துடுவான்னு சொன்னாங்களே, அவன் எப்படித் தப்பிப் பிழைச்சான்?” என்றார் சொந்தக்காரர்.

“நான் போகாத கோயில் இல்ல; வேண்டாத சாமி இல்ல. ‘கடவுளே, என் மகனைக் காப்பாத்து’ன்னு நாளெல்லாம் கண்ணீர் விட்டு அழுதேன். கடவுள் கண் திறந்துட்டாரு”- மனம் நெகிழ்ந்து சொன்னார் அறிவழகனின் அம்மா.

“அம்மா, என் நோயைக் குணப்படுத்தக் கடவுளுக்கு இத்தனை வருசம் அவகாசம் எதுக்கு? நீ முதல் தடவை வேண்டிகிட்ட போதே அவர் ஏன் கண் திறக்கல? இனியும் சாமி காப்பாத்திச்சி. பூதம் காப்பாத்திச்சின்னு வர்றவங்க போறவங்ககிட்டேயெல்லாம் உளறாதே” என்று கடிந்துகொண்டான் அறிவழகன்.

“அப்படிச் சொல்லாதடா ராசா. அது சாமி குத்தம்.” அவசரமாக அவன் வாயைப் பொத்தினார் அம்மா.
***********************************************************************************