புதன், 2 ஆகஸ்ட், 2017

இது ஜோதிட யுகம்!!!

கண்ணுக்குத் தெரியாத கடவுளைக் காட்டிலும் தம் கண்ணெதெதிரே தோன்றும் ஜோதிடரை நம்புவோர் நம்மிடையே மிக அதிகம்!

ந்த மண்ணுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் பிரபஞ்சத்தின் மையத்திலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.
“இன்னும் கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள் பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; மனுசங்க திருந்தி வாழலேன்னா பூலோக அழிஞ்சிடும்னு யாரோ புரளி கிளப்பியிருக்காங்க” என்றார் இறைவன், வதனத்தில் குறும்பு மிளிர.

“புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” -சந்தேகம் எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று  சொன்னார் இறைவன். 

அதிர்ச்சிக்குள்ளான இறைவி, “ஏன் அப்படிச் செய்தீங்க?” என்றார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க, மனிதன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமா யிடிச்சி. எதிரியை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கிறான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்லுகிறான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை..................................”

பேசுவதை நிறுத்தி நீர் வழிந்த கண்களைத் துடைத்துக் கொண்ட இறைவன், “மகான்கள், அவதாரபுருஷர்கள்ங்கிற பேருல அப்பப்போ சிலரைப் பூமிக்கு அனுப்பி, ‘பாவம் பண்ணினா நரகத்துக்குப் போகணும், புண்ணியம் செஞ்சா சொர்க்கம் கிடைக்கு’ம்கிற மாதிரி விதம் விதமாய்ப்  பிரச்சாரம் பண்ண வைச்சேன். எவனும் திருந்தல. இப்போ, திருந்தி வாழலேன்னா கூடிய சீக்கிரம் பூமி அழிஞ்சிடும்னு ஜோதிடர்கள் மூலமா புரளி கிளப்பி விட்டிருக்கேன். மக்கள் திருந்திடுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு.”

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க. ஆறறிவு படைச்ச மனுசங்க அவ்வளவு சுலபமா இந்தப் புரளியை நம்பிடுவாங்களா என்ன?”

“என்ன இப்படிக் கேட்டுட்டே? அவதாரபுருஷர்களையும் பெரிய பெரிய மகான்களையும் என்னையும் நம்புறதைவிட ஜோதிடர்களைத்தான் மனுசங்க அதிகம் நம்புறாங்க” என்று சொல்லி முடித்த கடவுள்.....

“ஜோதிடர்கள் வாழ்க! ஜோதிடக்கலை வளர்க!!” என்று ஓங்கிய குரலில் முழக்கமிட்டு, விரிந்து பரந்த அண்டவெளி அதிரும்படியாக ஊழிக்காலத்தில் சிரிப்பது போன்ற அதிபயங்கரச் சிரிப்பொன்றை வெளிப்படுத்தினார்! 
***********************************************************************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக