திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கணினியுகக் காதல்!!!.....சிரிப்புக் கதை!

விற்பனையில் முன்னிலை வகிக்கும் ஒரு வார இதழில் வெளியான கதை இது. இப்போது ‘அது’, ‘தடை செய்யப்பட்ட எழுத்தாளர்’ பட்டியலில் என்னைச் சேர்த்திருக்கிறது!
ழைப்பு மணி இடைவிடாமல் ஙணஙணத்தது.

எரிச்சலுடன் ஓடிப்போய்க் கதவைத் திறந்த கேசவன், எதிர்த்த வீட்டு வேலப்பன் உருவத்தில் வேட்டியும் தொளதொள பனியனுமாய், இரணியனைச் சம்ஹாரம் செய்த நரசிங்கமூர்த்தியே நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்.

“வாருமய்யா ஓசி......இப்பத்தான் முதல் தடவையா அழைப்பு மணியை அடிச்சிப் பார்க்குறீரா?”

”ஆமா. அதோட முதல் தடவையா ஒரு கொலையும் செய்யப்போறேன்.”

வெலவெலத்துப் பின்வாங்கினார் கேசவன். “என்னய்யா சொல்றீர்?" என்றார்.

“உம்ம மகன் என் பொண்ணுக்கு உயிரையே தர்றதா காதல் கடிதம் எழுதியிருக்கான். அந்த உயிரைத்தான் வாங்கிப் போக வந்தேன்” -உரமேறிய வார்த்தைகளை உதிர்த்தார் வேலப்பன்.

“ஏய்யா கத்தறீர்?.” -அவரை இழுத்துப் போய் இருக்கையில் அமர்த்திவிட்டுக் கதவையும் அடைத்துவிட்டுச் சொன்னார் கேசவன், ‘உம்ம பையன் என் மகளைக் கணக்குப் பண்றான். இனியும் நாவல் கீவல்னு இரவல் கேட்டு என் வாசல்படி மிதிச்சான்னா நான் பொல்லாதவன் ஆயிடுவேன்’னு நீர் எச்சரிக்கை பண்ணினதிலேயிருந்து என் மகனோட பார்வைகூட உம் வீட்டு மேல படியறதில்ல. அதோ பாரும், மூடிய எங்க வீட்டு ஜன்னல் கதவைத் திறந்து ஆறு மாசம் ஆச்சு. பூச்சி கூடு கட்டியிருக்கு. என் மகன் கண்டிப்பா காதல் கடிதம் கொடுத்திருக்க மாட்டான்.”

“கொடுத்திருக்கான். இதோ பாரும் அவன் நேத்துக் கொடுத்த கடிதம்.”

“தபாலில் அனுப்பியிருப்பானோ?”

“தபாலில் அனுப்பிப் பிடிபட உம்மை மாதிரி உன் மகன் கூமுட்டையா என்ன? அவன் புத்திசாலி. நீர் என்கிட்டே ஒசி வாங்கிப் படிச்சிட்டுத் திருப்பித் தர்ற புராண இதிகாசப் புத்தகங்களில் உன் புத்திரசிகாமணி கடிதம் வெச்சி அனுப்பியிருக்கான். நேத்து என் மகள்கிட்டே கொண்டு வந்து கொடுத்தீரே வியாசர் பாரதம், அதை நான் வாங்கிப் புரட்டினப்போ இந்த ரகசியம் அம்பலமாச்சு. மிரட்டி விசாரிச்சதில் என் மகள் உண்மையை ஒத்துட்டா. கண்ட கண்ட கழுதைப் பயல்களின் வலையில் விழுந்துடக் கூடாதுன்னுதான் என் மகளுக்கு செல்ஃபோன்கூட வாங்கித் தராம இருந்தேன். அப்படியும் உன் மகன் என்னை முட்டாள் ஆக்கிட்டான். நல்ல வேளை என் மகள் சியாமளா உன் மகனுக்குக் கடிதம் ஏதும் எழுதல.”

அவமானத்தால் தொங்கிப் போனது கேசவன் முகம். “வெரி சாரிப்பா. இனிமே இது மாதிரி நடக்காம பார்த்துக்கிறேன்” என்றார்.

“உம்ம வாக்குறுதியில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஒரு வாரம் அவகாசம் தர்றேன். உம்ம மகனை எங்காவது அனுப்பி வெச்சிடணும். அது ஆகாத காரியம்னா, ஒரு மாசம் டைம் தர்றேன். மரியாதையா நீரே வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிடும். உம்ம மகன் எழுதின அத்தனை கடிதங்களும் என்கிட்டே இருக்கு. அவனையும் அவனுக்கு உடந்தையா இருந்ததா உம்மையும் கம்பி எண்ண வெச்சிடுவேன்.” -கையிலிருந்த கடிதக் கற்றையை விசிறி போல விரித்துக் காட்டிவிட்டுப் புயலாய் வெளியேறினார் வேலப்பன்.

ன்னலருகே அமர்ந்து பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த வேலப்பன், கேசவன் தன்னைத் தேடி வருவதைக் கண்டார். அவர் பின்னால் அவர் மகன் பாலன், ஒரு தோல்பையுடன் வந்து கொண்டிருந்தான்.

‘பயல் வெளியூர் கிளம்பிட்டான் போல’ என நினைத்தார் வேலப்பன்.

அவரை அணுகிய கேசவன்,  “நீர் சொன்னபடியே இவனைச் சேலத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு அனுப்பறதா முடிவு பண்ணிட்டேன். போறதுக்கு முந்தி உம்மகிட்டே இவன் எதோ பேசணும்னு சொன்னான். அதான் அழைச்சுட்டு வந்தேன்” என்றார்.

“ஓ, தாராளமா...”

பாலன் சொன்னான்:

“நீங்க அடிக்கடி, பாட்டுக் கேட்க எங்க வீட்டிலேயிருந்து ‘பென்டிரைவ்’ இரவல் வாங்கிட்டு வருவீங்க இல்லியா? நீங்க திருப்பித் தர்ற ‘பென்டிரைவ்’ களில் பாடலை அழிச்சிட்டு யாரோ புதுக்கவிதை பதிவு பண்ணியிருக்காங்க. போட்டுக் காட்டுறேன். குரலை வைத்து அது யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க” என்று சொல்லிக்கொண்டே, தோல்பையிலிருந்து ஒரு மடிக்கணினியை எடுத்து வைத்து இயக்கினான்.

திகைத்து, திராவகத்தில் விழுந்துவிட்டவர் போல, வேலப்பன் துடித்துப் போனார்.

பாலன் மீது கொண்டிருந்த அதீத காதலால், பென்டிரைவில் கவிதைச் சரம் தொடுத்திருந்தாள் அவர் மகள் சியாமளா!

“நான் போறேங்க” என்ற பாலனின் குரல்தான் அவரைத் திகைப்பிலிருந்து விடுவித்தது. அவன் தோல்பையுடன் வெளியேறிக்கொண்டிருந்தான்.

“மாப்பிள்ளை... போகாதிங்க...நில்லுங்க...” என்று கூவிக்கொண்டே அவனை நெருங்கினார் வேலப்பன்.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





3 கருத்துகள்: