வியாழன், 18 ஜனவரி, 2018

வைரமுத்துவின் 'நாக்கு'க்குப் பத்து லட்சம்! விரல்களுக்கு?!

இந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ, மதம் எதுவாயினும்  அந்த மதத்தால் திணிக்கப்படுகிற மூடநம்பிக்கைகளால் நம் வாரிசுகளோ, உற்றார் உறவினர்களோ, நண்பர்களோ பாதிக்கப்படுவார்கள் என்றால் அந்த மதத்தைக் கண்டித்துக் கருத்துகள் சொல்ல நமக்கு உரிமை உண்டு; அது நம் கடமையும்கூட.

இது புரியாமல் வெறியாட்டம் போடும் மதப்பித்தர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்துகொண்டே போகிறது.

''இனியொருவன் இந்து தர்மத்தைப் பற்றி இழிவாகப் பேசினால்[தர்மத்தை யாரும் இழிவுபடுத்துவதில்லை; மூடநம்பிக்கைகளைத்தான் கண்டிக்கிறார்கள்] கொலை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். வைரமுத்துவைக் கொலை செய்யலாமா, வேண்டாமா?.....

.....வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் ரூபாய் 10 லட்சம் பரிசு தருகிறேன்'' என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் என்பவர் அறிவித்திருக்கிறார்[18.01.2018 தினகரன் நாளிதழ்].
அழகு தமிழில் அயராது பேசிப் பேசித் தமிழ் வளர்க்கும் வைரமுத்துவின் நாக்கின் விலை வெறும் பத்து லட்சம்தானா?

நாக்கை அறுத்துவிட்டாலும் பத்து விரல்களால்[தட்டச்சு] எழுதுவாரே?

''அந்தப் பத்து விரல்களையும் அறுத்துவந்தால், ஒரு விரலுக்குப் பத்து லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் நான் வழங்குவேன்'' என்று அறிவிப்பாரா நயினார் நாகேந்திரன்?!

''போலீஸார் என் மீது வழக்குப் போடுவார்களா?'' என்று கேட்கும் 'மாஜி' அமைச்சர், ''தமிழக அரசு இன்னும் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று நெஞ்சை நிமிர்த்தித் தன் அஞ்சாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாகேந்திரனுக்கு இப்படியெல்லாம் பேசும் தைரியத்தைக் கொடுத்தது எது? யார்? யாரெல்லாம்?

பகுத்தறிவு பேசுவோர் அவசரகதியில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

காவிகளின் கொலைவெறித் தாண்டவம் தொடர்ந்தால்.....

'பகுத்தறிவாளர் பாதுகாப்புப் படை'யை உருவாக்குவது இன்றியமையாத் தேவையும்கூட.