திங்கள், 5 மார்ச், 2018

போர்...போர்...போர்...யுக யுக யுக யுக யுக யுகாந்தரப் போர்!!!

புதுமையானதும் புரட்சிகரமானதுமான பதிவு! படிக்கத் தவறாதீர்!! விரும்பினால், பிறருடன் பகிருங்கள்!!!

யிர் வாழ்வதற்கு இன்றியமையாத் தேவை உணவு.

ஒவ்வோர் உயிரும் தனக்குரிய உணவை எவ்வாறு பெறுகிறது? இன்னோர் உயிரைத் தாக்கி அழித்துத்தானே?

ஓர் உயிர், தாக்கப்படும் போது அது அனுபவிக்கும் வேதனை அளவிடற்கரியது. 

தாக்கப்படும் உயிர் உறும் துன்பமும், தன்னைக் காத்துக் கொள்ள அது நிகழ்த்தும் போராட்டமும், காண்போர் நெஞ்சைக் கலங்க வைப்பவை அல்லவா? 

ஒரு மான், தான் ஈன்ற குட்டிக்குப் பால் தந்து, தன்னை மறந்த சுகத்தில் லயித்துக் கிடக்கும் போது, அசுரப் பசி கொண்ட ஒரு வேங்கையோ அரிமாவோ அதன் மீது பாய்ந்து குரல் வளையைக் கவ்வி, குருதியை உறிஞ்சிக் குடிக்கும் காட்சி காண்போர் நெஞ்சைப் பதற வைக்கும்தானே?

இப்படிப் பதற வைக்கும்...நெஞ்சைப் புண்ணாக்கும் அவல நிகழ்ச்சிகள்தான் இவ்வுலகில் எத்தனை...எத்தனை!

நினைத்தாலே நெஞ்சு நடுங்கும்படியான இத்தகைய கொடூர நிகழ்வுகள் நொடிதோறும் நிகழக் காரணமானவர் யார்? 

கடவுள்தானே?

உயிர்கள் செய்யும் முதல் பாவத்திற்கும்[இந்த முதல் பாவமே பல பிறவிகளுக்கும் இன்பதுன்பங்களுக்கும் காரணமாகின்றன என்கிறார்கள்] அடுத்தடுத்த பிறவி[?]களில் செய்யும் நல்வினை தீவினைகளுக்கும் கடவுளே காரணமாகிறார்!

“உயிர்களைத் தீங்கு செய்யத் தூண்டுவது கடவுளல்ல; அதைச் செய்வது ஒரு தீய சக்தி[சாத்தான்]” என்று  சப்பைக்கட்டுக் கட்டுவது ஆன்மிகவாதிகளின் வழக்கம்.

தீய சக்தி ஒன்று இருப்பதாகவே வைத்துக் கொள்வோம். அதை யார் படைத்தது?
கடவுள்தானே?[படைத்தல் அவருக்கு மட்டுமே சாத்தியமானது]

அவ்வாறாயின்.............................................

தீய சக்தி கடவுளால் படைக்கப்பட்டு அவர்தம் ஆசியுடன் அட்டூழியம் புரிகிறதா?

அல்ல எனின்.......................................

தானாகத் தோன்றிய, அல்லது கடவுளுக்குப் போட்டியாக எப்போதும் இருந்துகொண்டே இருக்கிற தீய சக்தியை அழிக்கும் முயற்சியில் கடவுள் ஈடுபட்டிருக்கிறாரா?

அவருக்கும் அந்தச் சக்திக்கும் இடையே போர் நிகழ்ந்துகொண்டே இருக்கிறதா? 

அந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும்?

இருவரில் ஜெயிக்கப் போவது யார்?
***************************************************************************************************************