அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 25 ஜூன், 2018

கடவுள் இங்கே...இதோ இங்கே...இங்கே...இங்கே!!!

மனித மூளையில் கடவுள் பற்றிய சிந்தனை அரும்பிய நாளிலிருந்து இந்நாள் வரை, ‘கடவுள் உண்டா, இல்லையா?’  என்னும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அனைவரும் ஏற்கும்படியான ‘முடிவு’ இதுகாறும் எட்டப்படவில்லை.

“அனைத்தையும் இயக்கவல்ல, ஆறறிவைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு படைத்த,  ’விவரிப்பு’க்கு அப்பாற்பட்ட  ஏதோ ஒன்றன் 'இருப்பை’க் 'கடவுள்’ என நான் ஏற்கிறேன்; அவரை வழிபடுகிறேன். அதனால் விளையும் பயன் பற்றி நான் கவலை கொள்ளவில்லை” என்று ஒரு கடவுள் நம்பிக்கையாளர், அதாவது ஓர் ஆத்திகர் சொன்னால், அவர் மீது எவ்வகையிலும் நாம் குற்றம் சுமத்த இயலாது.

அவர் பிறரிடம்,  ''சிந்தியுங்கள். உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கலாம்” என்று பரிந்துரை செய்யும் போதும் அவர் குற்றமிழைத்தவர் ஆகமாட்டார். “கடவுளை  வழிபடாவிட்டால் துன்பங்களிலிருந்து விடுபட முடியாது; பல பிறவிகள் எடுத்துப் பாவங்கள் இழைத்து இறுதியில் நரகம் சேர்வாய்” என்பதான பிரச்சாரங்களில்  இறங்குகிறபோது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரி ஆகிறார் அவர்.

“கடவுளை நான் பார்த்திருக்கிறேன். மற்றவர்களுக்கும் காட்ட முடியும்” என்று மக்களிடம் அப்பட்டமாகப் பொய்யுரைக்கும்போது அவர் மக்களுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளி ஆகிறார்.

பொய்யை மெய் போலச் சொல்லிச் சொல்லி, பிறர் மூளையில் அதைப் பதியச் செய்து, அறிவை ஊனமுறச் செய்வதும் ஒரு குற்றச் செயல்தான்.

இம்மாதிரிக் குற்றச் செயல் புரிந்தோர் இம்மண்ணில் கணிசமாக வாழ்ந்திருக்கிறார்கள்; அவர்களும் 'மகான்கள்' என்று போற்றப்பட்டவர்களே.

பாரத தேசத்தின் மிகப் பெரிய மகானாகப் போற்றப்பட்டவர் அவர். ''விழிமின்! எழுமின்!” என்று இளைஞர்களிடையே விழிப்புணர்வைத் தூண்டிய அவரின் சீடரைக் கொண்டு அவரை நினைவு கூர்வது மிக எளிது. அவர்.....
ராமகிருஷ்ண பரமஹம்சர்.

அவர் நல்ல பல வாழ்க்கை நெறிகளை வகுத்துத் தந்தவராக இருக்கலாம். ஆனால், அவர் கடவுளைக் கண்டவர் என்றும், பிறனொருவனுக்குக் காட்டியவர் என்றும் சொல்லப்படுகிற கதை ஏற்கத்தக்கதன்று.

அவ்வாறானதொரு கதையை, அவரைப் பின்பற்றுவோர் இன்றளவும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

கடவுளை மனதில் இருத்தி, தன்வயம் இழந்த நிலையில் அவர் தியானத்தில் மூழ்கியிருந்த போது, ஒரு குதர்க்கவாதி அவர் தொடை மீது நெருப்புத் துண்டத்தை வைத்துச் சோதிக்க, சிறிது நேரம் கழித்தே அவர் விழித்துப் பார்த்தாரென்று சொல்லி, அவரின் ஆழ்ந்த பக்தியுணர்வை இன்றளவும் சிலாகிப்பவர்கள் உண்டு!

அவரைச் சந்தித்த ஒரு நாத்திகன், [‘குதர்க்கவாதி’ என்றே வைத்துக் கொள்ளுங்களேன்] ''நீங்கள் கடவுளைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா?” என்றான்.

“ஆம்” என்றார் மகான்.

“எனக்குக் காட்ட முடியுமா?”

“முடியும். என் பின்னால் வா.”

அவர் முன்னே செல்ல, குதர்க்கவாதி பின்னால் சென்றான்.

இருவரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஓர் ஆற்றை அடைந்தார்கள்.

ஆற்றுக்குள் இறங்கினார் மகான்.

அவரைப் பின் தொடர்ந்த குதர்க்கவாதி, “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி ஆற்றுக்குள் இறங்குகிறீரே?” என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினான்.

”கடவுளை ஆற்று நீருக்குள் பார்க்கலாம்” என்ற மகான், “நீருக்குள் முழுகிப் பார்” என்றார்.

மிரட்சியோடு நீருக்குள் மூழ்கிய அவனை மேலே எழ முடியாதவாறு அமுக்கிப் பிடித்துக் கொண்டார் மகான்.

நேரம் செல்லச் செல்ல குதர்க்கவாதிக்கு மூச்சு முட்டியது. தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினான். மகானோ தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.

'இந்நிலை இனியும் நீடித்தால் இவன் உயிர் பிரியும்’ என்று நினைத்த அவர், தன் பிடியைத் தளர்த்தினார்.

'குபீர்’ என்று மேலெழும்பிய குதர்க்கவாதி, சிறிது நேரம் பெருமூச்செறிந்து ஆசுவாசப் படுத்திக்கொண்ட பின்னர், “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி என்னைக் கொன்றுவிடப் பார்த்தீரே?” என்றான் குரலில் சூடு பறக்க.

அவன் கேள்வியை அலட்சியம் செய்த மகான், “நான் உன்னை விடுவித்ததும் அசுர வேகத்தில் மேலெழும்பினாயே, அது ஏன்?” என்றார்.

“தாமதித்திருந்தால் என் உயிர் போயிருக்கும்” என்றான் அவன்.

“நீ உன் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இத்தனை வேகம் காட்டினாய். இல்லையா?”

“ஆம்”

“இதே வேகத்தைக் கடவுளைக் காணும் முயற்சியில் நீ காட்டினால் அவரைக் காணலாம்” என்றார் அவர்.

குதர்க்கவாதி தலை குனிந்து நின்றான் என்றோ, மகானிடம் மன்னிப்புக் கோரினான் என்றோ உண்மைச் சம்பவம் என்று சொல்லப்படுகிற இக்கதை முற்றுப் பெறுகிறது.

இக்கதை மிகப் பல முறை மேடைகளில் சொல்லப்பட்டது. மிகப் பலர் கேட்டு ரசித்தார்கள். மகானின் மதி நுட்பத்தைப் போற்றினார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

குதர்க்கவாதிக்குக் கடவுளைக் காட்டுவதாகச் சொன்ன மகான்  ஏன் காட்டவில்லை?

மிகக் கடுமையாக முயற்சி செய்தால் கடவுளைக் காணலாம் என்று சொல்வதற்கு ஒரு மகான் தேவையா?

அவ்வாறு முயன்று யாரேனும் கடவுளைக் கண்டதுண்டா? மகான் அதற்கு ஆதாரம் காட்டினாரா?

''ஓர் அடர்ந்த காட்டுக்குள் தனியாகச் செல்கிறாய். ஒரு புலி விரட்டுகிறது. தப்பி ஓடுவதில் நீ எத்தனை வேகம் காட்டுவாய்? அப்படியொரு வேகத்தைக் காட்டினால்........”

''அருகில் யாருமில்லை என நினைத்து ஓர் இளம் பெண்ணைக் கட்டியணைத்துவிட்டாய். அவள் அபயக்குரல் எழுப்ப, எங்கிருந்தோ பத்து பேர் வந்துவிட்டார்கள். அவர்களிடம் பிடிபடாமலிருக்க நீ ஓடுகிறாய். அப்போது காட்டுகிற வேகத்தை..............”

இப்படி இன்னும் நிறைய நிகழ்வுகளைச் சொல்லி, முயன்றால் கடவுளைக் காண இயலும் என்று பொய்யுரைக்கலாம். உண்மையில்.....

கடவுளைக் கண்டதாகச் சொன்னவர்கள் இருக்கலாம்; காட்டியவர்கள் எவருமில்லை. உணர்ந்ததாகச் சொன்னவர்கள் இருக்கலாம்; உணர்த்தியவர்கள் எவருமில்லை. என்றேனும் ஒரு நாள் கடவுளைக் காணவோ உணரவோ இயலுமென்றால் அது வரவேற்கத்தக்கதே.
########################################################################
08.08.2012இல் என்னுடைய பழைய வலைத்தளத்தில் வெளியான பதிவு இது.

10 கருத்துகள்:

  1. நானும்தான் அவரைப்பார்த்து நறுக்குத் தெரிச்சாப்ல நாலேநாலு கேள்வி கேட்க ஆசையாக இருக்கு.

    யாருடமாவது ஆலோசனை கேட்டால் ஊரணியில் வச்சு அமுக்கிடுவாங்கே போலயே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் பதிவில் பிழை திருத்தி முடிக்கவில்லை. வருகை தந்து சுவையாகக் கருத்துரையும் வழங்கிவிட்டீர்கள்.

      நன்றி...மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. கடவுள் வியாபாரப் பொருளாகிவிட்டார் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வியாபாரிகளைத்தான் நம் மக்கள் மதிக்கிறார்கள். இப்போதைக்கு விழிப்புணர்வு பெறுவதாகத் தெரியவில்லை.

      நன்றி ஜெயக்குமார்.

      நீக்கு
  3. அறிவுப்பசிஜி.. கடவுள் என்பது ஒரு நம்பிக்கை.. அவ்வளவே.. அவரைக் காட்டவும் முடியாது.. காணவும் முடியாது. நம்மை மீறிய ஒரு சக்தி இருப்பதை நம்பினால் அதுதான் கடவுள்.

    ஆனா நமக்கு நம்பிக்கை இருப்பதில் தவறில்லை.. அந்த நம்பிக்கையை அடுத்தவர்களுக்கு வலுக் கட்டாயமாகத் திணிப்பதுதான் தவறு. அப்படித் திணிக்கும்போதுதான்.. எங்கே கடவுள் காட்டு பார்க்கலாம் எனும் கேள்வி எழும்... அப்போ காட்டுகிறேன் வா எனப் பொய் சொல்ல வேண்டி வரும்... இது என்னோட கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நம்மை மீறிய ஒரு சக்தி//

      நம்மை மீறிய சக்தி...சரி. அந்தச் 'சக்தி'யை மீறிய 'சக்தி' எதுவும் இருக்கலாம்தானே? அப்புறம், அந்தச் சக்திக்கும் மேலான சக்தி?.....

      ஏதோ ஒரு சக்தி என்று சொல்லிவிடுவது மிகச் சுலபம். அந்தச் சக்திதான் கடவுளா? அவரின் தோற்றம் சாத்தியமானது எப்படி? இயங்குவது எப்படி? இப்படியான கேள்விகளுக்கெல்லாம் விடை இல்லை.

      இப்படி நம்மால் கேள்வி எழுப்பிக்கொண்டே போக முடியும். கேள்விகளுக்கும் முடிவு இல்லை.

      கேள்விகளுக்கு விடை கண்டவரும் இல்லை.

      இப்படி விடை காண முடியாத எத்தனையோ கேள்விகளுக்கு இடமளித்திருக்கிறது பிரபஞ்சம்.

      கடவுள்தான் அனைத்திற்கும் மேம்பட்ட சக்தி என்று நிரூபிப்பது அத்தனை எளிதல்ல.

      கருணை வடிவானவர் கடவுள் என்றால், வாழ்வில் தீமைகளுக்கும் பங்களித்தவர் யார் என்பன போன்ற கேள்விகளைக் கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

      கொஞ்சமும் தற்சார்பு இல்லாமல் ஆழ்ந்து யோசித்தால் ''எதுவும் புரியவில்லை'' என்று ஒத்துக்கொள்ளத் தோன்றும்.

      புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல், ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பனை செய்து, சிலைகள் வடித்து, கோயில்கள் எழுப்பி விழாக்கள் நடத்துவதும், மனிதர்களையே நடமாடும் கடவுள்கள் ஆக்குவதும் நகைப்பிற்குரியது அதிரா.

      நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இதுவொரு முற்றுப்பெறாத விவாதம். எனவே, கடவுள் குறித்த விளக்கவுரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

      மிகுந்த ஆர்வத்துடன் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
    2. ஆவ்வ்வ் எவ்ளோ பெரிய விளக்கம்.. நீங்கள் சொல்லியிருப்பது உண்மைதான்.. பல கேள்விகளுக்கு இங்கே விடை இல்லை... ஆனா பெரிய சக்தி எனும்போது சுரியனும் ஒரு கடவுள் எனச் சொல்கின்றனர் எல்லோ.. அப்போ சக்தி எவ்வளவு பெரிய வடிவெனும் அதைக் கடவுள் எனப் பார்க்கப்படுதோ என்னவோ.

      ஆனா கடவுளின் பெயரால் நடக்கும்.. முட நம்பிக்கைகளை நானும் வெறுக்கிறேன். மனிதர்களைக் கடவுளாகக் கும்பிடுவதும் எனக்குப் பிடிப்பதில்லை, இதுவரை அப்படி ஆரையும் நான் வணங்கியதில்லை.. ஆனா அடுத்தவர்களுக்கு அதில் நம்பிக்கை இருக்குதெனில் அதை நான் மதிக்கிறேன்.

      இன்னொன்று அறிவுப்பசிஜி... நம் வீட்டில் ஒவ்வொரு கடமைக்கும் ஒவ்வொரு இடம் இருக்கெல்லோ.. ஹோலில் சமைக்க மாட்டோம்ம்.. பாத்ரூமில் நித்திரை கொள்ள மாட்டோம்ம்.. ஆனா நினைச்சால் எங்கும் எதுவும் செய்யலாம் தானே? இருப்பினும் அதுக்குரிய இடத்திலதானே செய்கிறோம்..

      அப்படித்தான் கோயில்களும் அமைக்கப்பட்டிருக்கு.. கடவுள் எங்கும் இருக்கிறார் என சொன்னாலும் அதுக்கென ஓரிடம் தேவை ... ஹையோ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:)))

      நீக்கு
    3. இம்மாதிரி விவாதங்களால் பெரிதாக நாம் எதையும் சாதிக்கப்போவதில்லை. வெற்றி பெற வேண்டும் என்னும் வெறித்தனம் சிறிதுமில்லாமல் விவாதிப்பதன் மூலம் நமக்குள்ள மூடநம்பிக்கைகளில் சிலவற்றையேனும் விட்டொழிக்கலாம்.

      கூடுதல் விளக்கம் தந்ததற்கு மகிழ்ச்சி.

      நன்றி அதிரா.

      நீக்கு
  4. மீண்டும் கருத்துப்பெட்டி முடக்கமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிதாகப் பதிவு எழுதும்போது எப்படியோ பிழை நேர்ந்துவிடுகிறது. விரைவில் சரியாகும் என்று நம்புகிறேன் நண்பரே.

      நன்றி.

      நீக்கு