செவ்வாய், 12 ஜூன், 2018

சத்குருவின் ஒரு 'கலகல' கடவுள் கதை!!

'வாருங்கள்...நாமும் சத்குரு ஆகலாம்' என்னும் என்னுடைய முந்தைய பதிவுக்கு, பதிவர் 'அதிரா' அவர்கள், 'சத்குரு நல்ல விசயங்களும் சொல்கிறார்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அதை மனதில் கொண்டு சத்குருவின் தளத்தில் புகுந்து தேடியதில் கீழ்க்காணும் கதை கண்ணில் பட்டது. அவர் நல்லதைத்தான் எழுதியிருக்கிறார். படியுங்கள். https://isha.sadhguru.org/in/ta/

#முன்னொரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் 4 பேர் காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தனர்.
yogapart2imgஅவர்களில் ஒருவர் கர்ம யோகி, இன்னொருவர் கிரியா யோகி, மற்றொருவர் பக்தி யோகி, இன்னுமொருவர் ஞான யோகி. இந்த நால்வரும் எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள், ஆனால் அன்று சேர்ந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் எப்போதும் ஒன்று சேர மாட்டார்கள் என்று ஏன் சொன்னேன் என்றால், ஞான யோகி எப்போதும் அறிவைப் பயன்படுத்தி எதையும் தர்க்க ரீதியாகப் பார்ப்பவர், அவர்களுக்கு[?] ஒரே இடத்தில் உட்கார்ந்து ராம், ராம் என்று உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களாகத் தெரிவார்கள். எதையும் தர்க்க ரீதியாகப் பார்ப்பவர்களுக்கு, வாழ்க்கையை[க்] கூறுபோட்டுப் பார்ப்பவர்களுக்கு, பக்தர்களைப் பார்த்தால் முட்டாள்களாகத்தான் தெரியும்.

பக்தி யோகி[களோ?] எப்போதும் அனைவரையும் பார்த்துப் பரிதாபப்படுபவர்[கள்?]. கடவுள் இங்கேயே பக்கத்திலேயே இருக்கும்போது அவர் கைப் பிடித்து நடப்பதை விட்டுவிட்டு[அடடா, நமக்கெல்லாம் இது தெரியாமல் போயிற்றே!] எதற்காக கஷ்டப்பட்டு மூச்சுப்பயிற்சி செய்ய வேண்டும்? எதற்காக தலைமீது[தலைகீழாக] நிற்கவேண்டும்? என்று பக்தி யோகிகள்[2இடங்களில் எழுவாய்] மற்றவர்கள் மீது பரிதாபப்படுகிறார்கள்.

கர்மயோகி [நினைக்கிறார்,] பக்தி, ஞான, கிரியா யோகிகள் சோம்பேறிகள். வேலைக்குப் பயப்படுபவர்கள்[பயப்படுபவர்]. வேலைக்குப் பயந்தே எல்லாவிதமான தத்துவங்களையும், யோகப் பயிற்சிகளையும் கண்டுபிடித்திருக்கின்றனர் என்று நினைப்பவர். 

கிரியா யோகியோ அனைவரையும் ஒட்டுமொத்தமாக வெறுத்து ஒதுக்குபவர். முழு[ப்] பிரபஞ்சமுமே சக்திதான், தங்கள் சக்தியை மாற்றத் தெரியாமல் எதற்கு வெற்றுப் பேச்சு பேசுகிறார்கள்? கடவுள், பிசாசு என்பதெல்லாம் வெறும் பேச்சுதான் என்று அவர் நினைக்கிறார்[நினைப்பவர்].
அப்படி இந்த 4 பேரும் ஒருவர் மீது ஒருவர் வெறுப்புக் கொண்டிருந்தனர். எனவே எப்போதும் இந்த நால்வரும் ஒன்று சேரமாட்டார்கள். ஆனால் அந்த 4 பேரும் அன்று காட்டுக்குள் ஒன்றாக[ச்] சேர்ந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தபோது, புயல் மழை பெய்யத் துவங்கியது. நேரம் செல்லச்செல்ல மழை கடுமையானதால் அவர்கள் தங்குவதற்கு இடம் தேடினர். அப்போதுதான் பக்தி யோகி, இந்தத் திசையில் போனால் ஒரு பழைய கோவில் உள்ளது, அங்கு போய்த் தங்கலாம்[மேற்கோள் குறி இடவில்லை] என்று சொன்னார். அவருக்கு எல்லாக் கோயில்களின் இருப்பிடமும் தெரியும். மற்றவர்கள் அனைவரும் அவரை நம்பினார்கள். எனவே விரைந்து அந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். ஓடி அந்த[ப்] பழைய கோவிலை அடைந்தார்கள். அந்தக் கோயிலின் சுவர்கள் முன்பே இடிந்து விழுந்திருந்தது[ன]. 4 தூண்களும் கூரையும் மட்டுமே எஞ்சியிருந்தது[ன]. அந்த நால்வரும் கோவிலுக்குள்ளே ஓடினார்கள். ஓடியது கடவுள் மேல் இருந்த அன்பால் அல்ல, மழையிலிருந்து தப்பிப்பதற்காக. அந்த[ப்] புயல்மழையோ மிக ஆக்ரோஷமாக அடித்ததால் சாரல் எல்லா பக்கமும் வந்தது.
கோவிலின் நடுவே கடவுள் சிலை இருந்தது. அங்கு மட்டுமே மழையின் சாரல் குறைந்திருந்தது. எனவே அனைவரும் அந்த[ச்] சிலையின் அருகே ஓடினர். ஓடியவர்கள் அந்த[ச்] சிலையின் அருகே இறுக அணைத்து[ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டார்களா அல்லது, சிலையையா?] உட்கார்ந்திருந்தனர். அப்போது கடவுளே நேரில் தோன்றினார்[எந்த வடிவில் தோன்றினார் என்று ஊனக்கண்ணர்களாகிய நாம் கேட்கக் கூடாது; ஜக்கி போன்ற ஞானக்கண்ணர்களுக்கே தெரியும்] கடவுளைப் பார்த்தவுடன் அனைவர் மனதிலும் ஒரே கேள்விதான்[நால்வரும் வெவ்வேறு இயல்பினர். ஒரே கேள்வியைக் கேட்பது எப்படிச் சாத்தியம் என்றும் கேட்காதீர். காரணம் இருக்கும். எல்லாம் அவனின் திருவிளையாடல்] ஓடியது, ‘நான் நிறைய பூஜை செய்தபோதெல்லாம நீ தோன்றவில்லை, நான் 11 ரூபாய் காணிக்கை கொடுத்து அர்ச்சனையும் செய்தேன், அப்போதெல்லாம் நீ தோன்றவில்லை, வெறுமனே மழைக்காக இங்கே ஒதுங்கியபோது தோன்றுகிறாய்! என்று. பிறகு அவர்கள் கடவுளிடமே, ‘நான் பல காலங்கள் உனக்காக என்னென்னவோ செய்தேன், அப்போதெல்லாம் நீ வரவில்லை, இப்போதோ மழைக்காக மட்டும் இங்கே ஒதுங்கினோம், இப்போது தோன்றுகிறாய்’ என்று கேட்டனர். அதற்கு[க்] கடவுள் கூறினார், “கடைசியாக நீங்கள் 4 முட்டாள்களும் ஒன்று சேர்ந்திருக்கிறீர்களே! எனவேதான் வந்தேன்”(கைதட்டல்)#

கட்டுரையில், சந்திப்பிழைகள், எழுவாய் பயனிலை முரண்பாடு என்று மிகப் பல பிழைகள் உள்ளன என்று ஆதங்கப்படுகிறீர்களா? கூடாது. ஆகச் சிறந்த ஞானிகளைப் பொருத்தவரை மொழி ஒரு பொருட்டன்று. ரமண மகரிஷியும் கேரள ரிஷி ஶ்ரீநாராயண குருவும் மொழியே இல்லாமல் ஞானக்கண்களால் உரையாடியது உங்களுக்குத் தெரியும்தானே?
''இப்போது ஏன் தோன்றினாய்'' என்று நால்வரும் கேட்கிறார்கள்[அற்ப மானுடப் பதர்கள் கடவுளை நேரில் கண்டதும் மெய் சிலிர்த்துப் புளகாங்கிதப்பட்டிருக்க வேண்டும். கேள்வி எழுப்பி, என்றென்றும் தீராத பாவத்தைச் சம்பாதித்தார்கள்]. 

''நீங்கள் நான்கு முட்டாள்கள் சேர்ந்திருக்கிறீர்கள். அதனால்தான் வந்திருக்கிறேன்'' என்பது கடவுளின் பதில்.

நால்வரில் ஒருவர் கர்ம யோகி, இன்னொருவர் கிரியா யோகி, மற்றொருவர் பக்தி யோகி, இன்னுமொருவர் ஞான யோகி.

அறிவைப் பயன்படுத்தித் தர்க்க ரீதியாகப் பேசும் ஞான யோகியையும், கடவுள், பிசாசு என்பவையெல்லாம் வெறும் பேச்சு என்கிற கிரியா யோகியையும், கர்ம யோகியையும் சாடுவதோடு நில்லாமல், பக்தி யோகியையும் தம் சாடல் பட்டியலில் இணைத்துக்கொண்டிருக்கிறார் கடவுள்.

இந்த நால்வகை யோகிகளில் தாமும் ஒருவரே என்பதை உணர்ந்திருந்தும் இப்படியொரு கதையைக் கற்பித்துச் சொன்ன ஜக்கி அவர்களுக்கு ரொம்ப நல்ல மனசு.

நன்றி ஜக்கி வாசுதேவ் அவர்களே! 
-------------------------------------------------------------------------------------------------
இந்தக் கதை ஜக்கி எழுதியதே. என் கூற்றில் நம்பிக்கை இல்லாதவர்கள்.....

https://isha.sadhguru.org/in/ta/ என்னும் முகவரியைச் சொடுக்கி, முகப்புப் பக்கத்தில், wisdom என்பதைச் சொடுக்கி, articles என்பதையும் சொடுக்குங்கள். 'ஈஷா யோகாவில் உள்ள 4 தன்மைகள்' என்னும் தலைப்பின் கீழ் இந்தக் கதையைக் காணலாம்.

தளமெங்கும், வகை வகையான, அழகழகான ஆடைகள் உடுத்து அசத்துகிறார் ஜக்கி. பார்த்துப் பார்த்துப் பரவசப்படலாம்! 











11 கருத்துகள்:

  1. இப்போதெல்லாம் யாரும் சந்திப் பிழைகளைப் பொருட்படுத்துவதில்லை. உங்கள் பதிவுகளிலும் நான் பிழைகளைக் கண்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இப்போதெல்லாம் யாரும் சந்திப் பிழைகளைப் பொருட்படுத்துவதில்லை//

      எல்லாரும் அப்படியில்லை. சந்திப்பிழைகளால் பொருள் மாறுபடுவதுண்டு.

      என் பதிவுகளில் பிழையே இராது என்று நான் எப்போதும் சொன்னதில்லையே!

      நீக்கு
  2. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பிழைகளால் க ருத்துத் திரிபு ஏதும் ஏற்படவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவருடைய இந்தப் பதிவில் இல்லாமலிருக்கலாம். மற்றப் பதிவுகளில் இருக்க வாய்ப்புண்டு.

      நீக்கு
  3. தலைப்பில் இருக்கிற கல கல விமர்சனத்தில் இல்லையே!

    பதிலளிநீக்கு
  4. ஆண்டாண்டு காலமாக சாமியார்களும், மதபோதகர்களும் ராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஜக்கியும் ராஜ வாழ்க்கை வாழ்கிறார் நண்பரே.

      நன்றி.

      நீக்கு
  5. ///வாருங்கள்...நாமும் சத்குரு ஆகலாம்' என்னும் என்னுடைய முந்தைய பதிவுக்கு, பதிவர் 'அதிரா' அவர்கள், 'சத்குரு நல்ல விசயங்களும் சொல்கிறார்' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். அதை மனதில் கொண்டு//

    ஹையோ இப்போ எனக்கு ஒரே கொயப்பமா இருக்கே:) இது நல்ல கதையா கெட்ட கதையா?:)) ஒண்ணுமே பிரியல்லே உலகத்திலே:)) என்னமோ நடக்குது மர்மமா இருக்குதூஊஊ ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொயப்பமே வேண்டாம். 'நம்புறவங்களுக்குக் கடவுள் இருக்கார்; நம்பாதவங்களுக்கு இல்லே'ன்னு சொல்றமாதிரி, நம்புறவங்களுக்கு இது நல்ல கதை; நம்பாதவங்களுக்குக் கெட்ட கதை.

      அதிராவுக்கு அனேக நன்றிகள்.

      நீக்கு
    2. மாறுபட்ட கருத்துடையோரையும் சிரிக்க வைத்துச் சிந்திக்கத் தூண்டும் மனப்பக்குவம் பெற்றவர் என்பதால் அதிரா ஞானிதான். 100% உண்மை.

      நீக்கு