வியாழன், 2 ஏப்ரல், 2020

பிறந்த இடத்தை நாடுதே பேதை மட நெஞ்சம்!!![நகைச்சுவை]

மேற்கண்ட ‘வாசகம்’ பதினெண் சித்தர்களுள் ஒருவரான பட்டினத்தார் மனம் வெறுத்துச் சொன்னது.

மனதில் எவ்வித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் தராமல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், ‘மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமல்ல, ஏனைய இயற்கைப் பொருள்களுக்கும் பிறந்த இடத்தை நாடிப் போகும் குணம் உண்டு’ என்று.

தன் மையப் பகுதியிலிருந்து அணு ஆற்றலை உற்பத்தி செய்வதோடு, சுயமாகவே ஒளிவிட்டுப் பிரகாசிக்கிற ‘வெப்ப வாயுக் கோளம்’தான் சூரியன் என்கிறது விஞ்ஞானம்.

ஓய்வு ஒழிச்சலின்றி அயராது உழைத்து ஆற்றலை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்தச் சூரியனில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் என்ன ஆகும்?
அது சுருங்க ஆரம்பிக்கும். அதிலுள்ள பொருள்கள் ஒன்றன்மீது ஒன்று ஒட்டி நெருக்க, சூரியனின் அடர்த்தி அதிகரிக்கும். அடர்த்தி அதிகமாவது என்றால், சிறிய இடத்தில் அதிகப் பொருள் சேர்ந்துவிடுவது.

இக்கட்டத்தில், நியூட்டனின் ஈர்ப்பு விசை விதிப்படி, சூரியனின் ஈர்ப்புவிசை அதிகமாகி அதன் அருகிலுள்ள புதன் [Mercury], வெள்ளி [Venus] போன்ற கிரகங்கள் சூரியனுக்குள் இழுக்கப்படும்.

இப்போது சூரியனின் எடை மேலும் அதிகமாகும்; ஈர்ப்பு விசையும் கூடும்.

அருகிலுள்ள பூமி போன்ற பிற கோள்களையும் பொருள்களையும் அது இழுத்துக்கொண்டே இருக்கும்.

அதன் ஈர்ப்பு விசை மிக மிக மிக அதிகமாகி ஒளியைவிட வேகமாகப் பயணிக்கும். இந்நிலையில், அது ஒளியைக்கூட விழுங்கிவிடும்!

இப்போது, சூரியன் ஒரு கருந்துளை [Black Hole] போல் காட்சியளிக்கும்.

மேற்கண்ட அதிசயம், சூரியன் தன்னிடமுள்ள எரிபொருளை இழந்துவிடும் நிலையில் நிகழ்வதாகும்.

ஆக, சூரியனிலிருந்து வெளிப்பட்ட பூமி முதலான கோள்களும் பிறவும் மீண்டும் சூரியனுக்குள்ளேயே சங்கமம் ஆகிவிடும்! [பிறந்த இடத்தை நாடுதல்!]

இது நிகழவிருப்பது எப்போது?

சூரியனிடமுள்ள எரிபொருள் இன்னும் 500 கோடி ஆண்டுகளுக்குத் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்களாம்.

அதனால், மனித இனம் சூரிய நெருப்பில் கரையப் போவது இப்போதைக்கு இல்லை என்றும் ஆற்றுப்படுத்துகிறார்களாம். ஆனாலும்...........

நீங்கள் எப்படியோ, என்னால் கவலைப்படாமல் இருக்க முடியலீங்க.

ஒவ்வொரு மனித உடம்புக்குள்ளும் ஆன்மா இருக்கிறது. அது, அடுத்தடுத்துப் பிறவிகள் எடுத்துக்கொண்டேயிருக்கும் என்று ஆன்மிகவாதிகள் அடித்துச் சொல்கிறார்கள்.

எனவே, நானொருவன் செத்துச் செத்துப் பிறந்துகொண்டிருப்பதும் சாசுவதம்தான்.


நான் மோட்சலோகம் போவதெல்லாம் சாத்தியமே இல்லை; பூமி சூரியனில் கரையப்போகும் அந்தக் காலக்கட்டத்தில்,  மனிதனாக இல்லையென்றாலும் ஒரு நாயாகவோ நரியாகவோ பன்றியாகவோ கழுதையாகவோ பிறந்துதானிருப்பேன். பூமியோடு சேர்ந்து சூரிய நெருப்பில் சிக்கி வெந்து புழுங்கிச் சாம்பலாகப் போவதை நினைத்தால்..........

 இப்போதே ஈரக்குலையெல்லாம் நடுங்குதுங்க!!!

[இப்பதிவில், வேறு ‘எதையோ’ எதிர்பார்த்து வந்திருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள்!]

***********************************************************************************
2014, பிப்ரவரி மாதத்தில் எழுதியது.‘பூஜ்யத்திலிருந்து பூலோகம்’ [உலக இயற்கை ஆராய்ச்சி மையம், பாப்பாரப்பட்டி-636809; தர்மபுரி மாவட்டம். முதல் பதிப்பு: 2007] என்ற நூலிலிருந்து தகவல்களைச் சுட்டுக் கொஞ்சமே கொஞ்சம் சுவையும் சேர்த்திருக்கிறேன்!!
***********************************************************************************