பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 7 செப்டம்பர், 2020

தற்கொலை முயற்சியும் தப்பிப் பிழைப்பவர்கள் படும்பாடும்!!!

#"உடலில் தீ வைத்துக் கொள்பவர்களுக்கு அதனால் ஏற்படும் காயங்களைப் பொருத்துச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். தீக்காயங்கள் முதல், இரண்டாம், மூன்றாம் டிகிரி என்று வகை பிரிக்கப்படுகிறது. இதில் மூன்றாம் டிகிரித் தீப்புண் ஏற்பட்டவர்களுக்கு ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா என்னும் திரவம் தீக்காயத்தால் சேதமடைந்த ரத்தக்குழாய்கள் வழியே வெளியேறிவிடும். ரத்த அழுத்தம் குறைந்து, சிறுநீரகம், இதயம், இரைப்பை போன்றவை பாதிக்கப்படும்.

தசையோடு ஒட்டிய தசைநார்கள், நரம்புகள் போன்றவையும் பாதிக்கப்படுவதால் கைகால் தசைகள் இறுக்கமாகிவிடும். விரல்கள் மற்றும் கைகளை அசைக்க முடியாது. குடலில் ஏற்படும் புண்ணால் உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் நீண்ட நாட்கள் வேதனைப்பட வேண்டியிருக்கும்.

தீக்காயத் தழும்புகள் ஆற வெகுநாட்கள் பிடிக்கும். பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பழைய நிலைக்குக் கொண்டுவந்தாலும் வாழ்நாள் முழுவதும் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்து வருத்திக்கொண்டே இருக்கும்.

தங்கள் உருவத்தைப் பார்த்து இவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாவார்கள். சிலர் அமிலத்தை(Acid)க் குடித்துவிடுவார்கள். தொண்டையில் புண், வீக்கம் ஏற்படுவதால் மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி, அடிவயிறு வலி, ரத்த வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படும். உணவுக்குழாய், இரைப்பைகளில் புண் ஏற்பட்டுச் சாப்பிடவே முடியாத நிலை ஏற்படும். மேற்புறத்தோல், கண்களில் ஏற்பட்டுவிட்ட புண், கொப்புளங்கள் ஆகியவை பயங்கரமான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, சிலருக்குக் கண் பார்வையே பறிபோகும் அபாயம் உண்டு.

தூக்குப் போட்டுத் தற்கொலைக்கு முயற்சிசெய்தால் கயிறு இறுக்கி கழுத்து எலும்பு உடைந்துவிடும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுவதால் மயக்கமடைந்துவிடுவார்கள். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்கள் அடைபட்டு ரத்த ஓட்டம் நின்றுவிடும். அவர்களை உடனே காப்பாற்றி உயிர்பிழைக்க வைத்தாலும், நினைவுத்திறன், மூளைச் செயல்பாட்டுத்திறன் குறைய வாய்ப்புண்டு. முன்புபோல் அவர்களால் பணியில் திறம்படச் செயல்பட முடியாது.

உயரமான கட்டிடங்களிலிருந்து விழுபவர்களின் உடலில் கை, கால் எலும்புகள் முறிந்துவிடும். சிலருக்கு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டு. வாழ்க்கையே முடங்கிப்போவதுண்டு. 

சிலர் மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத் துண்டித்துக்கொள்வார்கள். அதிக அளவில் ரத்தம் வெளியேறி, ரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் ஏற்படும். இவர்களுக்கு நரம்புப் பாதிப்புகள் ஏற்படலாம்.

விவசாயத்துக்கு உபயோகிக்கும் ரசாயனப் பூச்சிக்கொல்லி மருந்துகளைக் குடித்தவர்களைக் காப்பாற்றுவதில் 50 சதவீத வாய்ப்பு மட்டுமே உண்டு. உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் நோய்ப் பாதிப்பால் அவதிப்படுவார்கள். 

இப்படி எந்த முறையில் தற்கொலைக்கு முயற்சித்தாலும், உயிர் பிழைத்தவர்கள் வாழ்நாள் முழுவதும் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதிப்படைவதை எண்ணியாவது தங்களை மாய்த்துக்கொள்ளும் எண்ணத்தைக் கைவிடவேண்டும்.

ஏதேனும் பிரச்னை என்றால் தங்களுக்கு நம்பகமானவர்களிடம் அதுபற்றி சொல்ல வேண்டும். தேவைப்படுகிறவர்களிடம் தயங்காமல் உதவிகள் கேட்க வேண்டும். உளவியல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். சாவதற்கு நூறு வழிகள் இருக்கும்போது, வாழ்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்காதா என்ன?’’ என்கிறார் ஸ்னேகா தற்கொலைத் தடுப்பு மையத்தின் நிறுவனரும், அறங்காவலருமான லஷ்மி விஜயகுமார். 

தகவல்: என்.ஹரிஹரன்#
=====================================================================
நன்றி: குங்குமம் ‘டாக்டர்’ http://www.kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2219&id1=140&issue=20180101