அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 3 ஜனவரி, 2021

'அரைவேக்காடு' மனிதர்கள்!!!

பிரபஞ்சம் புதிர்கள் நிறைந்தது. ஏன், எப்படி, எப்போது போன்ற விடை காண இயலாத சில கேள்விகளைத் தன்னுள் அடைகாத்துக்கொண்டிருப்பது. 

அவதாரங்கள், ஞானிகள், மதவாதிகள் போன்றோரெல்லாம் இக்கேள்விகளுக்கான பதில்களாகத் தத்தம் அனுமானங்களை மட்டுமே பதிவு செய்தார்கள். அனுமானங்கள் உண்மை ஆகிவிடா. 

கடவுள் என்று ஒருவர் இருப்பதை முழுமையாக[100%] நம்பியவர் எவருமில்லை. வாழ்ந்து மறைந்த...வாழ்ந்துகொண்டிருக்கிற அத்தனை பேருமே அரைவேக்காடுகள்தான். காரணம், அதற்கான ஆதாரங்களை முழுமையாகக் கண்டறியாமையே.

அனைத்திற்கும் மூலகாரணமானவர் கடவுளே என்பதும், விதியால் கட்டுப்படுத்தப்படுவது உயிர்களின் வாழ்க்கை என்பதும், கர்மவினைக்கேற்ப மறுபிறப்பும் சொர்க்கநரகங்களும் வாய்க்கின்றன என்பதும் வெறும் அனுமானங்களே.

ஆன்மிகவாதிகளின் இடையறாத பரப்புரை காரணமாக, மக்களில் பெரும்பான்மையானவர்கள் கடவுளையும் அவரோடு தொடர்புடைய பல கற்பனைக் கதைகளையும் நம்புகிறார்கள்.

கடவுளை நம்புவதைக் காட்டிலும் விதியை நம்புகிறவர்களின் எண்ணிக்கை மிகுதியாக இருத்தல்கூடும். காரணம்.....

தாங்கொணாத துயரங்களுக்கு ஆளாகிறபோது, ''எல்லாம் என் தலைவிதி'' என்று முதலில் விதியைத்தான் நொந்துகொள்கிறார்கள் நம் மக்கள். சற்றுத் தாமதமாகவே, ''கடவுளே, ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறாய்?'' என்று கடவுளை நினைவுகூர்கிறார்கள்.

கடவுளின் 'இருப்பு' இன்றளவும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதனால்தான், நம் மக்களில் எவரும் கடவுளை முழுமையாக நம்புவதில்லை. நம்புவதுபோல் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். மனிதர்கள் 100%  அவரை நம்புவது உண்மையெனில், நம்புகிற அத்தனை பேரும் உத்தமர்களாகவும், மனச்சுத்தம் உள்ளவர்களாகவும் வாழ்வது சாத்தியமாகியிருக்கும். இன்றளவும் அது சாத்தியப்படவில்லை.

கடவுளின் மீது கொண்டிருக்கிற அதே அரைகுறை நம்பிக்கைதான் விதியின் மீதும் இவர்களுக்கு இருக்கிறது.

தாங்கள் நிகழ்த்தும் பாவபுண்ணியச் செயல்களுக்கேற்ப விதி தங்களை 100% தண்டிக்கும் என்பதில் முழுமையான நம்பிக்கை இருக்குமேயானால், இவர்கள் அத்தனைபேரும் தர்மவான்களாக மாறியிருப்பார்கள். அத்தகையதொரு மாற்றம் இந்த வினாடிவரை இம்மண்ணில் நிகழ்ந்திடவில்லை.

விதியை முழுமையாக நம்பவில்லை எனினும், அதன் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலுமாக இழந்துவிடவில்லை எனலாம். அதன் விளைவு.....

விதி வலிமையானது என்றெண்ணி, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்கான வழிவகைகளைத் தேடுகிறார்கள்; ஆன்மிகவாதிகளையும் ஜோதிடர்களையும் நாடுகிறார்கள்.

அவர்களின் தவறான வழிகாட்டுதலால், தன்னம்பிக்கை பறிபோகிறது. பெருமளவில் பொருளும் வீணாகிறது. 

இம்மாதிரி இழப்புகளைத் தவிர்க்க வேண்டுமாயின் விதி குறித்து ஆழ்ந்து சிந்திப்பது அவசியம். அத்தகைய ஒன்று உள்ளதா என்பதை ஆராய்ந்து அறிதல் வேண்டும்.

வாசிப்போரை ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டுவதும், விதி குறித்த விரிவான ஆய்வுக்கு உட்படுத்துவதும் இந்நூலின் நோக்கமாகும்.

===============================================================

'மசுரு விதி' [அமேசான் கிண்டில் வெளியீடு] என்னும் என் நூலின் தொடக்கவுரையாக அமைந்துள்ளது இப்பகுதி.