அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 4 ஜனவரி, 2021

எழுத்தாளர் 'கி.ரா.'வுக்கு ரொம்பத்தான் குறும்பு!!!

'கரிசல் இலக்கியத்தின் தந்தை' என்று போற்றப்படும் கி.ராஜநாராயணன், மண் வாசனை கமகமக்க மட்டுமல்ல, ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்பது போல் எழுதிச் சிரிப்பூட்டுவதிலும் வல்லவர்.

டிசம்பர் 1974இல் 'குமுதம்' வார இதழில் வெளியான, 'வால் நட்சத்திரம்' என்னும் அவரின் சிறுகதை உங்கள் வாசிப்புக்கு.....

வால் நட்சத்திரம்

"ஜானா.....?'

"ஆ...ம; ஜானா ஜாவன்னா! ம்க்ஹூம்."

ஜானு உடம்பைக் குலுக்கி விடுவித்துக்கொண்டாள்.

இவள் எனக்கு மச்சினி.

கம்மங்கதிரைக் கண்டா கை சும்மா இருக்காது; மாமன் மகளைக் கண்டா வாய் சும்மாயிருக்காது' என்பது சொலவடைச் சொல். ஆனால், சொன்னவன் சரியாகச் சொல்லவில்லை; மாமன் மகளைக் கண்டா கை சும்மா இருக்காது என்று சொல்லியிருக்கணும்.

ஜானாவின் அக்கா சாருவை நான் கல்யாணம் கட்டிக்கொண்டபோது இவள் 'இம்பூட்டுப்பிள்ளை'யாகத்தான் இருந்தாள். பெண் வளர்ச்சி பசளைக்கொடி என்பார்கள். 'நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்' என்கிறது இதுகளுக்குத்தான் செல்லும்.

கேட்டவர்களுக்குத்தான் தெரியும் சோளப்பயிரின் வளர்ச்சி. மத்தியான வெயிலில் செழித்த சோளப் பயிருக்குள் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கும்போது பயிரின் குருத்தை இலை விரிந்து வெளியே தள்ளும் சத்தம் நெருக் நெருக் என்று கேட்கும். நேற்றுப் பார்த்த பயிர் இன்று ஒரு ஒட்டை வளர்ந்திருக்கும். பயிருக்குப் பக்கத்தில் போனால் சாராய நெடி வீசும். இந்தப் பெட்டைப் பிள்ளைகளும் அப்படித்தான்; அதுகளுக்கென்று ஒரு வளர்ச்சி. அதுகளுக்கென்று ஒரு நெடி.

ஜானு சுண்டக் காய்ச்சிய பால் ஆடையின் நிறம் கொண்டவள். அவளுடைய நகங்கள் இளஞ்சிவப்பு அரளிப் பூவின் நிறம் மாதிரி இருக்கும். மஞ்சள் பூசிய விரல்களில் பாதிவரை மருதாணியின் செம்மை படர்ந்திருப்பதால் அவைகள் பார்ப்பதற்குக் கார்த்திகைப் பூ இதழ்கள் போலிருக்கும்.

தனிமையில் சிக்கும்போதெல்லாம் அவள் இடுப்பை நோண்டாமல் இருக்க முடியாது என்னால். பித்தளைக் குடத்தின் கழுத்து மாதிரி அப்படி ஓர் அமைப்பான இடுப்பு.

அவள் என் நோண்டுதலை வேண்டாத மாதிரியும் இருக்கும்; விரும்புகிற மாதிரியும் இருக்கும். எங்கள் ஊர், கண்ணன் பிறப்புத் திருவிழாவில் விளையாடும் உறி மாதிரி ஏமாற்றிச் சிரிப்பாள். இந்தச் சிரிப்புக்காகவே அவளை நெருங்குவது உண்டு. வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத சிரிப்பு.

ஒரு நாள் சாருவும் அவள் அம்மாவும் ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு, "ஜானு சீக்கிரம் உட்கார்ந்துவிடுவாள் போலிருக்கே" என்று சொல்லிக்கொண்டிருப்பதை மாடிப்படியில் இறங்கிவரும்போதே கேட்டேன். அவர்கள் என்னைப் பார்க்கவில்லை. அவர்கள் எதிரே உட்கார்ந்து முல்லை அரும்புகளைத் தொடுத்துக்கொண்டிருந்த ஜானு பார்த்துவிட்டாள். அப்போது அவர்களுக்குத் தெரியாமல் ஒரு சிரிப்புச் சிரித்தாள். மனதைக் கிறங்கடிக்கும் சிரிப்பு. அவளுடைய சிரிப்பும் அவளோடு வளர்ந்துகொண்டே வந்தது.

-பிறந்த மேனியாய், தங்க அரைஞாண் கொடி மட்டும் இடையில் மின்ன, தவழ்ந்துகொண்டே என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு வந்தது.

-அரைஞாண் கொடியில் அரசிலை மட்டும் தொங்க அண்ணாந்து சிரித்துக்கொண்டே வந்து என் முழங்காலைக் கட்டிக்கொண்டது.

-பின்னொரு நாள், பள்ளியிலிருந்து தெருவில் சேக்காளிகளுடன் வரும்போது என்னைப் பார்த்துவிட்டுத் தரையை நோக்கிச் சிரித்துக்கொண்டே அவர்களுடன் பேசிக்கொண்டு சென்றது.

-ஒரு நாள், அவர்கள் வீட்டுக்குச் செல்கிறேன். திண்ணையில் சாருவும் அவள் அம்மாவும் இருக்கிறார்கள்.

வலது பக்கம், மதில் சுவரை ஒட்டிய கதவில்லாத குளிப்பறையில் குளித்துக்கொண்டிருப்பது ஜானுதான் என்று தெரிந்தே அங்கு போனேன். "அய்யோ வராதீங்கோ, இங்கே நான் குளிச்சிட்டிருக்கேன்" என்று கூக்குரலிடுகிறாள். அவள் அப்படிச் சொன்னதே எனக்கு ஒரு தைரியம். "ஆ...மாம், நீ பெரிய்ய மனுசி குளிச்சிட்டிருக்கே; நான் வரப்படாது" என்று சொல்லிக்கொண்டே அவளை நெருங்குகிறேன். திண்ணையில் பெரிதாகச் சிரிக்கும் இரண்டு பெண்களின் குரல்கள் கேட்கின்றன.

-ஜானுவின் பெண் வளர்ச்சியை இந்தக் கால்வாய்க் கண்கள் தொடர்ந்து கவனித்து வந்திருக்கின்றன.

அரை நெல்லிக் காய்.

தெல்லுக் காய்.

பாதி எலுமிச்சம் பழம்.

பணியாரம்.

வட்டுக் கருப்பட்டி.

கடுமையான கோடைகாலத்தில் ஒரு நாள் மத்தியானம். சாருவும் நானும் பரமபதசோபனம் விளையாட்டில் மூழ்கியிருந்தோம். சாருவின் வீட்டு ஏகாலி வந்து நின்றான்.

"சின்னம்மா ருது ஆயிட்டாங்க."

மங்கலச் செய்தி கொண்டுவந்தவனுக்கு, சாரு வளமைப்படி அரை ரூபாய் நாணயமும் வெற்றிலை பாக்கும் வைத்துக் கொடுத்தனுப்பினாள்.

நாங்கள் கருப்பட்டியும் நல்லெண்ணெயும் கதலி வாழைப் பழமும் கொண்டு போனோம்.

அங்கே வீட்டின் பின்புறத்தில், கம்மந்தட்டையினால் ஒரு சிறிய பர்ணகசாலை போல வேய்ந்து கொடுத்த குடிசைக்குள் ஜானு 'உட்கார்ந்து' இருந்தாள்.

குடிசையின் வாசலில் குறுக்காக ஒரு உலக்கையைப் போட்டிருந்தார்கள். அவள் கையில் ஒரு இரும்புச் சினுக்கு வலியைப் பிடித்துக்கொண்டிருந்தாள்.

நான் போய் நின்றதும், பார்க்காதது போல் என்னைப் பார்த்தாள்.

ஒரு அந்நியமாகிவிட்ட பார்வை. எனக்கு நா எழவில்லை. எனக்குள் இப்படிச் சொல்லிக்கொண்டேன், "பாவா வந்திருக்கேன்."

அவளுடைய முகத்தில் எந்தவிதச் சலனமும் இல்லை; குறுஞ்சிரிப்புகூட இல்லை.

பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

ஜானு?

மீண்டும் குடிசையில் பார்க்கிறேன்.

வாசலில் குறுக்காக ஒரு உலக்கை போடப்பட்டிருந்தது.

======================================================================