பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 8 ஜூன், 2021

'ஒன்று' என்று ஒன்றுமே இல்லை!!!

நான் அறிவியல் அறிந்தவன் அல்ல; அதைப் பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன். தெரிந்தவற்றைக் கொண்டு உருவாக்கியது இந்தப் பதிவு. 

இது,  பயனுடையதாக அமையுமோ இல்லையோ, படித்து முடித்த பின்னர் சிறிது நேரமேனும்  சிந்திப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

                                                                               *               *

'ஒன்று' மட்டுமே உள்ளது என்று சொல்லும்படியான எதுவும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை['ஒன்று' என்பது 'ஒன்றாதல்' என்பதன் மருவிய வடிவம். ஒன்றாதல்... பல ஒன்றிணைதல்].

அனைத்துப் பொருள்களும் பல... மிக மிக மிகப் பல அணுக்களால் ஆனவை. அவற்றின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

இவ்வுலகில் வாழ்ந்த... வாழ்ந்துகொண்டிருக்கிற உயிர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில்; அண்டவெளியில், தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிற கோள்கள் & நட்சத்திரங்களின் எண்ணிக்கையும் அவ்வாறே.

காற்று எனப்படுவது ஒற்றைப்படையான 'ஒன்று' என்று சொல்லத்தக்கதல்ல;  வரம்பற்ற அணுக்களால் உருவானது. நிலம், நீர் போன்றவையும் அத்தன்மையனவே.

கோள்களையும் நட்சத்திரங்களையும், அவை போல்வனவற்றையும் விழுங்குவதும்[உள்வாங்குதல்] பின்னர் ஒரு காலக்கட்டதில் கக்குவதுமான[வெளியேற்றல்] பேரதிசயத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிற 'கருந்துளை', 'ஒன்று' மட்டுமே ஆக இருப்பது அல்ல. அதை ஆராய்ந்தறிந்து சொன்ன அறிவியல் அறிஞர்களே 'வெளி'யில் பல கருந்துளைகள் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

அனைத்துப் பொருள்களுக்கும் இயங்குதளமாக இருக்கிற பிரபஞ்சம்கூட 'ஒன்று' மட்டுமே என்றில்லாமல், 'பல'வாக இருப்பதாக  விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்[பிரபஞ்சம் 'ஒன்று அல்ல; 'பல'வும் அல்ல; எல்லையற்று/வரம்பற்று விரிந்து பரந்து கிடப்பது என்றும் சொல்லப்படுகிறது].

ஆக.....

தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டது போல், அண்ட வெளியில் அல்லது பிரபஞ்ச வெளியில்[இரண்டையும் எப்படி வேறுபடுத்திக் காட்டுவது என்பது புரியவில்லை] தோற்றம் தருகிற அல்லது, இயங்குகிற 'எந்த' ஒன்றும் 'ஒன்று' என்னும் எண்ணிக்கையில் அடங்குவதல்ல.

மேலே சொல்லியவற்றை ஒரு வரியில் சொன்னால்.....

 'எந்த ஒன்றும் ஒன்றாக இல்லை' என்பதே.

எந்த ஒன்றும் 'ஒன்று' என்று இல்லாத நிலையில், அனைத்திற்கும் மூலாதாரமாக இருப்பதாக ஆன்மிகவாதிகளால் நம்பப்படும் 'கடவுள்' மட்டும் 'ஒன்று'[ஒருவர்] ஆக இருக்கிறது என்று சொல்வது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதாக இல்லை' என்பது உறுதிப்படுத்தப்படுகிறது!

                                                                         *                *

"நீ கடவுள் என்று ஒருவர் இருப்பதே உறுதிப்படுத்தப்படவில்லை" என்று நாத்திகர்கள் சொல்வதை வலியுறுத்திக்கொண்டிருப்பவன். அப்புறம் எதற்கு 'அவர் ஒருவரல்ல' என்னும் இந்த 'அறுவை' ஆராய்ச்சி?" -இது உங்களில் சிலரின் கேள்வியாக இருக்கக்கூடும்.

நல்ல கேள்விதான்! ஹி...ஹி...ஹி!!

==========================================================================================

*உங்களின் பொன்னான நேரத்தை வீணடித்திருந்தால் மன்னியுங்கள். பிழைபட ஏதும் சொல்லியிருந்தால் அலட்சியப்படுத்துங்கள்.

நன்றி!