அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 29 ஜூன், 2023

பாதயாத்திரை போகவிருக்கும் அண்ணாமலைக்கு ஒரு பச்சைத் தமிழனின் பரிந்துரை!!!


அண்ணாமலை அவர்களே,

2024இல் நடபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில்கொண்டு தமிழ்நாடெங்கும் ‘நடைப்பயணம்’[பாதயாத்திரை] செல்ல நீங்கள் முடிவெடுத்திருப்பதாகச் சற்று முன்னர் ‘மாலைமலர்’ இதழில் செய்தி படித்தேன்.

முதல் கட்டப் பயணம் ராமேஸ்வரத்தில் தொடங்கிக் கன்னியாகுமரியில்  முடிவடையவிருப்பதையும் அறிந்தேன்.

“என் மண். என் மக்கள்” என்னும் முழக்கத்துடன் பயணம் அமைவது குறித்து அளவிறந்த மகிழ்ச்சி எய்தினேன்.

நான் உங்களுக்குச் சில பரிந்துரைகளை வழங்கவிருப்பதற்குக் காரணமே, இந்த “என் மண். என் மக்கள்” என்னும் முழக்கம்தான்.

இங்கே, ‘என் மண்’ என்பது இந்திய மண்ணைக் குறிக்குமே தவிர, தமிழ் மண்ணை அல்ல. காரணம், “நான் தமிழ் நாட்டவன்” என்னும் குறுகிய மனப்பான்மை கொண்டவராக நீங்கள் எப்போதும் இருந்ததில்லை. 

அதைப் போலவே, உங்கள் நோக்கில் ‘என் மக்கள்’ என்பது இந்திய மக்கள் அனைவரையும் குறிக்குமே தவிர, தமிழ் மக்களை[மட்டும்]க் குறிக்காது.

‘கடைசி மூச்சு உள்ளவரை பெருமைமிகு கன்னடன்’ எனக் கூறியவர் நீங்கள். தமிழகத்தில் பா.ஜ.க-வில் இணைந்து “நான் என்றும் தமிழன்” என்று முழங்கினீர்கள். இதைத் தமிழர்கள் ஏற்கவில்லை. இந்த இரு பேச்சுகளையும் குறிப்பிட்டு நேரத்திற்கும், இடத்திற்கும் தகுந்தபடி பேசுவதாக உங்களை விமர்சித்தார்கள்.

நீங்கள் ஓர் இந்தியர்; இந்தியாதான் உங்களின் மண் என்பது உறுதிப்பட்டுவிட்ட நிலையில் நான் உங்களுக்கு வழங்கும் பரிந்துரையாவது.....

நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் நடைப்பயணத்தின் மூலம், நடபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளை அறுவடை செய்வது உங்களின் ‘உள்நோக்கம்’ என்பதால், நடைப்பயணத்தின்போது மறந்தும் “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழங்கிவிடாதீர்கள்.

அப்படி முழங்கினால், ஓட்டுக்காக நீங்கள் இப்படி முழக்கமிடுவதாகச் சொல்லி தமிழ் மக்கள் உங்களை எள்ளி நகையாடுவார்கள்.

எனவே, “இந்தியா என் மண்” என்றும், “இந்திய மக்கள் என் மக்கள்” என்றும் முழக்கமிடுங்கள்.

தமிழ்நாட்டு மக்கள் அதிபுத்திசாலிகள் என்பதால், ‘தமிழ் மண் இந்திய மண்ணுக்குள் அடங்கும் என்பதையும், தமிழ் மக்களும் இந்திய மக்களே என்பதையும் மனதில் கொண்டுதான் நீங்கள் இவ்வாறு பேசியிருக்கிறீர்கள் என்பதை மிக எளிதாகப் புரிந்துகொள்வார்கள்.

உங்களின் இந்திய ‘மண்’ பற்றுதலுக்காகவும், இந்திய மக்களின் மீதான உங்களின் பற்றுதலுக்காகவும் தவறாமல் உங்கள் கட்சியான ‘பாஜக’வுக்கு வாக்களிப்பார்கள் என்பது உறுதி.

மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.....

ஓட்டுக்காக, “தமிழ் மண் என் மண்” என்றோ, “தமிழ் மக்கள் என் மக்கள்” என்றோ முழக்கமிட்டுப் பிரிவினைக்கு வழிவகுத்துவிடாதீர்கள்! உங்கள் ‘நடைப்பயணம்’ நல்லதொரு வெற்றிப் பயணமாக அமைந்திட என் வாழ்த்துகள்!