சனி, 4 மே, 2024

பெரும் பேரழிவு காத்திருக்கிறது! அடங்கி அரவணைத்து வாழ்வீர்!!!

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில், 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

ஆய்வுக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில்.....

//அப்போது பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். உலகில் கார்பன் டை ஆக்சைடின் அளவு இப்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும். வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்துச் சிதறும். பூமியின் பெரும் பகுதி எரிமலைக் குழம்புகளால் மூடப்படும்.

மிக மிகக் கடும் வெப்பம் காரணமாக. பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்.

66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புகூட இதேபோல ஒரு பெரும் பேரழிவு நிகழ்ந்திருக்கலாம்[டைனோசர்கள் அந்தக் காலக்கட்டத்தில்தான் அழிந்திருக்கக்கூடும்]// என்கிறார்.

கடும் எச்சரிக்கை!

250 மில்லியன் ஆண்டுகளுக்கு அப்புறம்தானே இந்தப் பேரழிவு நிகழப்போகிறது. இப்போது இருப்பவர்களில் எவரும் அப்போதுவரை வாழப்போவதில்லை. இது குறித்து நாம் கவலைப்பட ஏதுமில்லை” என்றெண்ணி இச்செய்தியை எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

காரணம்:

நம் புற உடம்புதான் அழிகிறதே தவிர, அக உடம்பிலுள்ள ஆன்மா அழிவதில்லை. எத்தனை எத்தனை எத்தனையோ மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் அது அப்போது வாழ்கிற மனித உடம்புக்குள் இருந்துகொண்டுதான் இருக்கும்.

மிகை வெப்பத்தால் ஒட்டுமொத்த உலகமும் பற்றி எரியும்போது, அதில் சிக்கி நம் உடம்பு அழிவதோடு ஆன்மாவும் அளப்பரிய வேதனையை அனுபவிக்கும் என்பது உறுதி.

ஆகவே மனிதர்களே[வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்] மனமறியத் தப்புத்தண்டாவில் ஈடுபடாமல் பரம யோக்கியராய் வாழ்ந்திடுவீர்.

அப்படி வாழ்ந்தால்.....

அடுத்தடுத்தப் பிறவிகளை ஒட்டுமொத்தமாய் அறுத்தெறிந்து, முழு முதல் கடவுளின் திருவடிகளில் அடைக்கலம் ஆவோம்[ஹி... ஹி... ஹி!!!]. 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பூமியில் பிறக்கும் அவல நிலை அறவே இல்லாமல்போவதால், பூமியோடு சேர்த்து ஊழித் தீயில் சிக்கித் துடிதுடித்துச் சாகும் பரிதாபத்திற்கு நாம் ஆளாகமாட்டோம் என்பதை மனதின் அடிஆழத்தில் பதிய வைப்பீர்!

நல்லவராக வாழ்வீர்! அனைவரையும் அரவணைத்து வாழ்வீர்!!

ஒரு உயிரினம் கூட மிச்சமிருக்காது; பூமியே மொத்தமா அழிஞ்சிரும் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை! | Earth Will Be Destroyed Due To Carbon Dioxide

https://ibctamilnadu.com/article/earth-will-be-destroyed-due-to-carbon-dioxide-1714724476