புதன், 4 ஜூன், 2025

மோடியின் காஷ்மீர் பயணமும்[ஜூன் 06] பால ராமரின் பாதம் பணிதலும்!!!

‘ஜூன் 6ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல உள்ளார்’[PM Modi to visit J&K for the first time after Pahalgam Terror Attack and Operation Sindoor on June 06...] என்பது அண்மைச் செய்தி[காணொலி*].

தீவிரவாதிகளின் ‘பஹல்காம்’ தாக்குதல் நடந்துமுடிந்து 45 நாட்கள் ஆகின்றன.

மோடி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது போர் தொடுத்து,  அவர்களால் ஆதரிக்கப்பட்ட தீவிரவாதிகளைக் கூண்டோடு எமனுலகம் அனுப்பியதோடு, எதிரி பாகிஸ்தானியனுக்குக் கற்பனை செய்ய இயலாத அளவுக்குக் கடும் சேதம் விளைவித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.

காஷ்மீர் காடுகளில் பதுங்கியிருந்து அவ்வப்போது நம் பாதுகாப்புப் படையினரைத் தாக்கிச் கொன்று கொக்கரித்த, பயங்கரவாதிகளையும் ஒருவர் மிச்சமில்லாமல் அழித்தொழித்து மண்ணோடு மண்ணாக்கிவிட்டார்.

உயிர்ப் பயத்துக்குக் கொஞ்சமும் இடமில்லாத வகையில் காஷ்மீர் இப்போது அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

இந்தவொரு சூழலில்தான் நம் பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீருக்குப்  பயணம்[சுற்றுலா?] மேற்கொள்ளவிருக்கிறார்.

மிகப் பல நாட்களாக ஓய்வே இல்லாமல் உழைத்துக்கொண்டிருந்த அவர் இயற்கை அழகு செறிந்த காஷ்மீருக்குச் செல்வது நம்மை மிகு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.

அவரின் பயணம் அவரைப் பேரின்பத்தில் ஆழ்த்துவதாக அமைந்திடல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

காஷ்மீரில் முழு அமைதி நிலவினாலும், பயணம் முடியும்வரை, கோடி கோடி கோடியாய்ச் செலவு செய்து, மோடிஜி எழுப்பிய அயோத்தி ராமர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் பால ராமரின் பாதம் தொட்டுக் கண்களில் ஒற்றி, “எங்கள் பிரதமரைக் காத்தருள்க” என்று பிரார்த்திக்கிறோம்.

போற்றி போற்றி... பாலராமர் போற்றி! நீடூழி வாழ்க நம் பிரதமர் மோடிஜி!!!

*காணொலி: