எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 10 அக்டோபர், 2025

தேவை ஆகச் சிறந்த பகுத்தறிவாளருக்கான ‘நோபல் பரிசு’!

நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு முக்கியத் துறைகளில் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட துறைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமானவைதான் என்றாலும், உலகில் நிரந்தர அமைதி நிலவிடப் ‘பகுத்தறிவு’ வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது.

பரிசுப் பட்டியலில் உடனடியாக இத்துறை[பகுத்தறிவு] சேர்க்கப்பட ‘டிரம்ப்’ போன்ற அதிரடி ஆட்சியாளர்கள் நோபல் பரிசுக் குழுவிடம் பரிந்துரை செய்தல் வேண்டும்.

இந்த ஆண்டுக்கான பரிசாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் அவர்களுக்கு இப்பரிசு[பகுத்தறிவிற்கானது] வழங்கப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, "நீங்கள் விஷ்ணுவின் தீவிரப் பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் கவாய் அவர்கள்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் சாமானியர்களில் ஒருவரல்ல; உலகோரால் அறியப்பட்ட ஆகச் சிறந்த பகுத்தறிவாளர்.

இவரைப் போன்றவர்களின் எண்ணிக்கை பெருகினால்தான், கற்பனைக் கடவுள்களுக்கும், குரங்குகளுக்கும், கோட்டான்களுக்கும் கோயில் கட்டிக் கொண்டாடி, மூடநம்பிக்கை வளர்க்கும் காட்டுமிராண்டிகள் ஓரளவுக்கேனும் திருந்துவார்கள்.

எனவேதான், நம் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய நீதிபதி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்குதல் மிக அவசியம் என்கிறோம்.

வாழ்க பகுத்தறிவாளர் பி.ஆர்.கவாய் அவர்கள்! பெருகுக பகுத்தறிவாளர் எண்ணிக்கை!!