செவ்வாய், 9 ஜூன், 2015

விவேகானந்தரின் விளங்காத கடவுள் கொள்கையும் ராமகிருஷ்ணரின் பொய்யுரையும்![மீள் பதிவு]

#"நம் மக்களை வாழ வைப்பது மதமல்ல; தொழில் கல்வியே" என்று அடித்துக் சொன்னவர்; "ஏழைகளுக்கு உணவும் உடையும் வேண்டும். ஜாதிக் கொடுமைகள் ஒழிய வேண்டும்" என்றெல்லாம் மேடைதோறும் முழங்கியவர்;  இந்தியாவைப் புனித மண்ணாகக் கருதியவர்;  இளைய தலைமுறையினரின் சிந்தனையில் புதிய அலைகளை உருவாக்கியவர்...#  என்றிப்படி, விவேகானந்தர் பெற்ற சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால்.....

அவர் கொண்டிருந்த கடவுள் கொள்கை மட்டும் நம்மை மண்டை காய வைக்கிறது!

சிறுவனாக இருந்தபோதே நரேந்திரனுக்கு [விவேகானந்தர்] 'தியானம்' செய்வதில் ஈடுபாடு இருந்ததாம். கடவுளைக் காண வேண்டும் என்ற வெறி அவரை ஆட்டிப் படைத்ததாம்.

காணும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டே 'கடவுள் ஒருவரே' என்ற பிரம்மசமாஜ  கொள்கைகளைக் கடைபிடித்தார் என்கிறது அவர் வரலாறு.

ஒரு கட்டத்தில், அதில் திருப்தியடையாமல், "கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் உண்மையான வழிபாட்டுக்குச் செவி மடுத்து, பக்தன் முன் தோன்ற வேண்டும்" என்று நினைத்தார்.

" இறைவா, உன் உண்மையான வடிவத்தைக் காண என்னைத் தகுதி உடையவன் ஆக்கு" என்று தினம் தினம் அவரை வேண்டினார். பலன் இல்லை.

அறிஞர்கள், மதத் தலைவர்கள் என்று யாரைக் கண்டாலும், "கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?" என்று கேட்டார். பதில் இல்லை.

கடவுளைப் பார்த்தவர் என்று சொல்லப்படும் ராமகிருஷ்ணரைச்[பரமஹம்சர்] சந்தித்த போது அவரிடமும் இதே கேள்வியை முன் வைத்தார்.
ராமகிருஷ்ணர், ‘உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ; அதே போல, கடவுளை உனக்கும் காட்டுகிறேன்" என்றார்.

காட்டினாரா அவர்?

ஊஹூம்!

அந்தக் கடவுளின் அவதாரம் தொண்டைப் புற்றுநோயால் அவதிப்பட்டுத் தன் 33 ஆம் வயதில் இறந்த அந்த வினாடிவரை காட்டவில்லை! 39 வயதுவரை வாழ்ந்த இந்த வீரத் துறவி விவேகானந்தரும் அந்த மகான் மூலம் கடவுளைப் பார்த்ததாக அறிவிக்கவே இல்லை.

ஆனால், உணர்ந்ததாக மட்டுமே  சொல்கிறார்.

"உன்னை எப்படிப் பார்க்கிறேனோ, உன்னிடம் எப்படிப் பேசுகிறேனோ அதே போலக் கடவுளைக் காட்டுகிறேன்" என்று சொன்னாரே ராமகிருஷ்ணர்,  அது என்ன பொய்யா, மெய்யா?

பொய்...பொய்யே.

தன்  குரு  மூலம் 'கடவுளை உணர்ந்தேன்' என்கிறாரே விவேகானந்தர் , அது எப்படிச் சாத்தியமாயிற்று?

அவரே சொல்கிறார்.....

".....அன்று அவர் [ராமகிருஷ்ணர்]தொட்ட போது முற்றிலுமாய் என் புற உணர்வை இழந்தேன்...... வண்டிகள் வந்தன. ஆனால், மற்ற நேரங்களைப் போல் ஒதுங்க வேண்டும் என்று தோன்றவில்லை[எதிரே வந்த வண்டி நிற்காமல் வந்திருந்தால் அப்போதே பரலோகம் சேர்ந்திருப்பார் விவேகானந்தர்!]. அந்த வண்டி எதுவோ அதுவே நான் என்று தோன்றியது. என் கைகால்கள் உணர்வற்றவை போலிருந்தன. சில வேளைகளில் சாப்பிடும்போதே தரையில் சாய்ந்துவிடுவேன். என் தாய் பயந்தார். எனக்குப் பயங்கர நோய் வந்துள்ளது என்று நினைத்தார்...."

அவர் தாய் சொல்வது போல, விவேகானந்தர் மனநோய்க்கு ஆளாகியிருந்தார். அதன் காரணமாகத் 'தன் நிலை'  இழந்திருந்தார். இவ்வாறு தன்னிலை இழப்பதைக் கடவுளை உணர்ந்த ஒரு நிலை எனக் கருத முடியுமா? 

கடவுளை உணர்ந்ததாகச் சொல்லும் அவர், அவ்வாறு உணர்ந்த அனுபவத்தையாவது பிறர் அறிய / உணர விவரித்திருக்கிறாரா?

இல்லை.

'ஏழைகளுக்காகக் கடவுள் ஏதும் செய்ததில்லை; அவர் இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று காரசாரமாகப் பேசிய விவேகானந்தர் எப்படி மனம் மாறினார்?

“ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத, ஓர் அநாதையின் வயிற்றில் ஒரு கவளம் சோற்றை இட முடியாத கடவுளிடத்திலோ, சமயத்திலோ எனக்குக் கொஞ்சம்கூட நம்பிக்கை கிடையாது” என்றாரே , அப்புறம் எப்படி தான் காணுகிற ஒவ்வொரு பொருளும் கடவுளே என்றார்?

கடவுளின் அவதாரமாகக் கருதப்படும் ராமகிருஷ்ணர், புற்று நோய்க்கு ஆளானது ஏன்? அதிலிருந்து விடுபட முடியாமல் போனது எதனால்?

 “மனிதன் தனது வாழ்க்கையைத் தானே உருவாக்கிக்கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக்கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல” என்று சொல்லித் 'தலைவிதி' தத்துவத்தை எதிர்த்தவர், பின்னர் "மனிதனே கடவுள்" [மனிதனை மனிதனாகவே பார்க்கலாமே. கடவுளை எதற்கு இழுக்கிறார்?] என்கிறார். ஏன் இந்த முரண்பாடு?

மேற்கண்ட கேள்விகள் என்னுடையவை. பதில்கள் உங்களுடையவை; உங்கள் மனப்பக்குவத்திற்கேற்ப.

******************************************************************************************************************************************************
விவேகானந்தர் பற்றிய தகவல்களைப் பெற , பசுமைக்குமாரின் 'விடிவெள்ளி விவேகானந்தர்' [அறிவுப் பதிப்பகம், சென்னை] என்னும் நூலும், இணையப் பதிவுகளும் உதவியாக இருந்தன. சில தகவல்கள் ஏற்கனவே பலராலும் அறியப்பட்டவை.
******************************************************************************************************************************************************









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக