திங்கள், 10 செப்டம்பர், 2018

'கோமா'வில் கடவுள்!!!

முன்குறிப்பு:  சலிப்பூட்டக்கூடிய நீண்ட சிறுகதை. சகிப்புத்தன்மை இருப்பின் வாசிக்கலாம்!!

லகப் பிரசித்தி பெற்ற அந்தக் கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர்களின் முகங்களில் கனமான சோகத்தின் ஆழமான கீறல்கள்.

அவர்களின்  ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே வாரிசு ஆறு வயது அமுதன். அவன் மாடிப்படிகளில் உருண்டு மண்டையில் அடிபட்டுக் கோமாவில் விழ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறுவனின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மனித முயற்சியில் நம்பிக்கை இழந்த செல்வநாயகம் தம்பதியருக்குக் கடவுளின் நினைப்பு வந்தது.

அவர்கள் அறிந்த கடவுளரின் திருநாமங்களை நாள்தோறும் உச்சரித்தார்கள்; கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டார்கள். பலனில்லை.

மனத்தளவில் கடவுளைத் துதித்தால் போதாது என்று செல்வநாயகத்தின் உள்ளுணர்வு எச்சரித்தது. 

ஒரு ஜோதிடரின் ஆலோசனைப்படி, அந்தக் குபேரக் கடவுளைத் தரிசித்து, உண்டியலில் சில லகரங்களைக் காணிக்கையாக்கித் திரும்புவதென முடிவெடுத்தார்.

மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

கோயிலை அடைய அரைக் கிலோமீட்டர் இருக்கையில், காரை வழிமறிப்பது போல, கையில் குழந்தையுடன், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியைத் திறந்தார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி,  கைகளை நீட்டியவாறு ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டார் அவர்.

அந்த இருவரில், குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்: “சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். பிச்சை எடுக்கிற ஜாதியில்ல. இப்பத்தான் முதல் தடவையா பிச்சை கேட்கிறோம்” என்றாள்.
அவளைப் புரியாமல் பார்த்தார் செல்வநாயகம். “நீ என்னம்மா சொல்றே?’

“நாங்க எங்க வயித்துப் பாட்டுக்காகப் பிச்சை எடுக்கல, ஐயா.”

“வேறெதுக்குப் பிச்சை எடுக்குறீங்க? மத்த பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடவா?” -விவரிப்புக்கு அடங்காத கொடிய துன்பத்தால் மனம் துவண்டு கிடந்த நிலையிலும் நக்கலான வார்த்தைகளால் அவர்களைச் சீண்டினார்.

“சாகக் கிடக்கிற எங்க குழந்தைக்கு வைத்தியம் பார்க்கணும். கையில் காசில்ல. உதவறதுக்கு யாரும் இல்ல. எங்க சொந்தபந்தங்க எல்லாமே எங்களை மாதிரி தினக் கூலிங்க ஐயா.”

“குழந்தைக்கு என்ன தொந்தரவு?”

“இருதயத்தில் ஓட்டை இருக்கு. ஆப்ரேசன் பண்ணலேன்னா சீக்கிரம் செத்துடுவான்னு டாக்டர் சொன்னாருங்க.”

“இன்னும் ஆப்ரேசன் பண்ணலையா?”

“நெறையச் செலவாகுமாம். அன்னாடுங்காச்சி நாங்க. எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏதுங்க?”

“தர்ம ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?”

“போனோம். இது மாதிரி ஆப்ரேசன் நிறைய இருக்காம். ஆறுமாசம் கழிச்சி வரச் சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எங்க புள்ள உசுரு தங்காது எசமா.”

யோசனையில் ஆழ்ந்திருந்தார் செல்வநாயகம்.

அந்த ஏழைத் தாய் தொடர்ந்தாள்: “கடவுள்தான் எங்க புள்ளையைக் காப்பாத்தணும்னு கோயில் கோயிலா போயிக் கும்பிட்டுத் தவம் கிடந்தோம். மத்த மதச் சாமிங்களையும் மனசில் நினைச்சிக் கண்ணீர் விட்டு அழுதோம். எந்தச் சாமியும் கண் திறக்கல. உழைச்சிப் பிழைக்கிற நாங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல. கடவுள் எங்களை ஏன் சோதிக்கிறார்னு தெரியல.....”

அவள் தேம்பி அழ ஆரம்பித்ததால் அவளுக்கு நா குழறியது.

“அழாம சொல்லு” என்றார் செல்வநாயகம்.

“எங்க செல்லம் அணு அணுவாச் சாகிறதைக் கண்ணால பார்க்க முடியல ஐயா. பிச்சை எடுத்தாவது பிள்ளையைக் காப்பாத்தணும்னு நினைச்சித்தான் முதல் தடவையா உங்ககிட்டக் கை ஏந்தினோம். நீங்க நல்லா இருக்கணும். அம்பதோ நூறோ நீங்க இஷ்டப்பட்டதைக் குடுத்து உதவுங்க சாமி.”

சற்றே தயக்கத்துடன் கேட்டார் செல்வநாயகம்: “உங்களை நம்பலாமா?”

குழந்தையின் அப்பன் தன் வசமிருந்த ஒரு பையிலிருந்து, மருத்துவமனை தந்த மருத்துவ அறிக்கையைப் பவ்வியமாய் நீட்டினான்.

அதை ஆராய்ந்த செல்வநாயகத்தின் முகத்தில் திருப்தி பரவியது. அவர் ஏதோ சொல்ல முற்படுவதற்கு முன்.....

''முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்னு இருக்கே. தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையைச் சேர்த்து.....'' என்று பேசத் தொடங்கினார் தேவி.

குறுக்கிட்ட செல்வநாயகம், ''பரம ஏழைங்க. அதெல்லாம் இவங்களுக்குத் தெரியாது'' என்றவர், ஏழைத் தம்பதியரைப் பார்த்து, “காரில் உட்காருங்க. உங்க குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துடறேன். ஆகிற செலவை நான் ஏத்துக்கிறேன்” என்றார்.

தயக்கத்துடன் அவர்கள் காரில் அனமர்ந்தார்கள்.

ஓட்டுனரிடம் காரைத் திருப்பச் சொன்னார்.

“ஏங்க, கோயிலுக்கு.....” -சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தினார் அவர் மனைவி தேவி

“இந்தப் பரம ஏழைகளுக்கு உதவாத கடவுள் நமக்கு நிச்சயம் உதவப்போறதில்ல. நம்ம பையனைப் போலவே அவரும் கோமாவில் இருக்கார் போல.” -வறட்சியானதொரு  புன்னகையை  நழுவவிட்டுக் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார் செல்வநாயகம்.
*************************************************************************************************





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக