திங்கள், 3 செப்டம்பர், 2018

உலகம் அழியுமா? எப்போது?!

'உலகம் அழியப்போகிறது' என்றொரு புரளியை  அவ்வப்போது உலக அளவில் கிளப்பிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் ஜோதிடர்கள். இதன் விளைவாக என்னுள் உருவான ஒரு கற்பனைக்கதை.....
பூவுலகைச் சுற்றிப் பார்த்துவிட்டு, இறைவனும் இறைவியும் அண்டவெளியின் மையப்புள்ளி[?]யிலிருந்த தங்களின் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள்.

“இன்னும் கொஞ்சமே கொஞ்ச வருசத்தில் பூலோகம் அழியப் போறதா மக்கள் பேசிட்டாங்களே, கேட்டீங்களா?” என்று கேட்டார் இறைவி.

“கேட்டேன்; எல்லாரும் உயிர் இருந்தும் நடைப் பிணமா அலையறதையும் கவனிச்சேன்” என்றார் இறைவன்.

“இப்படி ஒரு புரளியைக் கிளப்பிவிட்டது யாராயிருக்கும்?” -சந்தேகம் எழுப்பினார் இறைவி.

“வேறு யார்? ஜோதிடர்கள்தான். அவர்களை உசுப்பிவிட்டதே நான்தான்” என்று சொன்ன இறைவன், அகன்று விரிந்து பரந்த ‘அண்டவெளி’யே அதிரும்படியாக, ஊழிக்காலத்தில் சிரிப்பது போன்ற அதி பயங்கரச் சிரிப்பு ஒன்றை வெளிப்படுத்தினார்.

அதிர்ச்சிக்குள்ளான இறைவி, ''ஐயய்யோ நீங்களா அப்படிச் செய்தீங்க?” - புருவம் நெளித்து முகம் சுழித்தார்.

“நான் படைச்ச மத்த உயிரினங்கள் எல்லாம் குணம் மாறாம அப்படியே இருக்க, மனுசன் மட்டும் ரொம்பவே மாறிட்டான். வக்கிற புத்தி அதிகமாயிடிச்சி. எதிரியை உயிரோட தீயிட்டுக் கொளுத்தி, அவன் துடிதுடிச்சிச் சாகிறதைப் பார்த்துக் குதூகளிக்கிறான். சின்னஞ் சிறுசுகளை முடமாக்கிப் பிச்சை எடுக்க வைக்கிறான். பருவத்துக்கு வராத பச்சைப் புள்ளைகளைக் கற்பழிச்சி, சித்திரவதை செஞ்சி கொல்லுகிறான். இன்னும் இவன் செய்யற அட்டூழியங்களுக்கு அளவே இல்லை.....” -தேம்பித் தேம்பி அழத்தொடங்கினார் இறைவன்.

நீர் வழிந்த அவரின் கன்னங்களைத் தன் மென் கரங்களால் துடைத்துவிட்ட இறைவி, ''உணர்ச்சிவசப்படாதீங்க. மேலே சொல்லுங்க'' என்றார். 

தேம்பலைக் கட்டுப்படுத்திக்கொண்ட இறைவன், “இவனுக செய்யற அக்கிறமங்களை என்னால் பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியல. மண்ணுலகத்தையே அழிச்சிடறதா முடிவு பண்ணிட்டேன்” என்றார் திடமான குரலில்.

“உடனே அழிச்சிட வேண்டியதுதானே. ஜோதிடர்கள் மூலமா புரளி கிளப்பிவிட்டது எதுக்கு?”

“மனுசங்களைப் படைச்சவன் நான்தான்; இவனுகளுக்கிருந்த ஐந்தறிவை ஆறறிவு ஆக்கியவனும் நானே. யுகம் யுகமா யோசனை பண்ணி வடிவமைச்சேன். சில வினாடிகளில் அழிச்சிட உள்மனசு ஒத்துக்கல. இவன்கள் திருந்துறதுக்கு அவகாசம் தந்து பார்க்கலாம்னுதான் அவ்வப்போது ஜோதிடர்கள் மூலமா உலகம் அழியப்போறதா வதந்தி கிளப்பி விடுறேன். இவங்க திருந்தல. இனியேனும் திருந்துகிறார்களா பார்ப்போம்'' என்றார் இறைவன்.

“எனக்கு நம்பிக்கை இல்லீங்க” என்ற இறைவி.....

தன்னவனின் கரம் பற்றி அண்டவெளிப் பயணத்தைத் தொடர்ந்தார்.
*************************************************************************************************
படித்த ஞாபகம் உள்ளதோ? ஆம், இது பழைய கதைதான்...சில மாற்றங்களுடன்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக