அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 17 அக்டோபர், 2018

வையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்!!!

ஐயப்ப பக்தர்களே,

ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் மெய்யான பக்தி குறித்தோ கேள்வி எழுப்புவது இந்தப் பதிவின் நோக்கம் அல்ல...அல்லவே அல்ல. நம்புங்கள். சபரிமலை ஐயப்பசாமியைத் தரிசிக்கும் வாய்ப்பு, பருவப்பெண்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது குறித்து என் எண்ணங்களைப் பதிவு செய்வது மட்டுமே.

பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி வழங்காதது ஏன்?

ஐயப்பசாமி பிரமச்சாரிக் கடவுள். அவரைத் தரிசிக்கச் சபரிமலை செல்லும் பக்தர்களும், காமம், குரோதம், வெகுளி, மயக்கம் போன்ற தகாத உணர்வுகளைக் கட்டுப்படுத்த விரதம் இருப்பவர்கள். காம உணர்வைத் தூண்டும் பருவ வயதுப் பெண்கள் சபரிமலைக் கோயிலில் அனுமதிக்கப்பட்டால், சாமியின் பிரமச்சரியம் கலையும்; உங்களின் விரதம் சீர்குலையும் என்று நம்புகிறீர்கள்.

உங்களின் நம்பிக்கை மெய்யானது எனின் ஒரு சந்தேகம்.....

இந்த வையகம், ஒன்று முதல் ஆறு வரையிலான அறிவு படைத்த கோடானுகோடி உயிர்களின் வாழ்விடமாக உள்ளது. சபரிமலையும் ஒரு வாழ்விடம்தான்.

உயிர்களின் இனப்பெருக்கத்திற்கு மூலகாரணமான 'ஆண் - பெண்' புணர்ச்சி மண்ணுலகம் எங்கும் நிகழ்வது போலவே, சபரிமலையிலும் நிகழவே செய்யும்.
சின்னஞ்சிறிய உயிர்களின் சேர்க்கை கண்ணுக்குத் தட்டுப்படா எனினும், பறவைகள், விலங்குகள் போன்றவை புணர்ந்து இன்புற்றிருக்கும் காட்சிகள் நிச்சயம் உங்களின் பார்வையில் படவே செய்யும். விரதம் இருக்கும் உங்களின் மன உறுதியை அம்மாதிரிக் காட்சிகள் சோதிக்காவா? சாமியின் பிரமச்சரியத்தைப் பாதிக்காவா?

''பாதிக்கா'' என்பது உங்களின் பதிலாயின், உரிய முறையில் பாதுகாப்பாக ஆடை உடுத்துவரும் பருவ வயதுப் பெண்களைக் பார்ப்பது மட்டும் எப்படிப் பாதிக்கும்?

என்னதான் மனதைக் கட்டுப்படுத்த விரதம் இருந்தாலும், மனம் என்னும் குரங்கு கடந்த காலங்களில் நீங்கள் பார்த்த, சந்தித்த அழகுப் பெண்களைக் கற்பனை செய்து உங்களின் விரதத்திற்கு மிக மிக மிகக் கொஞ்சமே கொஞ்சமேனும் பங்கம் விளைவிக்காதா?

''விளைவிக்காது'' என்று 100% உறுதிபட உங்களால் உரைக்க இயலுமா?

கடும் விரதத்தால், இரும்பனைய மன உறுதியைப் பெற்றுவிடும் உங்களால், சபரிமலைக்கு வருகை புரியும் பருவ வயதுப் பெண்களை உடன் பிறந்த சகோதரிகளாக நினைக்க முடியும்தானே?

அப்புறம் ஏன் அவர்களின் வருகையை எதிர்க்கிறீர்கள்?!

மாதவிடாய் நிகழ்வு வெகு இயற்கையானது; வயிற்றில் தேக்கி வைத்திருந்து வெளியேற்றும்போது கெட்ட வாசனை பரப்பும் மலம் போன்றது அல்ல. ஆனால், மாதவிடாய்ப் பெண்களைத் தீண்டத் தகாதவர்கள் ஆக்கியதோடு சபரிமலைப் பயணத்துக்குத் தகுதி அற்றவர்களாகவும் ஆக்கிவிட்டீர்கள். உங்கள் செயலில் நியாயம் இருப்பதாகவே கொள்வோம். அந்தச் சில நாட்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் அவர்களையும் அனுமதிக்கலாமே? 

இனியேனும் சிந்திப்பீர்களா?

இறுதியாக, என்னை வாட்டி வதைக்கும் மனக்குமுறலை ஒளிவுமறைவில்லாமல் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

இனவிருத்திக்காகக் கருவைச் சுமப்பதான தியாகச் செயல் புரியும் பெண்களிடமிருந்து வெளிப்படும் மாதவிடாய் நீங்கள் நினைப்பதுபோல் அசுத்தமானது என்றால்.....

இந்த 'அசுத்த'ப் பெண்களை படைத்தவர் யார்? 

தான் படைத்த கோடானுகோடி உயிர்களுக்கிடையே, சபரிமலையில்[மட்டும்] நுழையக்கூடாத இழிபிறவியாக இவர்களைப் படைத்ததில் உங்கள் ஐயப்பனின் பங்கு என்ன?

''எதுவும் இல்லை'' என்பது உங்களின் பதிலாயின்.....

அதைச் செய்தவர் வேறு யாரோ ஒரு கடவுள். 

''அவர்...அல்ல அல்ல, அவன் ஒழிக...ஒழிக'' என்று உரத்த குரலில் முழங்குகிறேன்...இனியும் நான் முழங்கிக்கொண்டே இருப்பேன்.