சனி, 20 அக்டோபர், 2018

ராவணன் சாபம்!!!!!

எப்போதோ செத்துப்போன ராவணனை மீண்டும் சாகடிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் 'தசரா' பண்டிகை இந்த ஆண்டும் 'பஞ்சாப்' மாநிலத்தின் அமிர்தசரஸ் பகுதியில் நடந்தது[20.10.2018 ஊடகச் செய்தி].

இணைப்பு: https://youtu.be/vtgPqMo9wUE

நிகழ்ச்சியில், கட்டுக்கட்டாகப் பட்டாசுகள் சுற்றப்பட்ட பிரமாண்ட ராவண பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டது[ராவண வதம்]; தீயிடப்பட்டது.

அண்டவெளி கிடுகிடுக்க, அதி பயங்கர ஓசையுடன் ராவணன் வெடித்துச் சிதறலானான்.

மெய் மறந்து, தம் மதியிழந்து, உயிருள்ள ராவணனே வெடித்துச் சிதறுவதாக எண்ணிக் குதூகளித்திருந்தவர்கள், ''ராவணன் ஒழிக!'' என்று விண்ணதிர முழங்கிகொண்டிருக்கையில்.....

நின்ற நிலையில் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த ராவணன் ஒரு புறமாகச் சரிந்து விழலானான். கூடிக் களித்திருந்த மக்கள் கூட்டம் பக்கவாட்டுகளில் சிதறி ஓடலாயிற்று. எங்கும் இருள் சூழ்ந்த அந்த அந்திப் பொழுதில்,  உயிர் பிழைத்திடும் ஆசையில், குறுக்கிட்ட ரயில் பாதைகளையும் கடந்து ஓடினார்கள் மக்கள். இரண்டு பாதைகளிலும் விரைந்து வந்த அதிவேக விரைவு ரயில்கள் அவர்கள் மீது மோதியதால் 70 பேர் பலியானார்கள். மிகப் பலர்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, ஒளிவுமறைவில்லாமல் ஓர் உண்மையை உங்கள் முன்வைக்கக் கடமைப்பட்டுள்ளேன். அது.....

ராவணனின் பூத உடம்பு ராமனால் அழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அவனின் சூக்கும தேகம்... அதாவது, 'ஆவி' வானவெளியில் இன்றளவும் சஞ்சரித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறது.

ஆண்டுதோறும், பண்டிகை கொண்டாடுவதாகச் சொல்லித் தான் அவமானப்படுத்தப்படுவதைக் கண்டு கண்டு மனம் பொருமிக்கொண்டிருந்த அவன், 70க்கும் மேற்பட்ட ராம பக்தர்களின் உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறான். பலரைப் படுகாயம் அடையச் செய்திருக்கிறான்.
நம்புங்கள். இந்தக் கொடூர விபத்தை நிகழ்த்தியவன் ராவணன்...ராவணனே.

எப்போதோ கல்யாணம் கட்டிக்கொண்டதாக எவரோ எப்போதோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும் சில சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறார்கள்.

எவரோ கட்டிவிட்ட கதையை நம்பி இப்போதும், தாமே கந்தக் கடவுளாக மாறிச் சூரனைச் சம்காரம் செய்து ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.

இப்படி, எத்தனை எத்தனையோ பொய்க்கதைகளை நம்புகிறவர்கள் நான் சொல்லுகிற இந்த உண்மைக் கதையை மனப்பூர்வமாக நம்பலாம். நம்புவதால் நம்புகிறவர்களுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

இல்லை.....இல்லவே இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------
விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் காயமுற்றவர்களுக்காகவும் மனப்பூர்வமாய் வருந்துகிறேன்.