ஞாயிறு, 7 அக்டோபர், 2018

எது எதுக்கோ மந்திரம் ஓதுறாங்க! இதுகளுக்கு.....?

அங்கிங்கெனாதபடி புதிது புதிதாகக் கோயில் கட்டுகிறார்கள் நம் மக்கள். அத்தனைக்கும் வேத மந்திரம் படித்தவர்களைக் கொண்டு குடமுழுக்குச் செய்கிறார்கள். 'அவர்கள்' ஓதுகிற வேத மந்திரத்தால் கற்சிலை கடவுள் ஆகிறது!

இப்போதெல்லாம், கல்யாணம் பண்ணுறவர்கள் பொண்ணு மாப்பிள்ளையுடன் ஏதாவதொரு கோயிலுக்குப் போய்விடுகிறார்கள். அங்கே 'அவர்கள்' மந்திரம் சொல்லித் தாலி எடுத்துக் கொடுத்தால்தான் பொண்ணு மாப்பிள்ளை சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசமாகக் குடும்பம் நடத்துவார்களாம். இன்று இது நம் மக்களில் பெரும்பாலோர் நம்பிக்கை.

கடந்த காலங்களில் புது வீடு கட்டினால், பூசாரி வந்து பூசை பண்ணுவார். பசு மாட்டை வீட்டுக்குள்ளே நடக்க வைப்பார்கள். விருந்துண்டு முடித்தால் விழாவும் முடிந்துவிடும். இப்போதெல்லாம், அவர்கள் வந்து யாகம் வளர்த்து மந்திரம் ஓதுவது வழக்கம் ஆகிவிட்டது. அந்த மந்திரம்,  வீட் டிலிருக்கிற ஆவி, காத்து, கருப்பு, பேய், பிசாசு இத்தியாதிகளையெல்லாம் ஓட ஓட விரட்டியடிக்குமாம்.

அடுத்தடுத்துத் துன்பங்கள் நேர்ந்தால்,  ஏதோ தோஷம் இருப்பதாகப் பலரும் அஞ்சுகிறார்கள். மந்திரம் ஓதினால் அது விலகும் என்று நம்புகிறார்கள்; அவர்களை அழைக்கிறார்கள். அவர்களும், நெய் முதலான பல பொருள்களை நெருப்பிலிட்டுப் புரியாத  மந்திரங்களைச் சொல்லி, கணபதி யாகம், குணபதி யாகமெல்லாம் நடத்திக் காணிக்கை பெற்றுச் செல்கிறார்கள். இந்தச் சடங்கினால்  துன்பங்கள் விலகுமா? நம்மில் எத்தனைபேர் யோசிக்கிறார்கள்? ஊஹூம்! 

சினிமா எடுத்தால் அவர்களின் வருகை அவசியத் தேவை. ஒருவர் ஒரு தொழில் தொடங்கினால் அங்கேயும் மந்திர ஓசை கேட்கிறது.

மந்திரத்தால், கல் கடவுளாகும்; மணம் செய்துகொள்ளும் ஆணும் பெண்ணும் மனம் ஒத்து நீடூழி வாழ்வார்கள்; ஆவி பூதங்களெல்லாம் அஞ்சி ஓடும்; தோஷங்கள் நீங்கும்; செய்யும் தொழில் சிறக்கும் என்றிப்படிக் காலங்காலமாய்ப் பரப்புரை செய்து மக்களை நம்பச் செய்து மூடர்கள் ஆக்கியிருக்கிறார்கள் 'அவர்கள்'. அந்தத் தந்திரசாலிகளிடம் ஒரு கேள்வி.....

ஒரே ஒரு கேள்வி.....

கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், வன்புணர்வு, லஞ்சம், ஊழல் என்று இம்மண்ணில் நாளும் பல குற்றச் செயல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஏதேனும் ஒரு பொதுவிடத்தில் கூடி, நீங்கள்[இங்கே, மந்திரங்கள் ஜெபித்தால் துன்பங்கள் அகலும் என்கிற பிற மதத்தவரும் அடங்குவர்] ஒருங்கிணைந்து மந்திரங்களை ஓதினால் இம்மாதிரிக் குற்றங்கள் நிகழாவா? குற்றம் புரிபவர்கள் அனைவரும்[100%] மனம் திருந்துவார்களா?

கடவுளையே வசியம் செய்து கல்லில் கரைய வைக்கிற அதி புத்திசாலிகள்  நீங்கள்! உங்களால் முடியாதது எது?

ஒரு முறை, ஒரே ஒரு முறை இதைச் சாதித்துக் காட்டுங்களேன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++