வியாழன், 7 பிப்ரவரி, 2019

அடுத்து நிகழும் 'ஊழி'ப் பேரழிவில் மனிதகுலம் தப்பிப் பிழைக்குமா?!?!

'சுமார் 44 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பூமி ஒரே நிலப்பரப்பாக இருந்தது. அதாவது, கண்டங்களாகப் பிரிந்திருக்கவில்லை. பூமியின் வட பகுதி கடலாகவும் தென் பகுதி நிலமாகவும் இருந்தது. குறைந்த எண்ணிக்கையிலான உயிரினங்களே இருந்தன. அவையும் கடலுக்குள் வாழ்ந்துகொண்டிருந்தன.

பருவநிலை மாற்றங்களால், கடலின் பெரும்பகுதி பனியாக மாறியது. விளைவு.....

85% உயிரினங்கள் அழிந்துபோயின. இவ்வாறு, பெரும்பாலான உயிரினங்கள் அழிவதற்குக் காரணமான அந்த நிகழ்வை, 'முதல் பேரழிவு' என்று குறிப்பிடுகிறார்கள்' விஞ்ஞானிகள்.
உயிரினப் பேரழிவுகள் க்கான பட முடிவு
சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்நிலவுலகில் இரண்டாவது பேரழிவு இடம்பெற்றது. அப்போது, ஐரோப்பாவும் வட அமெரிக்காவும் ஒரு கண்டமாகவும், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவை ஒரு கண்டமாகவும் இருந்தன. வடக்கே சைபீரியா தனியாக இருந்தது.

அக்காலக் கட்டத்தில் இம்மண்ணில் பலவித செடிகொடிகளும் பூச்சிகளும் உருவாயின.

காலப்போக்கில், கடல் மட்டம் வெகுவாகக் குறைந்ததாலும், அஸ்டிராய்ட்[Asteroid -என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் -விக்கிப்பீடியா] ஒன்று பூமியைத் தாக்கியதாலும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்துபோனது.


மூன்றாவது பேரழிவு 29 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. அப்போது கண்டங்கள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன.  இந்தப் பேரழிவின்போது, கடல்வாழ் உயிரினங்களில் 96 விழுக்காடும், நிலப்பகுதியில் 70 விழுக்காடும் அழிந்தன.

20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது 4ஆவது பேரழிவு. அப்போது மீண்டும் கண்டங்கள் தனித்தனியே பிரிந்திருந்தன. உயிரினங்களில் பாதி அழிந்தன. இக்காலக் கட்டத்தில்தான் 'டைனோசர்கள்' என்னும் உயிரினங்கள் தோன்றின.

அடுத்து நிகழ்ந்தது ஐந்தாவது உயிரினப் பேரழிவு. இது நிகழ்ந்தது ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு. டைனோசர் இனம் முற்றிலுமாய் அழிந்தது. அழிவுக்குக் காரணம் பூமியை ஒரு விண்கல் தாக்கியதே. அந்தக் கல் மெக்சிகோ நாட்டுக்கு அருகே கடல் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.

விண்கல் மோதினால் இந்த அளவுக்குப் பேரழிவு நேருமா என்ற ஐயம் நமக்குத் தோன்றும். 'பூமி மீது அதி பயங்கர வேகத்தில் விண் கல் மோதினால், பெரும் தூசுப் படலம் உருவாகும். அது பூமியை முற்றிலுமாய்ச் சூழ்ந்துகொள்ளும். பூமியில் வெப்பம் குறையும். பருவநிலை மாறும். தாவரங்கள் அழியும். உணவின்றிப் பெரும்பாலான உயிரினங்கள் பட்டினியால் அழியும்' என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆக,

பேரழிவுகள் நிகழ்வதும், பூமியில் வாழும் உயிரினங்களில் பெரும்பகுதி அழிந்தொழிவதும், தப்பிய உயிரினங்களும், புதிதாகத் தோன்றுவனவும் தத்தம் இனத்தை விருத்தி செய்து வாழ்ந்து மீண்டும் அழிவதும் வாழ்வதுமான நிகழ்வுகள் தொடர்கின்றன. 

ஐந்து பேரழிவுகளைத் தொடர்ந்து 6ஆவது பேரழிவு நிச்சயம் நிகழும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். அதற்குக் காரணமாக அமையவிருப்பது அஸ்ட்ராய்டுகளோ, விண்கற்களோ அல்ல; மனிதனின் இழிசெயல்களே என்கிறார்கள் அவர்கள்.

ஆறாவது பேரழிவில், கரப்பான், குதிரைலாட நண்டு, ஜெல்லி மீன்கள் போன்ற உயிரினங்கள் தப்பிக்க வாய்ப்பு அமையலாம். மனித இனம் மட்டும் பூண்டோடு அழியும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

மனித குலம் அழிவதா? அழிய அனுமதிக்கலாமா? கூடாது...கூடவே கூடாது.

நம்மிடம்தான் எத்தனை கடவுள்கள்! எத்தனை எத்தனை மகா மகா மகா பெரிய அவதாரக் கடவுள்கள்!

இனி, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தத்தம் கடவுள்களிடமும், கடவுள்களோடு கடவுள்களாய் கண்ணுக்குத் தெரியாமல் நம்மைக் கண்காணித்துவரும் மகா.....ப் பெரிய மகான்களிடமும் நம் இனத்தைக் காக்குமாறு வேண்டுகோள் வைப்போம். 

இப்போது உள்ள கோயில்கள் போதாது. கோடிகோடியாய்ச் செலவு செய்து புதிய புதிய கோயில்கள் கட்டுவோம். மில்லியன் கணக்கில் பணத்தை வாரி இறைத்து  நாளும் விழாக்கள் எடுப்போம். 

நம் கோரிக்கை நிறைவேறும். மானுட இனம் அழியாது.....அழியவே அழியாது.

இது உறுதி; 100% உறுதி.

இந்த நம்பிக்கையில்தான்.....

வாரத்தில் ஒரு நாள் விரதம்[முழுப்பட்டினி]  இருக்கிறேன். காலை, மாலை, நண்பகல், பின்பகல், மாலை, இரவு, நள்ளிரவு என்று கண்ட கண்ட நேரங்களிலெல்லாம் ஒரு நூறு கடவுள்களையாவது வழிபடுகிறேன்[ஹி...ஹி...ஹி!!!].

நீங்களும் வழிபடுங்கள். 
--------------------------------------------------------------------------------------------------------------------
உதவிய நூல்: என் ராமதுரை அவர்களின், 'எங்கே இன்னொரு பூமி?'; கிழக்குப் பதிப்பகம்.
--------------------------------------------------------------------------------------------------------------------