பக்கங்கள்

திங்கள், 5 ஆகஸ்ட், 2019

பக்தியின் பெயரால் தமிழை அழிக்கும் இந்து முன்னணித் தமிழர்கள்!!!

இப்போதெல்லாம் தமிழ் அழிப்பின் மூலம் சமஸ்கிருதம் வளர்ப்பதில் பெரிதும் முனைப்புக் காட்டுபவர்கள், ‘ஆரியர்கள்’ என்றும் ‘வந்தேறிகள்’ என்றும் அழைக்கப்படும் பிராமணர்களைக் காட்டிலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இந்து முன்னணியினர்தான்.

இதற்கு ஏராள எடுத்துக்காட்டுகள் தர இயலும். இப்போதைக்கு ஒன்று மட்டும்.

#ஈரோடு மாநகர், மாவட்ட இந்து முன்னணி சார்பில் 1008 இடங்களில் விநாயகர் சிலைகள் ‘பிரதிஷ்டை' செய்யப்பட்டு, 'விசர்ஜனம்' செய்யப்படும் என்று இந்து முன்னணி தெரிவித்துள்ளது# -இது, இன்றைய[05.08.2019] நாளிதழ்ச்[இந்து தமிழ்] செய்தி.

அதென்னய்யா பிரதிஷ்டை? என்னய்யா விசர்ஜனம்?

குறிப்பிட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து[நிறுவி], மந்திரங்கள் ஓதி, அச்சிலைகளுக்குள் கடவுளைக் குடியேற்றுகிறார்களாம். அதாவது.....

சிலைகளுக்கு உயிர்கொடுக்கிறார்கள் வேத மந்திரம் கற்ற விற்பன்னர்கள். இதற்குப் பெயர்தான் பிரதிஷ்டையாம்.

அணு முதல் அண்டம்வரை அனைத்துப் பொருள்களிலும் கடவுள் ஊடுருவியிருப்பதாகச் சொல்கிறார்கள் ஆன்மிகம் பேசும் மகான்கள். அது உண்மையாயின் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலைகளிலும் அவர் இருக்கிறார் என்றாகிறது. அப்புறம் மந்திரங்கள் சொல்லி உயிரூட்டுவது, அதாவது ‘பிரதிஷ்டை ’ செய்வது எதற்கு?

‘கரைத்தல்’ என்னும் தூய தமிழ்ச்சொல் இருக்கையில் ‘விசர்ஜனம்’ என்னும் புரியாத வடசொல்[சமஸ்கிருதம்] எதற்கு?
விசர்ஜனம் க்கான பட முடிவு
ஆக, சாமிகளின் பெயரால் அவர்கள் எதைச் சொன்னாலும் அதை முழுமையாக நம்பி நடைமுறைப்படுத்துவது அன்று தொட்டு இன்றுவரை தமிழரின் வழக்கமாக உள்ளது. காரணம்.....

எதிர்க்கேள்வி ஏதும் எழுப்பினால் கடவுள் தண்டிப்பார் என்ற அச்சம்.

இதன் விளைவாக ஏராள மூடநம்பிக்கைகளை நம்மவர்கள் சுமந்து திரிகிறார்கள்.

பகுத்தறிவை அடகு வைத்து, இந்த மோசடிக் கும்பலுக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றுபவர்கள் இந்து முன்னணி சார்ந்த தமிழர்கள்.

இந்த முன்னணி மூடநம்பிக்கைத் தமிழர்கள் தம் பகுத்தறிவை அடகு வைப்பதை நாம் பொருட்படுத்தவில்லை. தாய்மொழியாம் தமிழையும் அல்லவா அடகு வைக்கிறார்கள்!

இவர்களைக் கண்டித்துத் திருத்துவது அனைத்துத் தமிழர்களின் கடமையாகும்.
=================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக