பக்கங்கள்

திங்கள், 14 அக்டோபர், 2019

நடிகர் ரஜினியை வைத்துப் பணம் பண்ணும் பத்திரிகையாளர்களுக்கு.....

‘சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலை சென்றார்’, ‘ரஜினி குடும்பத்துடன் 10 நாள் இமயமலைப் பயணம்’; ‘பாபாஜி குகையில் ரஜினி தியானம்’ என்றிவ்வாறான தலைப்புகளில், தமிழின் அனைத்து நாளிதழ்களுமே இன்று[14.10.2019]  செய்தி வெளியிட்டுள்ளன.
ரஜினி ஒரு நடிகர்; சிறந்ததொரு நடிகர் என்று சொல்வதிலும் தயக்கம் தேவையில்லை. ஒரு பிரபல நடிகர் என்ற வகையில் அவருடைய இமயப் பயணம் குறித்த செய்தி நாளிதழ்களில் வெளியாவதிலும் தவறு இல்லை. ஆனால்.....

மிக முக்கியச் செய்திகளில் ஒன்றாக, தடிமனான தலைப்புகள் கொடுத்து வெளியிடுவது தேவையா என்று யாரேனும் கேள்வி எழுப்புனால், அதற்கு உரித்தான பதிலை எந்தவொரு பத்திரிகையாளராலும் தர இயலாது.

இதற்கு முன்பு மிகப் பலமுறை இவர் இமயத்திற்கு ஆன்மிகப்பயணம் மேற்கொண்டதையும் இந்தப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டன. இதனால் மக்களுக்கு விளைந்த பயன் என்ன?

கேதார்நாத் போவாராம்; பத்ரிநாத்துக்குப் பயணம் செய்வாராம்; பாபாஜி குகையில்  தியானத்தில் திளைப்பாராம்.

[இவர், நாட்கணக்கிலோ மாதக் கணக்கிலோ வெளியே தலைகாட்டாமல் தன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாலும் இவரைப் பற்றிச் செய்தி வெளியிடாவிட்டால் இந்தப் பத்திரிகைக்கார்களில் ஒருவர் மிச்சமில்லாமல் அத்தனை பேருடைய தலைகளும் வெடித்துவிடும்.

‘பாபாஜி குகையில், ரஜினி தன்னை மறந்த நிலையில் தியானத்தில் மூழ்கிக் கிடக்கிறார். தியானத்தின்போது சூக்கும தேகத்துடன் கைலாயக் கடவுளையும் வைகுண்ட சாமியையும் தரிசனம் செய்தார்; சொர்க்கத்துக்கு ஒரு விசிட் அடித்துத் திரும்பினார்’ என்றிவ்வாறாகப் பொய்யான பரபரப்புச் செய்திகளை வெளியிட்டேனும் தங்களைத் திருப்திபடுத்திக் கொள்வார்கள் இவர்கள்].

சப்பணம் போட்டு உட்கார்ந்து, “ராகவா...ராகவா...” என்றோ, “பகவானே...பகவானே” என்றோ கண்ணை இறுக மூடிக்கொண்டு முணுமுணுப்பதால் இந்த மண்ணில் விளையும் மாற்றங்கள் என்ன?

இவரென்ன, ஒரு புரட்சிகரச் சிந்தனையாளரா? சமூகச் சீர்திருத்தவாதியா? பொதுத் தொண்டு புரிவதற்காகத் தன் வாழ்நாளில் கணிசமான நேரத்தைச் செலவிடுபவரா?

ஒரு நடிகனாக ‘பஞ்ச்’ வசனங்கள் பேசி ரசிகனை அற்பச் சந்தோசத்துக்கு உள்ளாக்கியதைத் தவிர, “சிஸ்டம் சரியில்லை. அதைச் சரி செய்யக் கட்சி தொடங்குகிறேன்”; “நான் நடத்தவிருப்பது ஆன்மிக அரசியல்” என்பன போல் புரியாத வசனங்கள் பேசித் தமிழர்களின் நேரத்தை வீணடித்ததைத் தவிர  இந்தத் தமிழ் மண்ணுக்கு இவர் செய்த சேவைகள்தான் என்ன?

தேவையே இல்லாமல் இவரின் அன்றாட நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களை என்ன சொல்லிச் சாடினால் நம் ஆத்திரம் தணியும்? மனம் ஆறுதல் பெறும்?
===========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக