வியாழன், 21 மே, 2020

“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?!”

என் வாலிப வயதில் ஒரு நாள், மொட்டைமாடியில் மல்லாந்து கிடந்து, கண் சிமிட்டும் விண்மீன்களை எண்ணிச் சலித்து, பழக்கதோசம் காரணமாகப் படைப்பையும் படைத்தவனையும் பற்றி நெடுநேரம் சிந்தித்ததன் விளைவு இந்த உரைநடைக் கவிதை!


நான் வாழப் பிறந்தவன்.

எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500.
ஆனால்.....
ஒரு முழு ‘ஒருநாள்’கூட
மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை.


மண்ணில் ஓடி ஆடியும்
விண்ணில் சிறகடித்துப் பறந்தும்
ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் மகிழ்வது
என் பிறவி ஆசை
இருப்பினும்
இரண்டிரண்டு கைகால்களுடன் மட்டுமே 
படைக்கப்பட்டிருக்கிறேன்.

‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது;
கிடக்காதபோது 
உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை
அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது
என் விருப்பம்.
படைப்பதற்கு முன்னால்
என் விருப்பங்களை விசாரிக்கத் தவறியது
படைப்பாளன் செய்த குற்றம்.

என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும்.
எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த
தோல் போர்த்த  பிண்டம் இது.
என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்
இப்படியான  ஒரு பிண்டம்தான்
[கலவையில் வித்தியாசம் இல்லை;
கலக்கப்பட்ட மூலங்களின் சதவீதங்களில் மட்டுமே
சில மாற்றங்கள்].
அந்தப் பிண்டத்தைப் பார்க்கும்போதெல்லாம்
என்னுள் உணர்ச்சிப் பிரவாகம்; கடும் காமக் கிளர்ச்சி.

சதையோடு சதை உரசியும் புணர்ச்சி செய்தும்
உணர்ச்சி தணிக்கிறேன்.
அது தணிந்தபின்.....
“சீச்சீ...ஏனிந்த அசிங்க போகம்?” என்று மனம் விசனிக்கிறது.
ஆனாலும்,
அப்படி வாழத்தான் நான் பணிக்கப்பட்டிருக்கிறேன்.

‘இனவிருத்திதான் படைப்பின் அடிப்படைக் கருதுகோள்’
என்பர் இயற்கை ஆய்வாளர்.
அது என்ன கருதுகோளோ, கருமாந்தரமோ?
இந்த வேண்டாத  இனவிருத்திக்காக
நான் ஏன் காலமெல்லாம் ‘விந்துப்பை’ சுமக்க வேண்டும்?


இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ சிந்தித்து
அல்லல் படுபவன் நான்;
நாளும்  ஆறுதல் பெறும் வகையறியாமல்
அரற்றுபவன்.

என்னைப் படைத்து மண்ணில்  அலையவிட்டு,
மறைந்திருந்து வேடிக்கை பார்க்கும்
அந்த 'அயோக்கியன்’ யார்?


யாரந்த அயோக்கியன்?!
========================================================================