அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 31 டிசம்பர், 2020

தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிசயம் நிகழ்த்திய பிரபல எழுத்தாளர்!

#எழுத்துகள், படைப்புகள் ஆகியவை வாசகர், இரு மகன்கள் என மூவருக்கே சொந்தம் என, எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அறிவித்துள்ளார்.

கி.ரா. என்றும் தாத்தா எனவும் அன்பாகப் பலரால் அழைக்கப்படும் கி.ராஜநாராயணன், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ஆம் ஆண்டு பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி. 1958ஆம் ஆண்டு முதல் இன்று வரை எழுதிக்கொண்டே இருக்கிறார்.

பள்ளிப் படிப்பை நிறைவு செய்யாவிட்டாலும் அவரது எழுத்தின் திறனால் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். இவரது இலக்கியத்துக்கு மரியாதை அளிக்கும் வகையில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசு ஊழியர் குடியிருப்பில் ஒரு வீட்டை அரசு ஒதுக்கியுள்ளது.

தற்போது 99 வயதுடைய கி.ரா. கூறியதாவது:

"எழுத்தாளர் கி.ரா. என்ற கி.ராஜநாராயணன் ஆகிய நான் சுய நினைவுடன் சொல்வது என்னவென்றால் எனது எழுத்துக்கள், படைப்புகள் எல்லாம் டிசம்பர் 26ஆம் தேதி முதல் சங்கர் என்ற புதுச்சேரி இளவேனில், எனது மூத்த மகன் திவாகரன், எனது இளைய மகன் பிரபி என்ற பிரபாகரன் ஆகிய மூன்று பேரையே சாரும். இவர்கள் மூவருமே எனது படைப்புகளுக்கு முழு உரிமை பெற்றவர்கள். இதை நான் முழு மனதுடன் எனது வாசகர்களுக்கும், பதிப்பாளர்களுக்கும் தெரிவிக்கிறேன்.

எனது படைப்புகளை வெளியிடும் பதிப்பாளர்களும், எனது படைப்புகளைத் திரைப்படங்களுக்குப் பயன்படுத்துவோரும் உரிய ராயல்டியை மூவருக்கும் அளிக்க வேண்டும். எனது படைப்புகள் மூலம் வரும் வருவாயின் ஒரு பகுதியைக் கொண்டு 'கரிசல் அறக்கட்டளை'யை நிறுவி எழுத்தாளர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் எனது பெயரில் பண முடிப்புடன் கூடிய விருதுகளை வழங்க வேண்டும்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாகத் தனது படைப்புகளின் உரிமை முதலில் தனது வாசகர் புதுவை இளவேனிலுக்கும், அதைத்தொடர்ந்து, தனது இரு மகன்களுக்கும் எழுத்தாளர் கி.ரா. அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.#

குறிப்பு:

கி.ரா.வின் வாசகரை மதிக்கும் அருங்குணம் மட்டுமல்ல, 99 வயதில், தெளிந்த அறிவாற்றலுடன் செயல்படும் அவரின் மனத்திட்பமும் நம்மை மிகுவியப்பில் ஆழ்த்துகிறது.

அவர் இன்னும் மிகப்பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழுக்குத் தொண்டு புரிந்திட மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

===============================================================

நன்றி: 'இந்து தமிழ் திசை' https://www.hindutamil.in/news/literature/616706-ki-rajanarayanan-announcement-on-royalty-about-his-books.html