அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 13 ஜூன், 2021

அவதாரங்களைத் துதிபாடி 'அபயக் குரல்' எழுப்புவோம்!!!

உலக நாடுகள் அனைத்துமே 'கொரோனா கொடுந்தொற்றை அழித்தொழிக்க அயராமல் முயன்றுகொண்டிருக்கின்றன. இதற்கிடையே.....

'மூன்றாவது அலை வரும். நான்காவதும் வரும்' என்றெல்லாம் ஆய்வாளர்கள் எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள். நான்காவதற்குப் பின்னரும் 'கொரோனா' அலை சுனாமியாக மாறி மனிதகுலத்தை நிலைகுலைய வைத்தலும் சாத்தியமாகக்கூடும்.

உலக நாடுகள் தம்மாலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் நிலையில், மக்கள், அரசுகளின் வழிகாட்டுதல்களின்படி முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைச் செயல்படுத்துவதோடு, அவர்கள் ஆற்றிட வேண்டிய மிக மிக மிக முக்கியக் கடமை ஒன்றும் உள்ளது.

நம்மினும் மேலான சக்தியாகக் கருதப்படும் கடவுளை நினைந்து அபயக்குரல் எழுப்பி மனித இனத்தைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொள்வதே அந்தக் கடமையாகும். அவ்வாறு வேண்டிக்கொள்வதில் ஓர் இடர்ப்பாடும் உள்ளது. அது.....

கடவுளைப் பொருத்தவரை, வேண்டுதல் வைப்பவர்களின் பாவபுண்ணியங்களைக் கணக்கிட்டுப் பார்த்துத்தான் முடிவெடுப்பார்["கடவுளுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு" -ஜக்கி] என்பதால் நம் கோரிக்கை நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். அதற்குள் கொரோனா, தன் கோரதாண்டவத்தை ஆடி முடித்துவிடும்.

அதைத் தடுத்து நிறுத்திட வழியே இல்லையா எனின், உண்டு.

அது எது?

'கடவுளின் மறு பிரதிகளான 'சத்குரு ஜக்கி வாசுதேவ்' சுவாமிகள்['சத்' -பரம்பொருள்; கடவுள்களுக்கெல்லாம் குரு]  'இராமகிருஷ்ண நித்தியானந்தா சுவாமிகள்', 'ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சுவாமிகள்', 'பால் தினகரன்'[சுவாமிகள்னு சொல்லலாமா?], 'சிவசங்கர் பாபா சுவாமிகள்' போன்ற 'அவதாரங்கள்' நம் கண் முன்னே நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்[கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் கடவுள்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை], கொரோனா அரக்கனை நிர்மூலமாக்கி மனித இனத்தைக் காப்பாற்றுவார்கள் என்று மனதார நம்பலாம். 

ஆகவே மக்களே, 

நீங்கள் வழக்கமாக, உங்களின் மனம் என்னும் கோயிலில் குடியேற்றி வழிபடும் அவதாரங்களைத் தியானித்து, "ஓ... நடமாடும் கடவுள்களே, நாடுதோறும் சென்று, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அத்தனை பேரையும், முகக் கவசம் அணியாமல்[கவசம் அணிந்தால், கொரோனா அவர்களை அடையாளம் காண்பது சாத்தியம் ஆகாமல் போகலாம்]  சந்தித்து, அவர்கள் நீடூழி வாழ ஆசி வழங்குவீர்" என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

வேண்டுதல் 100000000000% நிறைவேறும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகத்திற்கு இடமில்லை!

====================================================================================