அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 4 ஜூலை, 2021

கூமுட்டை 'பசி'பரமசிவத்தின் கூரு கெட்ட எட்டுக் கேள்விகள்!!![மீள்பதிவு]


***'அனைத்திற்கும் ‘மூலம்’ ஆக இருப்பவர் ஒரு கடவுள்' -ஆன்மிகர்.

கேள்வி:1 
பல கடவுளர்கள் இருந்து, அவர்களுக்குள் ஏற்பட்ட ஆதிக்கப் போட்டியாலும் யுகயுகங்களாக நடந்த பெரும் போராலும் ஏனையோர் அழிந்துவிட இவர் ஒருவர் மட்டுமே மிஞ்சினாரா?!


***‘வெளியில் உலா வரும் கோள்களும், நட்சத்திரங்களும் பிறவும் வடிவமைக்கப்பட்ட விதமும், உயிர்களின் விசித்திர உருவ அமைப்பும்,  ஒழுங்குக்கு உட்பட்ட இயற்கைப் பொருள்களின் இயக்கமும் அதிசயிக்கத்தக்கது. இந்த அதிசயம் தானாக நிகழ்ந்திருக்க முடியாது. இதை நிகழ்த்த ஒருவர் தேவை. அவரே கடவுள்.’ -இது, கடவுளை நம்புவோர் முன்வைக்கும் மிக முக்கிய வாதம்.

கேள்வி:2 
‘கடவுள் தோன்றியதோ, அல்லது எப்போதும் இருந்துகொண்டோ இருப்பதோகூட ஒர் அதிசயம்தான். இந்த அதிசயத்திற்குப் பின்னாலும் ஏதோ ஒன்று இருந்துதானே தீரும். அது எது?” என்று கேட்கப்படும் கேள்வியை அவர்கள் எப்போதுமே கண்டுகொள்வதில்லையே, அது ஏன்?


***‘கடவுள் இருக்கிறார்.’

கேள்வி:3 
இதற்கு மாறாக,‘படைப்புக்கான அணுக்கள்; உயர் பண்புக்கான அணுக்கள்; பல்வகை உணர்ச்சிகளுக்கான அணுக்கள்; நல்ல எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அணுக்கள்; தீய உணர்வுகளுக்குக் காரணமான அணுக்கள் என்றிப்படி வகை வகையான அணுக் கூட்டங்கள் வான்வெளியில் நிறைந்து கிடக்கின்றன. அவையே அனைத்திற்கும் மூல காரணம். அவை மிகவும் மேம்பட்ட அறிவு படைத்தவை[அறிவியல் பூர்வமாக ஒரு நாள் நிரூபிக்கப்படலாம்]; எப்போதும் இருப்பவை; இவை ஓர் ஒழுங்குக்கு உட்பட்டுத் தத்தம் கடமையைச் செய்கின்றன. இது இயற்கை’ என்றுகூட நாம் அனுமானம் செய்யலாம்.

இப்படி அனுமானிப்பது எவ்வகையிலும் தவறல்லதானே?


***'படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் புரிபவர் கடவுள்.' 

கேள்வி:4 
படைப்புத் தொழிலை அவர் எப்போது எப்படித் தொடங்கினார் என்பதற்கான விடை யாருக்கேனும் தெரிந்திருந்ததா? தெரிந்திருக்கிறதா?


***'தனிப் பெரும் சக்தியாக விளங்குபவர் கடவுள். இவர் படைத்தவற்றை வேறு எதுவும் எவரும் அழிக்கவோ மாற்றியமைக்கவோ முடியாது.' 

கேள்வி:5 
அப்புறம் எதற்குக் காத்தல் தொழில்?


***‘அதர்மம் தலைவிரித்தாடும்போது அதை அழிக்கவும் செய்வார் கடவுள்.’  

கேள்வி:6 
அன்பே உருவான, அறிவுக் கடலான சாந்த சொரூபியான இந்தக் கடவுளின் படைப்பில் அதர்மம் நுழைந்தது எவ்வாறு? அது உருவானது எப்படி? அது உருவாகும் போது கடவுள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாரா?


கேள்வி:7 விழிப்புப் பெற்ற கடவுள், அதர்மத்தை மட்டும் அழித்துவிட்டு ஆனந்தத் தாண்டவம் ஆட வேண்டியதுதானே! ஒட்டு மொத்த உலகையும் ஏன் அழிக்க வேண்டும்?


கேள்வி:8 ஒரு முறை அழிக்கப்பட்ட அதர்மம் மீண்டும் தோன்றித் தலைவிரித்தாடுவது எப்படி? கடவுளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு அதர்மம் பதுங்கியிருந்ததா? அந்த இடம் கடவுளின் காலடியா?

இன்னும் கேட்பதற்குரிய கேள்விகள் ஏராளமாய் உள்ளன. என்னுடைய ‘கூமுட்டை’[இது எனக்குப் பதிவுலக நண்பர் ஒருவர் வழங்கிய 'விருது']த் தனத்தை வெளிப்படுத்த இவை போதும் என்பதால் இத்துடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

குறிப்பு: இதைப் போன்று, நான் எழுதும் எந்தவொரு பதிவும் எவருடைய மனதையும் நோகடிப்பதற்காக அல்ல; வெறும் அனுமானத்தால் மட்டுமே நம்ப வைக்கப்பட்ட கடவுள் குறித்துக் கொஞ்சமேனும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே.
====================================================================================