அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

"ஓநாய்கள் ஜாக்கிறதை!"... கட்டிளம் கன்னியருக்கான விழிப்புணர்வுக் கதை!!


"சுருதி, உனக்காக ரயில் நிலையத்தில் காத்திருக்கேன். இன்னும் புறப்படலையா?" என்று அலைபேசியில் பதறினான் திலீபன்.

"அப்பாவும் அம்மாவும் டூர் போய்ட்டாங்க. புறப்பட்டுப் போய் அரை மணி நேரம் ஆச்சு. நானும் கிளம்பிட்டேன். நமக்கான டிரெயின் புறப்படுறதுக்கு ஒரு மணி நேரம் இருக்கில்லையா? வந்துடுவேன்" என்றாள் சுருதி. 

அலைபேசியை அணைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டு, புறப்படத் தயாரானபோது, பெற்றோர்களுக்கு அன்று அதிகாலையிலேயே  எழுதிய கடிதத்தைப் பீரோவின் உள்ளறையில் வைத்தது நினைவுக்கு வந்தது. அதை இன்னொரு முறை வாசித்துப் பார்க்க நினத்து, பீரோவைத்  திறந்தாள். 

அவள் எழுதி கடிதம் அங்கே இல்லை. அதற்குப் பதிலாக அப்பா ஒரு கடிதம் வைத்திருந்தார்.

அதிர்ச்சியுடன் அதைப் பிரித்து வாசித்தாள் சுருதி. 

'அன்பு மகளுக்கு,

தீர விசாரித்த வகையில் திலீபன் நல்லவன் அல்ல என்பது தெரிந்ததால், அவனுடன் பழக வேண்டாம் என்று வற்புறுத்திச் சொன்னோம். எங்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் நீ அவனைக் காதலித்ததோடு, அவனுடன் ஓடிப்போகவும் திட்டமிட்டிருப்பதை இன்று நீ எங்களுக்கு எழுதி வைத்த கடிதத்தின் மூலம் அறிந்தோம்.

உனக்கு நாங்கள் செய்துபோட்ட ஆறு பவுன் சங்கிலியோடு செல்ல இருக்கிறாய் என்பதையும் அந்தக் கடிதம் மூலமாகவே தெரிந்துகொண்டோம். 

சங்கிலியை விற்றால் கிடைக்கும் பணம் ஒரு மாதத்திற்கு உள்ளாகவே செலவாகிவிடும்.  அப்புறம் என்ன, அந்த அயோக்கியன், கையில் பைசா இல்லாமல் உன்னைத் தவிக்கவிட்டு ஓட்டம் பிடிப்பது நிச்சயம்.

ஓடிப்போகும் அவனுக்காகக் காத்திருப்பதையோ, தேடி அலைவதையோ மறந்தும் செய்துவிடாதே. காரணம்.....

அங்கிங்கெனாதபடி எங்கெல்லாமோ இரை தேடும் மனித ஓநாய்கள், தக்கப் பாதுகாப்பின்றித் தனித்துவரும் கன்னிப் பெண்களுக்காகக் காத்திருக்கின்றன. அந்த ஓநாய் மனிதர்களிடம் நீ சிக்கினால் சாறு பிழிந்த வெறும் சக்கையாக ஆவாய் என்பதை மனதில் பதிய வைத்துக்கொள்.

எதிர்வரும் இக்கட்டான சூழ்நிலையில், நீ இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஒன்று, நம் சொந்த ஊர் திரும்புவது. அப்படியொரு முடிவை நீ மேற்கொண்டால், பசியாறுவதற்கும், பயணச்சீட்டு எடுப்பதற்கும் சில ஆயிரம் ரூபாய்களை இந்தக் கடிதத்துடன் வைத்துள்ளோம். அவன் பார்வையில் படாமல் இதைப் பாதுகாப்பது உன் பொறுப்பு.

ஊர் திரும்புவதால் எதிர்கொள்ள வேண்டிய அவமானத்தைத் தாங்கும் மன உறுதி இல்லையென்றால் தற்கொலை புரியும் முடிவுக்குத் தள்ளப்படுவாய். ஆனால், அதை நிறைவேற்ற அதிகபட்சத் தைரியம் வேண்டும். 

நீ தைரியசாலிதான். இருப்பினும், தூக்கில் தொங்குவதற்குப் பதிலாகத் தூக்க மாத்திரைகள் விழுங்கி, ஆழ்ந்த மயக்கத்திலேயே உயிரைப் போக்கிக் கொள்ளலாம். அது வலி தெரியாத சாவு.

பின்னதையே நீ தேர்வு செய்திட அதிக வாய்ப்புள்ளது என்று நினைத்து, நிறையத் தூக்க மாத்திரைகளையும் இத்துடன் வைத்துள்ளோம். புறப்படும்போது மறவாமல் எடுத்துச் செல்லவும்.

தற்கொலை கோழைத்தனம் என்று நீ நினைத்தால், நம் வீடு திரும்ப வாய்ப்புள்ளது. நீ திரும்பி வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை... அல்ல, பேராசை.

அவனின் உண்மைச் சொரூபம் வெளியான பிறகேனும், எங்கள் ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவாய் என்று நம்புகிறோம். அந்த நம்பிக்கையுடன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். -இப்படிக்கு, பாசமிகு உன் தாயும் தந்தையும்'.

கலங்கிய கண்களுடன், அலைபேசியை உயிர்ப்பித்த சுருதி, "திலீபன், என்னை மறந்துடு" என்று சொல்லியதோடு, அதே அலைபேசியின் மூலம், "நான் அவனுடன் ஓடிப்போகவில்லை. உங்கள் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று தன்னை ஈன்றெடுத்தவர்களுக்கும் தகவல் சொன்னாள் சுருதி.

====================================================================================