அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 16 அக்டோபர், 2021

போற்றுதலுக்குரிய இங்கிலாந்து இளவரசரும் பரிதாபத்துக்குரிய 'பசி'பரமசிவமும்!!!


'அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களான ஜெஃப் பேசாஸ், எலான் மஸ்க், ரிச்சர்டு பிரான்சன் உள்ளிட்டோர் விண்வெளிக்குச் சுற்றுலாச் செல்லும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிவருகிறார்கள். மேலும், விண்வெளிச் சுற்றுலாவை வர்த்தக ரீதியில் மேம்படுத்துவதற்கான கடும் போட்டியில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில்.....

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "விண்வெளிச் சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பூமியை மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கேற்ற முறையில் மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்" என்று கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன[https://reader.magzter.com/reader/q7sxklnjxjtd4718gntaa76985117074396/769851#page/1].

இளவரசரின், விஞ்ஞானிகளுக்கான இந்த 'அறிவுறுத்தல்' பெரும் வரவேற்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறியப்படுகிறது.

இது போன்றதொரு அறிவுறுத்தலை, அல்ல, வேண்டுகோளை  முன்வைத்து அடியேன் ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

//மனிதர்களைச் சனி, சந்திரன், செவ்வாய் என்று பிற கோள்களில் குடியேற்றுவதற்கான முயற்சியில் அயராது ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளே, 

உங்களின் முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று, அயல் கிரகங்களில் மனிதர்களைக் குடியேற்றுவது சாத்தியமானால்.....

மக்களோடு கலந்து, கடவுள், ஆன்மா, பேய், பூதம், பிசாசு, சொர்க்கம், நரகம் என்றெல்லாம் கற்பனைக் கதைகளைப் பரப்பிப் பிழைப்பு நடத்துகிற போலி ஆன்மிகவாதிகளும் அங்கே குடியேறுவார்கள்; சிந்திக்கத் தெரியாத மக்களைச் சீரழிக்கும் கைங்கரியத்தை அங்கேயும் தொடர்வார்கள்.

அழகழகாய்த் தாடி மீசை வளர்த்து, புரியாத தத்துவம் பேசி, அப்பாவி மக்களைப் பித்தர்கள் ஆக்கி, ஆடிக் கார்களிலும் கோடி கோடி கோடி விலை மதிப்புள்ள ஹெலிக்காப்டர்களிலும் இங்குப் பவனி வரும்  நித்தியானந்தாக்களும் 'சத்'யானந்தாக்களும் அங்கே சென்ற பின்னரும் தாம் செய்யும் பித்தலாட்டங்களைக் கைவிடமாட்டார்கள்.

பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கிப் பதவி பெற்றுக் கோடி கோடியாய்ச் கொள்ளையடிக்கத் தெரிந்த கில்லாடிகள் அங்குச் சென்றாலும் நல்லவர்களாய் மாறப்போவதில்லை.

'போதும்' என்னும் மனம் இல்லாமல், "இன்னும் வேணும்...இன்னும் வேணும்" என்று வயாக்கராக்களையும் லேகியங்களையும் தேடி அலையும் காமாந்தகர் கூட்டம் அயல் கிரகத்திலும் திருந்தப்போவதில்லை.

ஆகவே விஞ்ஞானிகளே,

இவர்களையெல்லாம் திருத்துவதற்கு எவை எவை தேவையோ அவையவைகளை எல்லாம் கண்டுபிடித்து ஒட்டுமொத்த மனித இனத்தையும் முதலில் திருத்த முயலுங்கள்.

'அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக, மனித உடலைத் திருத்தலாம்; மனித மனங்களைத் திருத்திட வழியே இல்லை' என்பது உங்களின் பதிலாக இருக்குமேயானால்.....

பொறுத்திருங்கள்; மனிதர்கள் பட்டுத் திருந்தும்வரை காத்திருங்கள்.

திருந்தினால் மட்டுமே அயல் கிரகம் செல்லுவதற்கான ஆராய்ச்சிகளைத் தொடரலாம்.

இவர்கள் திருந்துவது சாத்தியமே இல்லையென்றால், அங்கெல்லாம் மனிதர்களைக் குடியேற்றுவதற்கான ஆய்வுகளை அறவே கைவிடுங்கள். 

தயக்கத்திற்கு இடம் தர வேண்டாம்.

இந்த மனிதர்களால் மண்ணுலகம் அசுத்தமடைந்தது போதும். மற்ற உலகங்களாவது மாசுபடாமலே இருக்கட்டும்.//[மண்ணுலக விஞ்ஞானிகளுக்கு ஒரு சராசரி மனிதனின் கோரிக்கை!!! https://kadavulinkadavul.blogspot.com/2021/04/blog-post_12.html]

                                                   *  *  *

இங்கிலாந்து இளவரசர் உலகோரால் நன்கு அறியப்பட்டவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கு அவர் சொன்ன அறிவுரையை ஊடகங்கள் பலவும் செய்தியாக வெளியிட்டுள்ளன. அடியேன் 'சாமானியன்' என்பதால் என் அறிவுறுத்தலை எந்தவொரு ஊடகமும் கண்டுகொள்ளவில்லை.

'பசி'பரமசிவமாகிய என்னுடைய இந்தப் பதிவை வாசித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

39[முப்பத்தொன்பது] மட்டுமே! ஹி... ஹி... ஹி!!!

================================================================