வியாழன், 6 ஜனவரி, 2022

ஓர் அந்தரங்கக் கேள்வியும் 'சத்குரு'வின் கிறங்கடிக்கும் பதிலும்!!!

"பல பேருடன் உடலுறவு கொண்டால் ஏற்படும் விளைவு என்ன?" என்றொரு கேள்வி நம்மிடம் கேட்கப்பட்டால், கேட்பவர் அழகான இளம் பெண்ணாகவும் இருந்தால் பதில் சொல்வதைத் தவிர்க்க முடியுமா என்ன? இதோ நம் பதில்.....

1.கண்ட கண்ட நோய்த்தொற்று, உடல் பலவீனமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட நிறையவே வாய்ப்புள்ளது.

2.நம்மோடு உறவில் இருப்பவரின் சொந்தபந்தங்களால் தாக்கப்படலாம்.

3.உடலுறவு இன்பத்திற்காக மட்டுமே நம்மை விரும்புபவர்களாக அந்தப் பலரும் இருந்திட வாய்ப்பில்லை. சிலர் அல்லது, கணிசமானவர்கள் நம்மிடமிருந்து பணம் பறிப்பவர்களாகவோ, நம்மை வைத்து வேறு வேறு அனுகூலங்களை அடைய நினைப்பவர்களாகவோ இருந்திட வாய்ப்புள்ளது.

4.அந்தப் பலரும் நம்மோடு மட்டுமே உறவு கொள்பவராக இல்லாமல், நம்மைப் போலவே பலருடன் அந்தரங்க சுகம் அனுபவிக்கும் அடங்காத வேட்கை உள்ளவர்களாக இருப்பர் என்பதால், இளமையும் அழகும் கவர்ச்சியும் கொண்டவரை அடைவதில் கடும் போட்டி ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் மோதல்கள் உருவாகி, குத்துவெட்டு, கொலை என்று விபரீத நிகழ்வுகள் நடந்திட வாய்ப்புள்ளது.

5.மனம் அலைபாயும். கட்டுப்படுத்தி அன்றாடக் கடமைகளைச் செய்து முடிப்பதும், ஒரு குறிக்கோளுடன் உழைத்து முன்னேறுவதும் சாத்தியப்படாமலே போகலாம்.

6.செத்தொழியும்வரை, "இது போதும்" என்னும் மனநிறைவு பெறுதல் சாத்தியப்படாமல் போவதால், நிம்மதியிழந்து காலம் தள்ள வேண்டியிருக்கும்.

7.உறவு கொள்பவர்களின் குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகி, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவதோடு, பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகும்.

8.ஒவ்வொரு குடும்பத்திலும் பல பேருடன் உடலுறவு கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், குடும்பக் கட்டுப்பாடுகள் சிதறுண்டு, ஒட்டுமொத்தச் சமுதாயமே சீர்குலையும் என்பது உறுதி.

9.பலருடன் உடலுறவு கொள்ள வாய்ப்பு அமையாத துரதிருஷ்டசாலிகளின் எண்ணிக்கை அதிகரித்தால், ஊர்தோறும் தெருக்கள்தோறும் கூட்டம் கூட்டமாகப் பைத்தியங்கள் அலைவது தவிர்க்க இயலாதது.

10.குடும்பஸ்தர்களைக் காட்டிலும், தாடி மீசை வளர்த்துச் சாமியார் ஆனவர்களுக்குப் பல பேர் உறவு மிக எளிதாக வாய்ப்பதால், இந்த மண்ணில் சாமியார்களி நடமாட்டம் அதிகரிக்கும்.

11.எந்தவித முயற்சியும் செய்யாமலே, இதற்கான வாய்ப்பு சிலருக்கு அமைதல்கூடும். அது கண்டு, பொறாமையால் வெந்து புழுங்கி, நடைப்பிணங்களாய் வாழ்ந்து மடிவது வழக்கமான நிகழ்வுகளாக அமையக்கூடும்.

ஆக.....

மேற்கண்டவறு, நம்மால் மிக எளிதாகப் பதில் தரக்கூடிய இந்தக் கேள்விக்கு, வழக்கம்போல, புரியாத பல தத்துவங்கள் சொல்லி கூடியிருப்போரைக் கிறங்கடித்திருக்கிறார் உலகிலுள்ள அத்தனைக் கடவுள்களுக்கும் குருவான[சத்+குரு] ஜக்கி வாசுதேவ்.

'உறங்க அடித்திருக்கிறார்' என்று சொல்ல நினைத்தது தவறுதலாக, 'கிறங்கடித்திருக்கிறார்' என்று பதிவாகிவிட்டது. ஹி... ஹி... ஹி!!!

"சத்குருவின் அந்தரங்கத் தத்துவங்கள் அற்புதமானவை. அவை எனக்கு மிக எளிதாகப் புரிகின்றன" என்று சொல்பவர் உளரெனின், இன்னொரு 'சத்குரு' ஆவதற்கான முழுத் தகுதியும் அவருக்கு உள்ளது என்று உறுதிபடச் சொல்லலாம்.

அவர் இன்றே, முகம் முழுக்க அழகான 'தாடிமீசை' வளர்த்து, தலைப்பாகை உள்ளிட்ட ஆடம்பரமான உடை உடுத்து, ஆங்கிலத்தில் பேசவும், பேச்சின் நடுநடுவே லேசாக உடம்பு குலுக்கி ''ஜோக்'குகள்[செக்ஸ் ஜோக் உட்பட] சொல்லி, "ஹெ... ஹெ... ஹெ" என்று சிரிக்கவும் பயிற்சி எடுக்கலாம்.

அன்னார்க்கு நம் வாழ்த்துகள்!


***ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல், மனம்போன போக்கில் தெரிந்ததையெல்லாம் பேசி, ஒரு பெரிய ஞானி போல் வேடம் புனைகிற இந்த ஜக்கியிடம் எதை எதிர்பார்த்து இந்தப் படித்த முட்டாள்கள் கூட்டம் கூடுகிறார்கள்?

பிரபல ஆன்மிகவாதி என்று பெயரெடுத்துவிட்ட இவரின் ஆங்கில உரையைக் கேட்கப்போவதைப் பெருமையாகக் கருதுகிறார்களா? 

'இவருடன் தொடர்புடைய எல்லாமே இவராலேயே உருவாக்கப்படும் போலி நிகழ்வுகளா?' என்றெழும் சந்தேகத்தையும் தவிர்க்க இயலவில்லை.

எது எப்படியோ, அதிர்ஷ்டக் காற்று இவரிருக்கும் திசையில் பலமாக வீசிக்கொண்டே இருக்கிறது என்பதில் கொஞ்சமும் சந்தேகத்திற்கு இடமில்லை!
==========================================================================