அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 7 அக்டோபர், 2022

இஸ்லாமியரை விரட்டிவிட்டால் இந்தியா 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடுமா?!

தசரா பண்டிகையின்போது[கர்னாடகாவில்], 'ஜெய் ஸ்ரீராம்' போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், புராதனச் சின்னமான மஹ்முத் கவான் மதரஸாவிற்குள் நேற்று அத்துமீறி நுழைந்து பூஜை செய்ததாக ஒன்பது பேர் மீது பிடார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முஸ்லிம் சமூகத்தினர் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். நிலைமை கட்டுக்குள் உள்ளதாகக் கூடுதல் எஸ்பி மகேஷ் மேகன்னாவர் கூறியுள்ளார்[டைம்ஸ் நவ் டிஜிட்டல் - சில மணிநேரத்திற்கு முன்பு].

'மஹ்மூத் கவான் மஸ்ஜித் மற்றும் மதரஸா 1460களில் கட்டப்பட்டது மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கீழ் வருகிறது.'

சமீபத்திய மாதங்களில், ஹலால் இறைச்சி விற்பனையைத் தடை செய்தல் வேண்டும், மாநிலம் முழுவதும் உள்ள கோயில் கண்காட்சிகளில் இஸ்லாமிய வியாபாரிகளை அனுமதித்தல் கூடாது போன்ற இவர்களின் கோரிக்கைகளால் வகுப்புவாதப் பதட்டங்கள் கர்னாடகாவில் அதிகரித்து வருகின்றன என்பது பலராலும் அறியப்பட்டதே.

இப்படியொரு விரும்பத்தகாத சூழ்நிலையில்தான், ஆதிவாசிக் கும்பல் ஒன்று மதரஸாவுக்குள் அத்துமீறி நுழைந்து பூஜை செய்திருக்கிறது.

இவர்கள் அங்கே எதற்குப் பூஜை செய்தார்கள்?

மதரஸாவைத் தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கவா, அல்லது, இஸ்லாமியரால் வழிபடப்படும் 'அல்லாவை'யே இந்துக் கடவுளாக மதம் மாறச் செய்யவா?

இப்படித் தொடர்ந்து அவர்களுக்குச் சொந்தமானவற்றை இவர்கள் ஆக்கிரமிப்புச் செய்தால், ஒரு கட்டத்தில் அவர்கள் இந்த நாட்டைவிட்டே ஓடிவிடுவார்கள்; இந்த இந்தியா என்னும் நாடு முழுமையான 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடும் என்று நம்புகிறார்களா?

அப்படி நம்பினால், அதைப் போன்றதொரு முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை.

இஸ்லாமியர்கள், வெறும் மதம் சார்ந்தவர்கள் மட்டுமல்ல; பல்வேறு இனங்களை உள்ளடக்கிய இந்த நாட்டில் தமக்கென ஏதேனும் ஒரு மொழிச் சார்பும் இனச்சார்பும் கொண்டவர்கள்; இந்தியக் குடிமக்களும்கூட.

இந்தச் சிறுபான்மை மதத்தவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறிவிட்டால் இது இந்து நாடு ஆகிவிடாது.

கர்னாடகாவில் வாழ்பவர்கள் கன்னடர்கள் மட்டுமல்ல; அவர்கள் இந்தியர்கள். அங்கு வாழும் அத்தனை பேரும் இந்துக்கள் அல்ல.

தமிழ்நாட்டில் வாழ்கிற அத்தனை பேரு தமிழர்களே, இஸ்லாம் மதச் சார்புள்ளவர்கள் உட்பட. இந்துமதச் சார்புள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதால் இது இந்து மாநிலம் ஆகிவிடாது.

ஏனைய மாநிலங்களுக்கும் இந்நிலை பொருந்தும்.

ஆகவே வெறியர்களே,

பல மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியா இனியும் இந்தியாவாகவே இருக்குமே தவிர, நீங்கள் கனவு காண்பது போல 'இந்து சாம்ராஜ்ஜியம்' ஆகிவிடாது.

எனவே, இம்மாதிரியான அநாகரிகச் செயலில் இனியும் ஈடுபட வேண்டாம். அது உங்களின் மதத்திற்கு ஆக்கம் தருவதற்குப் பதிலாக அழிவை உண்டுபண்ணும் என்பதை மனதில் அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள்!

===================================================================

https://www.msn.com/en-in/sports/other/bjp-promoting-such-activity-to-demean-muslims-owaisi-after-mob-offers-puja-at-mahmud-gawan-madrasa-in-bidar/ar-AA12GBlZ?ocid=msedgdhp&pc=U531&cvid=53d06564e3b34538bc3f73362d956cab