திங்கள், 27 மார்ச், 2023

அன்றொரு நாள்[மட்டும்?] நான் ஆண்மகனாக இல்லை!!![உண்மை நிகழ்வு + 10% மெருகூட்டல்]

 

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்.....

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை; கொடுமையிலும் கொடுமை.

அவள் கடத்தப்பட்டபோது ஒரு மாயாஜாலம் போல் நூற்றுக்கணக்கானோர் கூடிவிட்டார்கள். 

வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும், பார்த்ததைச் சுவையான கதையாக்கிக் காண்போரிடமெல்லாம் சொல்லிச் சொல்லிக் குதூகலிக்கவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்கமாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். கணப்பொழுதில் அவர் காணாமல்போயிருந்தார்.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு அங்கே நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுங்கன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தத்தை எடுத்தியம்பினார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங்கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” -சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர்; “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

சே, என்ன மனிதர்கள்!

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூற்றுக்கணக்கான ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்களின் மிக முக்கிய அடையாளம் ஆண்மை. அது பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமானதல்ல, ஆபத்துக் காலங்களில் அவளின் ‘மானம்’ காக்கவும் பயன்பட வேண்டும். அதுவே உண்மையான ஆண்மை.

ஆண்மையுள்ள ஆண்கள் லட்சத்திற்குப் பத்துப்பேர் தேறுவார்களா?” -மெலிதான தொனியில் நான் முணுமுணுத்தபோது, “இங்கே பத்தோடு பதினொன்றாக நடந்ததை வேடிக்கை பார்த்த நீ அந்தப் பத்தில் ஒருவன் அல்ல. ஆகவே, நீ ஆண்மை இல்லாதவன்தானே?” என்று எனக்கு மிக அருகிலிருந்து யாரோ கேட்பதுபோலிருந்தது.

சுற்றுமுற்றும் பார்வையை ஓட்டினேன்.

யாருமே இல்லை. அது மனசாட்சியின் குரல் என்பது புரிந்தது.

நாம் தப்புச் செய்யும்போது மட்டும் தவறாம கேள்வி கேட்டு இது மிரட்டும். இதுக்குப் பயந்தா நாம் நினைக்கிறபடியெல்லாம் வாழ முடியாதுன்னு நான் சொல்லுறேன். சரிதானுங்களே?

ஹி... ஹி... ஹி!!!
===========================================================================================