பக்கங்கள்

செவ்வாய், 11 ஜூலை, 2023

‘மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்’! கணவன் அமைவது?

‘மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்’ என்பது ஒரு வழக்கு மொழி. ஆடவர்களைப் பொருத்தவரை ஏறத்தாழ இது சரியாக இருக்கலாம்.

இதைப் பெண்ணினத்தின் பெருமை பேசும் மொழி என்றும் சொல்லலாம்.

இதைப் போல, ஆணின் பெருந்தன்மையைப் போற்றும் மொழி எதுவும் வழக்கில் இல்லை என்றே தோன்றுகிறது[தேடுபொறியில் தேடியதில் ஏமாற்றமே மிஞ்சியது].


அன்று முதல் இன்றுவரை ஆடவர்கள் பெண்ணுக்கு இழைக்கும் கொடுமைகள் கணக்கில் அடங்காதவை என்பதால்தான் இது இல்லாமல்போனதற்கான காரணமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.


கணவன் மனைவியருக்கிடையே தகராறு ஏற்பட்டு அது ஒரு முடிவுக்கு வராத நிலையில், ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் கைக்குக் கிடைக்கும் ஆயுதத்தால் அவளை அவன் மண்டையில் அடிக்க, அவள் தலை சிதறிச் செத்துப்போவதும் உண்டு[இது தண்டனைக்குரிய குற்றச் செயல்தான் என்றாலும், உணர்ச்சிவசப்பட்டுச் செய்த குற்றம் என்ற வகையில் நீதிமன்றம் இதைச் செய்வோருக்குத் தண்டனைக் குறைப்புச் செய்வதுண்டு].


இது விசயத்தில் கற்பனைக்கெட்டாத விபரீதங்களும் நிகழ்வதுண்டு என்பதற்குப் பின்வரும் சம்பவங்கள் எடுத்துக்காட்டாகும்.


*தனக்குப் பிடிக்காத மனைவியை நடுத்தெருவில், நான்கு பேர் முன்னிலையில், அவளின் கழுத்தை அறுத்தார் கணவர் என்பது செய்தி[https://kamadenu.hindutamil.in/national/suspicious-of-his-wifes-behavior-the-husband-killed-her-by-slitting-her-throat] //26 ஜூன், 2023, வீதியில் அயலவர் முன்னிலையில் ... கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த..//


‘கழுத்திலிருந்து பெருக்கெடுத்த ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தார்’ என்பது பிறிதொரு ஊடகச் செய்தி.


*கீழ்வருவது ஓர் அண்மை நிகழ்வு. அமெரிக்காவில் மெக்சிகோ நகரில் நடந்தது. மனைவியின் மண்டையைப் பிளந்து மூளையை எடுத்து ருசித்து[?] சாப்பிட்டிருக்கிறான் ஒருவன். பேய் சொன்னதால் அப்படிச் செய்ததாக அவன் போலீசிடம் பொய் சொல்லியிருக்கிறான். தண்டனையிலிருந்து தப்புவதற்கான முயற்சி அது[இவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருக்கலாம் என்ற குறிப்பும் உள்ளது]. https://ibctamilnadu.com/article/man-killed-his-wife-and-consumed-her-brain-1688794275//


*அடுத்து இடம்பெறுவது, நம் புண்ணியப் பூமியில் நடந்த பயங்கரம்.


தன் மனைவி தூக்குமாட்டிக்கொள்ளும்போது அவரைத் தடுக்காமல் அதைக் காணொளியாகப் பதிவுசெய்திருக்கிறான் ஒரு தறுதலைக் கணவன்; அந்தக் காணொலியைக் குடும்பத்தாருடனும் பகிர்ந்துள்ளான். இந்தியாவின் கான்பூர் நகரில் இந்தச் சம்பவம் நடந்தது[https://www.tamilmurasu.com.sg/india/story20221027-98614].


*பின் வருவது ஆந்திராவில் அரங்கேறிய ஒரு கொடூர நிகழ்வு..


வழக்குரைஞர் ஒருவர், தன் மனைவியை 11 ஆண்டுகளாக, இருட்டறையில் அடைத்து வைத்து, அடித்தும் உதைத்தும் துன்புறுத்தியுள்ளார்.


*பிடிக்காத மனைவியை நிர்வாணமாக்கி, கட்டிப்போட்டு, உடம்பெங்கும் மிளகாய்த் தூளைத் தடவி, மேலே அட்டையை ஊரவிட்டுக் கொடுமைப்படுத்தினான் ஒரு கணவன் என்பது இன்னுமொரு கொடூரச் சம்பவம்[https://ibctamil.com/article/husband-tortures-wife-by-stripping-her-naked-167795983].


*மனைவி ஆண் குழந்தை பெறவில்லை என்பதற்காக 1500 ஊசிகள் போட்டு மனைவியைக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கினான் ஒரு அயோக்கியன் என்பதும் உண்மை நிகழ்வுதான்[https://www.galatta.com/tamil-nadu-news/would-one-do-all-this-to-have-a-baby-boy-husband-actions-that-shake/].


*கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ஓர் ஊரில், நீதிமன்றப் பெண் ஊழியரைத் தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கட்டிப்போட்டு, வாயையும் கட்டிச் சித்தரவதை செய்து, அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான்[https://www.kalaignarseithigal.com/tamilnadu/2020/09/19/psycho-husband-hysterical-who-tried-to-kill-wife-in-kanyakumari].


*மனைவி மேல் உள்ள கோபத்தைத் தீர்த்துக்கொள்ளத் தன் மகனையே பல்வேறு வழிகளில் துன்புறுத்தியிருக்கிறான் ஒரு கல்நெஞ்சன். 20 மாதம்போல, அந்தப் பிஞ்சுக் குழந்தையை, நாயை அடைத்து வைக்கும் இரும்புக் கூட்டிற்குள் வைத்துப் பூட்டி, அதைப் புகைப்படமாக எடுத்து, விவாகரத்து பெற்றுச்சென்ற மனைவிக்கு அனுப்பினானாம் அவன்[https://www.indiaglitz.com/the-father-who-tortured-the-baby-in-china-tamil-news-234458].