சனி, 17 ஆகஸ்ட், 2024

‘தமிழ்நாடு ரயில்வே திட்டங்கள்'... 1ரூ தராமல் ஓர் 1000ரூ தானம் செய்த தர்மப்பிரபு மோடி!!!

#தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் 1,000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. மாமல்லபுரம்- கடலூர் கடற்கரைப் பாதைக்கு 25 கோடி ரூபாய் முன்பு ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறார் பிரதமர் மோடி[https://news7tamil.live/only-rs-1000-allocation-for-tamilnadu-rail-projects-dr-balu-shocking-information.html].

கலியுக அவதாரப் புருஷனும் உலக மகா ‘யோகி’யும் இந்தப் புண்ணியப் பூமியின் பிதாமகனும் பிரதமரும் ஆன நரேந்திர மோடிக்குத் ‘திமுக’ கூட்டணிக் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழர் நலம் நாடும் பிற அரசியல் கட்சியினரும் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்கள்; போராட்டமும் நடத்தவிருக்கிறார்கள்.

மோடி வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது, தமிழர்கள் 2024 தேர்தலில் அவரைப்[பாஜக] படுதோல்வி அடையச் செய்ததற்குப் பழிவாங்கும் செயல் என்று காரணமும் சொல்லியிருக்கிறார்கள்.

உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.

மோடி மட்டுமல்ல, மானமும் ரோஷமும் உள்ள எந்தப் பெரிய தலைவராயினும் தம்மை அவமானப்படுத்தியவர்களைப் பழிவாங்கவே செய்வார்கள்.

ஆனாலும், மோடிக்கு ரொம்பப் பெரிய மனது. அவர் நினைத்திருந்தால்.....

ரூ1000 வழங்காமல் ஒரே ஒரு ஒற்றை ரூபாய்த் தாளை விட்டெறிந்திருக்கலாம். அவரோ, துரோகம் புரிந்த தமிழர்களை மன்னித்து, ஆயிரம் ரூபாயைத் தானமாக வழங்கிக் கௌரவித்திருக்கிறார்; ‘சிங்கிள்’ பைசாவைக்கூட தமிழ்நாட்டின் திட்டங்களுக்காகக் கொடுத்திருக்கலாம். அந்த இழிசெயலை அவர் செய்யவில்லை.

மோடிக்கு எதிரானதொரு போராட்டத்தை அறிவித்திருக்கும் தமிழ்நாடு கட்சியினருக்கு நாம் வழங்க விரும்பும் ‘புத்திமதி’ ஒன்றுள்ளது.

அது.....

“உங்களின் போராட்டம் வெறும் அறிவிப்போடு முடியட்டும். ‘பின்வாங்கமாட்டோம்; மோடியின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடியே தீருவோம்’ என்று நீங்கள் முடிவெடுத்தால்.....

படைப் பலம், பணப் பலம், அதிகாரப் பலம் என்று ஒரு பிரதமருக்கு உரிய அத்தனைத் தேவைகளையும் பெற்றுள்ள மோடியின் ஒரு சுட்டு விரலைக்கூட உங்களால் அசைக்க இயலாது!

கொஞ்சமே கொஞ்சம் அசிங்கமாகச் சொன்னால், அவரிடமிருந்து உங்களால் எந்தவொன்றையும் 'பிடுங்க' முடியாது!!"