வியாழன், 29 மே, 2025

மோடிஜியின் வீதிவலம்[Roadshow]... அடடா, கண்கொள்ளாக் காட்சி!!!

ரசியல் கட்சித் தலைவர்கள் அவ்வப்போது, அல்லது எப்போதாவது[குறிப்பாகத் தேர்தல் நடக்கவிருக்கும் நேரங்களில்], மேற்கூரை இல்லாத வாகனத்தில் நின்றவாறு[குடுகுடு கிழமாக இருந்தால் உயரமான இருக்கையில் உட்கார்ந்தவாறு], சாலையின் இருபுறமும் திரண்டு நின்று கொடியசைத்தும், கையசைத்தும், வாகனத்தின் மீது பூக்களை அள்ளி வீசியும் “தலைவர் வாழ்க” என்று முழக்கமிடும் தொண்டர்களை[கூலிக்குக் கும்மியடிக்கும் கூட்டம்)ப் பார்த்துப் புன்னகை தவழும் வதனத்துடன் கையசைத்துச் செல்வதைத்தான் வீதிவலம் என்பார்கள்.

சற்று முன்னர், நம் பரம்பரை எதிரி பாகிஸ்தான்காரனை மண்டியிட வைத்த நம் பிரதமர் மோடிஜி அவர்கள், பாட்னா நகரில் நடத்திய வீதியுலா[Roadshow] ஒன்றைக் கண்டு  இன்புறும் நல்வாய்ப்புக் கிட்டியது.

அதே நேரத்தில்.....

கறுப்புச் சட்டை உடுத்த பாதுகாப்புக் காவலர்கள், சாலையின் இருபுறமும் குழுமியிருந்த தொண்டர்களைச் சல்லடைப் பார்வையால் உற்று உற்றுப் பார்த்தவாறே கைகளில் துப்பாக்கி ஏந்திவர, காருக்குள் அமர்ந்த(பதுங்கிய?) கோலத்தில் தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்தவாறு மோடிஜி பவனி வந்த காட்சி அடியேனின் அடி நெஞ்சை உறுத்தியது.

“இதற்குப் பெயர் வீதிவலமா? இத்தனை உயிர்ப் பயத்துடன் ஊர்வலம் வருவது[வாக்குக்காக] அவசியமா?” என்று உள்மனதுக்குள் கேள்விகள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.

எனினும்.....

அடுத்தடுத்து வரும் தேர்தல்களில் மோடி கட்சியே வெற்றிபெறுதல் வேண்டும் என்றும், பாகிஸ்தானைச் வைத்துச் செய்தது போலவே சீனாவையும்[நம்முடன் மோதினால்] துவம்சம் செய்ய அவருடைய ஆட்சியே நீடிக்க வேண்டும் என்றும் ராமச்சந்திர மூர்த்தியை வாழ்த்திப் பிரார்த்தனை செய்தேன்!

வெல்க மோடிஜி! வாழ்க பாரத்!!