சனி, 12 ஜூலை, 2025

பொதுமக்களாம் பொதுமக்கள், புத்தி கெட்ட மக்குகள்!!!

‘பொதுமக்கள்’ என்றாலே அத்தனைப்பேரும் உத்தமர்கள் என்னும் தவறானதொரு நம்பிக்கையை உருவாக்கி வைத்திருப்பவர்களே இந்தப் பொதுமக்கள்தான்.

தத்தம் வீட்டுக் கழிவுகளைச் சேகரித்து வைத்து, நகராட்சிக்காரன்[மாநகராட்சி&ஊராட்சி] அனுப்பும் குப்பை வண்டியில் சேர்க்காமல், பக்கத்து அல்லது எதிர்வீட்டுக்காரன் வாசலில் வீசுபவர்கள் இந்தப் பொதுமக்கள்தான்[வாய்த்தகராறு, மோதல், அடிதடியெல்லாம் நிகழ்ந்து காவல்துறையிடம் புகார் அளிப்பது என்று நீளும்]. 

பொதுப் பாதையைச் சீர் செய்வது, ஊர்ப் பொதுவிலுள்ள சிறு சிறு நீர்த்தேக்கங்களில் தூர் வாருவது, மழை நீர் தேங்காமல் தெருக்களைச் சமப்படுத்துவது போன்ற பொதுப்பணிகளை ஒருங்கிணைந்து செய்து முடிக்காமல் கூட்டம் சேர்த்து, அரசைக் கண்டித்துப் போக்குவரத்து மிகுந்த சாலைகளில் மறியல் செய்பவர்கள்தான் இந்த மாண்புமிகு பொதுமக்கள்.

தொலைபேசியில் தொடர்பு கொள்ளல், மாதம் ஒரு முறையேனும் ஒன்றுகூடி[அந்தந்தப் பகுதி மக்கள்]க் கலந்தாலோசித்தல் போன்ற முறையான நடவடிக்கைகள் மூலம், வீடு புகுந்து திருடுதல், சிறுவர் சிறுமிகளைக் கடத்துதல் போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம். மாறாக, அரசின் மீது குற்றம் சுமத்துவதையே வழக்கமாக்கியுள்ளவர்கள் மதிப்பிற்குரிய பொதுமக்கள். 

“நமக்கேன் வம்பு?” என்று ஒதுங்கியிராமல், சிறு சிறு குற்றங்கள் செய்வோரைக் கண்டித்துத் திருத்தாததால்தான் ரவுடிகள், விபச்சாரத் தரகர்கள், கடத்தல்காரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று பெரும் பெரும் குற்றங்களைச் செய்பவர்கள் உருவாகிறார்கள். பொதுமக்களின் அலட்சியப் போக்கே இதற்கான முக்கியக் காரணமாக உள்ளது.

உரிய தகுதியை வளர்த்துக்கொண்டு தமக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்காமல், ஊழல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பவர்கள் சனநாயகத்தின் முதுகெலும்பான பொதுமக்கள்தான்.

தேர்தல்களில், அற்பத் தொகையான ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் வாக்குகளை விற்று, அயோக்கியர்கள் ஆட்சிபீடம் ஏற வழிவகுப்பவர்களும் பொதுமக்களே.

கோயில் வாசல்களில் வரிசைகட்டி அமர்ந்து கையேந்தும் பிச்சைக்கார்களுக்கு ரூபாய் ஐந்தோ பத்தோ போட மனமில்லாமல், கோரிக்கை நிறைவேறக் கோயில் உண்டியலிலும் அர்ச்சகனின் தட்டிலும் காணிக்கை செலுத்தும் கபோதிகள் இந்தப் பொதுமக்கள்[இன்னும் இவர்கள் செய்யும் அழும்புகள் ஏராளம்].

பொதுமக்களாம் பொதுமக்கள். சமூக ஒழுங்கைச் சீர்குலைக்கும் பொல்லாத பொதுமக்கள்!